For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

உலக புகைப்பட நாள்!

07:31 AM Aug 19, 2024 IST | admin
உலக புகைப்பட நாள்
Advertisement

புகைப்படம் என்றாலே எல்லோருக்கும் ஸ்பெஷல் தான். நம் வாழ்வின் எதோ ஒரு சந்தர்ப்பத்தை நேரடியாக நினைவு படுத்தும் ஒரே விஷயமாக இந்த உலகில் உள்ளது. மனிதன் தன்னைத் தானே மெச்சிக்கொள்ளும் ஒரு சில கண்டுபிடிப்புகளில் புகைப்படம் ஒன்று. அப்படியாக பல நினைவுகளை, அழுகைகளை, உணர்வுகளை உலகெங்கும் தாங்கி நிற்கின்றன லட்சோப லட்ச புகைப்படங்கள். தனிப்பட்ட வாழ்வில் மட்டுமின்றி புகைப்படம் முக்கியமான சமூக பிரச்சனைகளில் வகிக்கும் இடம் மிகப் பெரியது. பல கலவரங்களை, போர்களை முடிவுக்கு கொண்டு வந்த பெருமை பல புகைப்படக் காரர்களுக்கு உண்டு. 2003 குஜராத் கலவரத்தில் இருந்து வந்த புகைப்படம் ஆகட்டும், சமீபத்தில் மணிப்பூர் கலவரத்தில் இருந்து வெளிவந்த பெண்களின் நிர்வாண ஊர்வல புகைப்படம் ஆகட்டும்… வார்த்தைகள் கொண்டு செல்வதை விட அதிக மக்களுக்கு, அதிக ஆழத்துடன் விஷயங்களை கடத்துவதில் பெரும் பங்கு புகைப்படங்களுக்கு உண்டு. துக்கமும், இன்பமும், நினைவுகளும் எல்லாம் கலந்த இந்த புகைப்படங்கள் என்னும் விஷயத்தை கொண்டாட ஒரு தினம் தான் உலக புகைப்பட தினம்.

Advertisement

"ஆயிரம் வார்த்தைகள் கூற வரும் உணர்வை அல்லது செய்தியை, ஒரு நல்ல புகைப்படம் கூறி விடும்" என்பார்கள். தினம் தினம் வளர்ச்சி அடைந்து வரும் உலகத்தில், புகைப்படமும், கேமராவும், தன் வளர்ச்சியை பிரம்மாண்ட பாதையில் அழைத்து சென்றுக் கொண்டு இருக்கிறது என்றால் மிகையல்ல. 15 ஆண்டுகளுக்கு முன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால், போட்டா ஸ்டூடியா வரை செல்ல வேண்டும். அந்த போட்டாவை பிரிண்ட் போட்டு பார்ப்பதற்கு குறைந்தது, ஒரு நாளாவது காத்திருக்க வேண்டியது இருந்தது.

Advertisement

அதேபோல், 40 ஆண்டுகளுக்கு முன்பு, ஏதாவது ஒரு விஷேச வீட்டில் போட்டோகிராபர் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்தால், அவரை அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர். அவருக்கு என்று தனி மதிப்பு இருந்தது. ஆனால் தற்போது, உலகத்தின் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய, அதற்கு ஏற்ப கேமராவின் வளர்ச்சியும் கற்பனை செய்ய முடியாத அளவை எட்டியுள்ளது.
ஆனால் செல்ஃபி முதல் மேக்ரோ போட்டோகிராபி வரை, தற்போது மக்கள் அவர்கள் வைத்திருக்கும்ம் ஸ்மார்ட்ஃபோனில் புகைப்படம் எடுக்கத் தொடங்கிவிட்டனர். கேமரா தன் வடிவத்தை இருக்கும் இடத்திற்கு ஏற்ப மாற்றினாலும், அதன் பண்பை அது மாற்றி கொள்வதில்லை. காலத்தை கடந்து நிற்கும் நினைவுகளை நிழற்படங்களாக்கித் தந்த கேமராக்களின் வரலாறும் மிகப் பெரியதே!

போட்டோகிராபி வகைகள்:

இதழியல் போட்டோகிராபி, இயற்கை போட்டோகிராபி, போட்ரைட் போட்டோகிராபி, வைல்ட் லைஃப் போட்டோகிராபி, கேண்டிட் போட்டோகிராபி, அஸ்ட்ரோ போட்டோகிராபி, மேக்ரோ போட்டோகிராபி என 10-க்கும் மேற்பட்ட புகைப்பட வகைகள் இருக்கின்றன.இன்று டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புகைப்படக் கலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆனால் புகைப்படக் கலையின் வரலாறு மிகப் பழைமை வாய்ந்தது. ஸ்டில் லைஃப் ஓவியத்தில் (Still life Painting) இருந்து தான் புகைப்படங்கள் தொடங்கியது என்பது மறுக்க முடியாது ஒன்று.

புகைப்பட தினம் எப்படி உருவானது?

1837 ஆம் ஆண்டில், பிரெஞ்சுக்காரர்களான லூயிஸ் டாகுரே மற்றும் ஜோசப் நைஸ்ஃபோர் நீப்ஸ் ஆகியோர் டாகுரோடைப் எனும் புகைப்பட முறையை முதல் முறையாக கண்டுப்பிடித்தனர். டாகுரோடைப் என்பது ஒளி-உணர்திறன் மேற்பரப்பில் நிரந்தர படங்களை கைப்பற்றுவதற்கான முறையாகும். இதன்மூலம் ஒளியை உள்வாங்கி படங்கள் எடுக்கும் முறை கண்டுப் பிடிக்கப்பட்டது.இதனையடுத்து , ஜனவரி 9, 1839 இல், பிரெஞ்சு அகாடமி ஆஃப் சயின்சஸ் டாகுரோடைப் முறையை அறிவித்தது மற்றும் ஆகஸ்ட் 19 அன்று, பிரெஞ்சு அரசாங்கம் இதற்கான காப்புரிமையைப் பெற்றது. அதன்பின்னர், தன்னுடைய காப்புரிமை முறையை "உலகிற்கு இலவச பரிசு" என்று அறிவித்தது. அதனால்தான் ஆகஸ்ட் 19 உலக புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் உலகை உலுக்கிய சில புகைப்படங்கள் பற்றிய தொகுப்பு... 🎦

🎦சிறுமியை திண்ண காத்திருக்கும் கழுகு(1993):

உலகின் மனசாட்சியையே உலுக்கி சூடான் நெருக்கடியைக் கவனிக்க வைத்த மிக சோகமாக படம் இது. ஊட்டச்சத்து இல்லாத சிறுமி இறப்பதற்காக கழுகு பொறுமையாக காத்திருப்பது இப்படத்தில் பதிவாகியிருந்தது. மார்ச் 1993 இல் தி நியூயார்க் டைம்ஸில் வெளியிடப்பட்ட இந்த படம் சூடான் மக்களுக்கு உதவிகளை பெற்று தந்தது. இந்த படம் புகைப்படக் கலைஞர் கெவின் கார்டரால் எடுக்கப்பட்டது, இவர் பல விருதுகளை வென்றார், ஆனால் இந்த படம் ஏற்படுத்திய தாக்கத்தால் அவர் தற்கொலை செய்துகொண்டார்.

🎦ஹிரோசிமா, நாகசாகி அணுகுண்டுகள்( 1945):

1945 இல் ஜப்பானின் மீது அமெரிக்கா இரண்டு அணுகுண்டுகளை வீசியபோது, அது ஆறு வருட உலகப்போரை கிட்டத்தட்ட ஒரு நொடியில் நிறுத்தியது. இந்த குண்டுவெடிப்பின் படம், குண்டு வீசிய விமான குழுவினரால் எடுக்கப்பட்டது.

🎦 வியட்நாம் போரின் சாட்சியம்( 1973):

1973 ஆம் ஆண்டு தெற்கு வியட்நாம் போரின் போது எடுக்கப்பட்ட படம் இது. போரினால் பாதித்த மக்கள் வியட்நாமிலிருந்து தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறுவதை சித்தரித்த இந்த படம் உலகை உலுக்கியது. இந்த ஒன்பது வயது கிம் ஃபெக் என்ற பெண்ணில் ஆடைகள் போரில் எரிந்துவிட்டது. நிக் உட் என்பவர் இந்த படத்தை எடுத்தார்.

🎦கருப்பினத்தவர்களின் எழுச்சி(1968):

மெக்சிகோ நகரில் 1968 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் ஆப்பிரிக்க-அமெரிக்க விளையாட்டு வீரர்கள் டோமி ஸ்மித் மற்றும் ஜான் கார்லோஸ் வெற்றிபெற்று தங்கள் முஷ்டிகளை உயர்த்தினர். விளையாட்டு வரலாற்றில் எடுக்கப்பட்ட மிக வெளிப்படையான அரசியல் படமாக இந்த படம் வரலாற்றில் பதிவானது. ஸ்மித் தனது சுயசரிதையில் அது ஒரு கருப்பினத்தவர்களின் வணக்கம் அல்ல, மாறாக ஒரு மனித உரிமை வணக்கம் என தெரிவித்தார். இந்த படம் ஜான் டோமினிஸ் என்பவரால் எடுக்கப்பட்டது.

🎦உயிரை துறந்த துறவி(1963):

1963ஆம் ஆண்டு வியட்நாமை சேர்ந்த புத்த துறவி, திச் குவாங் டக், தெற்கு வியட்நாமிய அரசாங்கத்தின் புத்த துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, போக்குவரத்து நெரிசல் மிக்க சைகான் சாலை சந்திப்பில் தீக்குளித்தது உலகையே உலுக்கியது. மால்கம் ப்ரவ்னி என்பவர் இந்த படத்தை எடுத்தார்.

🎦உலகின் முதல் செல்ஃபி (1839).

இது மனிதனின் ஆரம்பகால புகைப்படங்களில் ஒன்றாகும், 1839 இல் எடுக்கப்பட்ட முதல் சுய உருவப்படம், பிலடெல்பியாவில் உள்ள அவரது குடும்பத்தின் விளக்கு தயாரிக்கும் கடைக்கு வெளியே ஒரு இளம் ராபர்ட் கார்னிலியஸ் (1809-1893) நிற்பதை இப்படம் காட்டுகிறது.

🎦எர்த்ரைஸ்( 1968):

1968 ஆம் ஆண்டு நிலவின் சுற்றுப்பாதையில் இருந்து அப்பல்லோ 8 விண்வெளி வீரர் வில்லியம் ஆண்டர்ஸ் எடுத்த "எர்த்ரைஸ்" என்ற இந்த படம் இதுவரை எடுக்கப்பட்ட மிகவும் செல்வாக்குள்ள சுற்றுச்சூழல் புகைப்படம் என்று கொண்டாடப்படுகிறது.

🎦இரட்டை கோபுர தாக்குதல்(2001):

அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி, அசோசியேட்டட் பிரஸ் புகைப்படக் கலைஞர் ரிச்சர்ட் ட்ரூவால் எடுக்கப்பட்ட படம். இது 106 வது மாடியில் பணிபுரிந்த ஜொனாதன் பிரிலியின் தலைகீழாக விழும் போது எடுக்கப்பட்ட படம் என்று கருதப்படுகிறது.

🎦வாழ்க்கை எப்படி தொடங்குகிறது (1965):

எண்டோஸ்கோப் மூலம் எடுக்கப்பட்ட முதல் படம், "வாழ்க்கை எப்படி தொடங்குகிறது" என வயிற்றில் இருக்கும் குழந்தையின் படம். இந்த படம் லைஃப் பத்திரிகையின் 1965 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 அட்டைப்படத்தில் வெளிவந்து நான்கு நாட்களில் 8 மில்லியன் பிரதிகள் விற்றது. இந்த படத்தை லென்னர்ட் நில்சன் என்பவர் எடுத்தார்.

🎦சைகோன் மரணதண்டனை - 1968

இந்த படம், அமெரிக்க புகைப்பட கலைஞர் எடி ஆடம்ஸால் எடுக்கப்பட்டது. தேசிய விடுதலை முன்னணி உறுப்பினர் நிகுயென் வான் லெம், தெற்கு வியட்நாமிய ஜெனரலால் கொல்லப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுவதும் எதிரொலித்து, போரின் கொடூரத்தை மக்களுக்கு காட்டியது.

🎦ருவாண்டா படுகொலை -

ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் ஹூட்டஸின் குழு டுட்ஸிகளை இனப்படுகொலை செய்து 8,00,000 பேரைக் கொன்றது. இந்த புகைப்படம் குழந்தைகளின் இரத்தம் தோய்ந்த பாதங்களை சுவர்களில் ஏறி தப்பிக்க முயற்சிப்பதை காட்டுகிறது. (1994)

🎦நிலவில் கால்வைத்த மனிதன்(1969):

நிலவில் முதலில் கால்வைத்த விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரினை நிலவின் மேற்பரப்பில் ஜூலை 20, 1969 அன்று எடுத்த படம் இது.

🎦 போர் சூழ்ந்த பார்வை( 1984):

உலகையே உலுக்கிய ஆப்கானிஸ்தான் பெண்ணின் இந்த புகைப்படம் ஸ்டீவ் மெக்கரி என்ற புகைப்படக்காரரால் எடுக்கப்பட்டது, 1984 இல் சோவியத்-ஆப்கானிஸ்தான் போர் பற்றிய தகவல்களை சேகரிக்கும் போது அவர் இந்த படத்தை எடுத்தார்.

19) உலகப்போரை வென்ற முத்தம்(1945)

ஆகஸ்ட் 14, 1945 அன்று நியூயார்க்கில் ஆல்ஃபிரட் ஐசென்ஸ்டாட் என்ற புகைப்படக்கலைஞர் எடுத்த இந்த புகைப்படம், லைஃப் இதழில் வெளியாகி பிரபலமானது. இரண்டாம் உலகப் போர் ஜப்பானின் சரணாகதியுடன் முடிவடைந்த நாளில், போர் நிறைவு கொண்டாட்டங்களின் போது ஐசென்ஸ்டெட் மாலுமி திடீரென ஒரு செவிலியரை முத்தமிடும் காட்சி இது.

21) கலைநயமிக்க பால்துளி( 1957):

ஹரோல்ட் எட்ஜெர்டன் 1957 இல் எடுத்த பால் துளி விழும் கலைநயமிக்க புகைப்படம் மிக மிக அழகானது. எட்ஜெர்டன் ஸ்டாப்-மோஷன் புகைப்படம் எடுத்தல் துறையில் பெரும் பங்களிப்பை வழங்கி அங்கீகாரம் பெற்றார். இந்த படம் மூலமாக குறைந்த வெளிச்சத்தில் படம்பிடிக்கக் கூடிய கேமராக்களுக்கு வழி வகுக்க உதவியது மற்றும் மனிதக் கண் உணரும் வகையில் மிக வேகமாக நகரும் காட்சிகளைப் பிடிக்க உதவியது.

22) புலம்பெயர்ந்த தாய் (1936):

அமெரிக்க மந்த நிலையின்போது டோரோதியா லாங்கே என்ற புகைப்பட கலைஞரால் எடுக்கப்பட்ட ஏழு குழந்தைகளுடன் கவலை தோய்ந்த முகத்துடன் உள்ள புளோரன்ஸ் ஓவன்ஸ் தாம்சன் என்ற புலம்பெயர்ந்த தாயின் படம் நெகிழ்ச்சியை உருவாக்கியது.

23) றெக்கை கட்டிய விமானம்(1903):

ரைட் சகோதரர்களின் முதல் விமானம் இது. விமானத்துடன் வில்பர் ஓடிக்கொண்டிருந்தார்; இந்த புகைப்படம் எடுக்கப்படவில்லை என்றால் அவர்களின் சாதனையை யாரும் நம்பியிருக்க மாட்டார்கள்.

24 விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கடைசி பார்வை

இலங்கை ராணுவத்தினரால் உயிரோடு பிடிக்கப்பட்டு கொடூரமாக சுட்டுக்கொல்லப்படு முன் தன்னை கொல்லப்போகின்றார்கள் என தெரியாமல் எதிரி கொடுத்த பிஸ்கட்டை சாப்பிடும் பால் மணம் மாறாத பாலச்சந்திரன் பார்வை

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement