அரபு எமிரேட்ஸில் திருமணச் சட்டத்தில் அதிரடி மாற்றம்!
மேற்காசிய நாடான, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மொத்தம் 7 எமிரேட்ஸ் இடம் பெற்றுள்ளன. அவை, அபுதாபி, அஜ்மன், துபாய், ஃபுஜைரா, ராஸ் அல் கைமா, ஷார்ஜா, உம் அல் குவைன் ஆகியவை ஆகும். அரபு நாடுகளில் பொதுவாக சட்டங்கள் மிகக் கடுமையாக இருக்கும். மீறினால் தண்டனைகளும் கெடுபிடியாக தான் அளிக்கப்படும்.இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் திருமணம் தொடர்பான சட்ட விதிகளில் மாற்றங்கள் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. அதில் மிக முக்கியமானது விருப்பத்திற்கு ஏற்ப முடிவெடுத்தல். அதாவது, பெண்கள் திருமணம் செய்து கொள்ள குறைந்தபட்ச வயது 18. 18 வயதை பூர்த்தி செய்துவிட்டால் பெண்கள் விரும்பும் யாரையும் திருமணம் செய்து கொள்ளலாம். ஒருவேளை பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாலும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப திருமணம் செய்து கொள்வதில் தடை ஏதும் இல்லை. இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுகி பெண்கள் நீதி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமண விஷயத்தில் பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ அதிகாரம் செலுத்தக் கூடாது. திருமணம் செய்து கொள்ளும் ஆணிற்கும், பெண்ணிற்கும் இடையிலான வயது வித்தியாசம் 30க்கும் மேல் இருந்தால் உடனே நீதிமன்றத்தை அணுக வேண்டும். நீதிமன்ற அனுமதி உடன் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். நிச்சயதார்த்தம் என்பது பெண்ணின் முழு சம்மதத்துடன் தான் நடைபெற வேண்டும். திருமணத்திற்கான உறுதி அளிக்கப்பட்ட பின்னரே நிச்சயதார்த்தம் செய்ய வேண்டும்.
அதேசமயம் நிச்சயதார்த்தம் செய்துவிட்டாலே திருமணம் ஆகிவிட்டது என்று கருதக் கூடாது. பரிசுப் பொருட்கள் தர வேண்டும் என்ற கட்டுப்பாட்டின் கீழ் திருமணம் உறுதி செய்யப்பட்டால் அந்த பரிசை திருப்பி தந்துவிட வேண்டும். இது 25 ஆயிரம் திர்ஹாம்களுக்கு மேல் மதிப்பு கொண்ட பரிசு பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்தால், அந்த குழந்தைகளை ஒருமித்த சம்மதத்தின் பேரில் புதிய வாழ்க்கையில் வைத்து கொள்ள உரிமை உண்டு.
இந்த குழந்தைகளின் பொருளாதார விஷயங்களை பெண்ணின் கணவர் தான் பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு பல்வேறு திருத்தங்கள் திருமண சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஏப்ரல் 15ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.