For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

உலக சிட்டுக் குருவிகள் தினம்!!

08:11 AM Mar 20, 2014 IST | admin
உலக சிட்டுக் குருவிகள் தினம்
Advertisement

ழிவின் விளிம்பில் இருந்து வரும் சிட்டுக்குருவிகன் இனத்தை பாதுகாக்க உலகம் முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் முயற்சி எடுத்து வருகிறார்கள். இதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் மார்ச் 20 ஆம் தேதி உலகெங்கும் சிட்டுக்குருவிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

Advertisement

சிட்டு குருவி - இன்றைய இளம் தலைமுறையினருக்கு இவைகள் குறித்து எந்தளவு தெரியும் என்று தெரியவில்லை. நமது பழைய தமிழர் பண்பாட்டில் கூட்டு குடும்பங்களுக்கு முக்கியத்துவம் இருந்தது. ஒரே வீட்டில் 5 முதல் 10 சகோதரர்கள் வரை குடும்பமாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். அவர்கள் வாழ்வதற்காக விசாலமான வீடு இருக்கும். நல்ல காற்றோட்டத்துடன் கட்டப்பட்டிருந்த வீடுகளில் தாழ்வாரங்கள், பெரிய ஜன்னல் வைக்கப்பட்டிருக்கும். அதன் இடுக்குகள், தாழ்வாரத்தில் சிட்டு குருவிகள் கூடு கட்டி மனிதர்களோடு வாழ்ந்து வரும். வீடுகளில் சிட்டுக்குருவிகள் கூடுகட்டினால், அந்த வீடுகளில் செல்வம் கொழிக்கும் என்ற நம்பிக்கையும், மக்கள் மத்தியில் உண்டு.

Advertisement

அதிலும் புதியதாக திருமணமானவர்கள் குடியிருக்கும் வீட்டில் சிட்டு குருவி கூடு கட்டினால், இந்த வீட்டில் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது. கூட்டு குடும்பத்தில் முதியவராக இருப்பவர் தினமும் காலையில் அரிசி, கோதுமை கேழ்வரகு உள்ளிட்ட உணவு தானியங்களை கொண்டுவந்தால், அதை பார்த்ததும் சிறகடித்து பறந்து வரும் சிட்டு குருவிகள் மகிழ்ச்சியாக உண்ணும்.இப்படி மக்களோடு மக்களாக வாழ்ந்த சிட்டு குருவி இனம் தற்போது அடையாளம் தெரியாத வகையில் அழிந்து வருகிறது என்பதை உரக்கச் சொல்லவே இத்தினம்

இந்த குருவிகளில் சிட்டுக்குருவி, தூக்கணாங்குருவி, கருங்குருவி, படை குருவி போன்ற பல்வேறு வகைகள் உள்ளன. குருவிகளின் அழிவிற்கு தானிய உணவு பற்றாக்குறை மற்றும் பயிர்களை காப்பாற்ற பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் காரணமாகும்.இன்று வீடு கட்டுவதற்காக வயல் வெளிகள், வனங்களை அழித்து விட்டோம். இதனால் குருவிகள் கூடு கட்ட இடமின்றி போய் விட்டது. உலகம் முழுவதும் வெப்ப மண்டலமாக மாறியதாலும், செல்போன் டவர்களில் எழும் கதிர்வீச்சாலும் குருவிகளுடன் சேர்த்து, 226 பறவையினங்களும் அழிந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இதையடுத்து சிட்டுக் குருவிகளை பாதுகாக்கும் பொருட்டு இயக்கங்களும் தோன்றியுள்ளன.

மனிதன் வாழும் வாழ்விடத்தையே தன் வாழ்விடமாக மாற்றி, நம் குடும்பத்தோடு தன் குடும்பத்தையும் இணைத்து, மனிதனின் வாழ்வோடு பின்னிப் பிணைந்து, நம் வீட்டில் ஒருவராக வாழ்ந்த ஒரு பறவை இனம் என்றால் அது அடைக்கலத்தான் குருவி எனும் சிட்டுக்குருவிதான். உலகம் போற்றும் பறவையியலார் டாக்டர் சலீம் அலி சிறுவனாக இருந்தபோது தன் வீட்டில் சிட்டுக்குருவிக் கூட்டில் இருந்து கீழே விழுந்த சிட்டுக்குருவிக் குஞ்சுகளின் அழகில் மயங்கி, பின்னாளில் தன் வாழ்நாளையே பறவைகள் ஆராய்ச்சிக்காக அர்ப்பணித்தார். அந்தப் பறவையியல் மாமேதையை இந்தியாவுக்குத் தந்ததும், உலகுக்கு அறிமுகப்படுத்தியதும் இந்தச் சிட்டுக்குருவிகள்தான்.

உலகம் முழுவதும் பரவி வாழும் இந்தச் சிட்டுக்குருவிகள் மெடிட்டரேனியன் பகுதியில் தோன்றியதாக அறியப்படுகிறது. முதன் முதலில் வட அமெரிக்காவில் இவை அறிமுகப் படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவின் புரூக்ளின் மற்றும் நியூயார்க் நகரங்களில் 1851, 52-ம் ஆண்டுகளில் இவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதற்கு முக்கிய காரணம், அவைகள் பூச்சியினங்களைப் பிடித்துச் சாப்பிட்டு, உணவுத் தாவரங்களை பூச்சிகளிடம் இருந்து காப்பாற்றும் என்ற நம்பிக்கையில்தான். இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், உண்மையில் இளம் குஞ்சுகளுக்கு உணவூட்ட மட்டுமே அவைகள் பூச்சிகளைப் பிடித்து வருகின்றன.

பொதுவாக மற்ற பறவைகளைப்போல் சிட்டுக்குருவிகளை அடர்ந்த காட்டுப் பகுதியிலோ அல்லது பாலைவனத்திலோ காண முடியாது. அவைகள் மனிதனின் வாழ்விடங்கள், குறிப்பாக வீடுகள் மற்றும் அதனைச் சார்ந்துள்ள வயல்வெளிகளில்தான் பொதுவாக தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளும்.கிராமங்களில் உள்ள ஓட்டு வீடுகளின் இடுக்குகளில், வீட்டில் உள்ள போட்டோக்களின் பின்புறம் வைக்கோல் மற்றும் காய்ந்த புற்களைக்கொண்டு ஓர் ஒழுங்கற்ற முறையில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டு வாழும். ஆனால், தூக்கணாங்குருவியின் கூடு கட்டும் திறனோ, அழகோ அதன் வடிவமைப்பில் உள்ள நேர்த்தியோ இவை கட்டும் கூடுகளில் இருக்காது.பெரும்பாலும் கூடுகட்டும் பணியை ஆண் பறவைகள்தான் மேற்கொள்கின்றன. குளிர்காலங்களில், தெருவோரம் உள்ள மின் விளக்குகளில் கூடுகட்டி இருப்பதைக் கிராமங்களில் காணலாம். ஏனெனில், கடும் குளிரிலும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தங்கள் கூடுகளை மின்விளக்குகளில் கட்டும். இந்தக் குருவிகள் 3 முதல் 5 முட்டைகள் வரை இடும். சிட்டுக்குருவிகளின் பிரதான உணவு தானியங்களின் விதைகள் மற்றும் புற்கள் ஆகும்.

மனிதனோடு நெருங்கிப் பழகுபவை என்று அறியப்பட்ட சிட்டுக்குருவிகள், கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து புழுதியில் அரை வட்டவடிவில் பள்ளம் அமைத்து அதில் மண்குளியல் நடத்தும். மழைக்காலங்களில் தெருவில் தேங்கும் தண்ணீரில் அல்லது தண்ணீர் கிடைக்கும்போதெல்லாம் அவை கூட்டம் கூட்டமாக நீராடுவது வழக்கம். அதன் பிறகு இறகுகளைக் கோதிக் கொள்வதும், அதை உலர்த்திக் கொள்வதும் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தும். இதற்கு முக்கிய காரணம், அதன் இறகுகளில் ஏதாவது ஒட்டுண்ணிகள் இருந்தால் அதை வெளியேற்றவும் தன் இறகைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும்தான் அவைகள் இவ்வாறு செய்கின்றன.சிதறும் தானியங்கள்தான் இந்தச் சிங்கார சிட்டுக்குருவிகளின் பிரதான உணவு.

இன்று நவீனமயமானதன் விளைவு, எல்லா தானியங்களும் ஆலைகளிலேயே கல், மண் நீக்கிய பிறகு உடனே சமையல் செய்யும் விதமாக பாலிதீன் பைகளில் வந்துவிட்டன.முன்பு உணவு சமைக்கும் முன் அரிசியை முறத்தில் வைத்து வீட்டு வாசற்படியின் முன் அமர்ந்து கல் குறுநொய் நீக்கி , புடைத்து உணவு சமைக்க உதவுவாள் அன்றைய பாட்டி. இன்றைய பாட்டி கருணை இல்லங்களில் அடைக்கலமானதால் இன்று பாட்டியும் இல்லை. முறமும் இல்லை. தானியங்களும் அதிகம் சிந்துவதில்லை. சிட்டுக்குருவிகளுக்கு உணவும் இல்லை.இரண்டாவதாக, தானியங்கள், விதைகள்தான் இவைகளின் முக்கிய உணவாக இருந்தாலும் சிட்டுக்குருவிகளின் குஞ்சுகளுக்கு உணவுக்கு அவைகள் தோட்டத்துச் சிறு பூச்சிகள், புழுக்களையே முழுவதும் நம்பி உள்ளன.

முட்டையில் இருந்து வெளிவந்த குஞ்சுகளுக்கு முதல் உணவு இந்தத் தோட்டத்துப் புழுக்களும், பூச்சிகளும்தான். நமது கிராமத்து வீடுகளில் தாய்ப்பறவை அடிக்கடி வெளியில் பறந்துபோய் குஞ்சுகளுக்குப் பூச்சிகளைப் பிடித்து உணவாகக் கொடுத்துக் கொண்டிருக்கும். நமது வீட்டுக் கொல்லைப்புறத்தில் உள்ள செடிகளையெல்லாம் அழித்து கான்கிரீட் காம்பவுண்டுகளாக மாறிவிட்ட நகரச்சுழலில் எங்கே புதர்ச் செடிகளையும், உயிர் வேலிகளையும் காண முடிகிறது?அதையும் மீறி இப்போது நகரங்களில் காணப்படும் தோட்டங்களில் அழகுச்செடிகள் என்ற போர்வையில் வேற்றிடத்துத் தாவர இனங்கள் அதிகம் ஆக்கிரமித்திருக்கின்றன. குறிப்பாக, நமது நாட்டுத் தாவரங்களும், புற்களும் இல்லாததால் அதை நம்பி வாழும் புழுக்கள், பூச்சிகள் அரிதாகிவிட்டன. மிக முக்கியமாக விவசாயத்தில் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் ரசாயன பூச்சிக்கொல்லிகளின் விளைவாக, நாம் நமக்கு நன்மை செய்யும் பூச்சிகளை மட்டும் கொல்லவில்லை. மாறாக, சிட்டுக்குருவிகளின் சந்ததிகளையும் சேர்த்துத்தான் அழித்துவிட்டோம். ஆம், நாம் சிட்டுக்குருவிகளின் செல்லக் குழந்தைகளுக்கு உணவாக உள்ள பூச்சிகள், புழுக்களை பூச்சிக்கொல்லிகள் பதம் பார்த்து விடுவதால் அங்கே அவற்றுக்கு நிரந்தரமான உணவுப் பஞ்சம். சிட்டுக்குருவிகள் யாரிடம்தான் முறையிடும்?

Tags :
Advertisement