தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

உலக இதய தினம்!

06:44 AM Sep 29, 2024 IST | admin
Advertisement

ர்வதேச அளவில் பரவலான மக்களுக்கு இதய பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிக அவசியமானது. இதனை வலியுறுத்தி ஆண்டுதோறும் செப்.29 ஆம் தேதி 'உலக இதய தினம்' அனுசரிக்கப்படுகிறது. அதாவது அம்மாவின் வயிற்றில் கரு உருவாகி, நான்கு வாரத்தில் தொடங்குகிறது முதல் இதயத் துடிப்பு. அன்று முதல் மனிதன் இறக்கும் வரை நிற்காமல் சதா சர்வ காலமும் துடித்துக்கொண்டிருக்கிறது இதயம். இதன் நான்கு அறைகள், வால்வுகள் மற்றும் ரத்த நாளங்களின் செயல்பாடு அளப்பரியது. உடல் முழுவதும் ரத்தத்தை அழுத்திச் செலுத்தி, பிராணவாயுவைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. இதய அறுவைசிகிச்சையில் மருத்துவ மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பலப்பல வந்துவிட்டபோதிலும், எந்த ஓர் இதய நோயும் வருமுன் காப்பதே சிறந்தது என்பதைச் சுட்டிக்காட்டும் தினம்.

Advertisement

உலக இதய தினத்தின் வரலாறு:

Advertisement

உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைவரான அந்தோனி பேட் டி லூனா (Antoni Baie de Luna), உலக இதய கூட்டமைப்புடன் (WHF) இணைந்து, உலக இதய தினம் 1999 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முதல் உலக இதய தினம் செப்டம்பர் 24, 2000 அன்று நடந்தது. அதனையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 அன்று உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது. இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவம், இருதய நோய்களுடன் தொடர்புடைய ஆபத்து மற்றும் இந்த நிலைமைகளை எவ்வாறு தடுப்பது, கட்டுப்படுத்துவது என்பது பற்றிய விழிப்புணர்வை மக்களுக்குத் தெரிவிப்பதே, உலக இதய தினத்தின் முதன்மை நோக்கமாகும்.

இதயம் நம் கைகளில்!

இதயத்தின் அளவென்பது, நம்முடைய மூடிய கைகளின் அளவு தான். 400 கிராம் எடை கொண்டது. நாம் கருவிலிருக்கும்போதே இதயம் துடிக்க துவங்கும். ஒரு நிமிடத்துக்கு, சராசரியாக 72 முறையும், ஒரு நாளுக்கு ஒரு லட்சம் முறையும் துடிக்கும். 'Myocardium' என்னும் இதயத் தசைகளால் ஆன இதயம், நான்கு அறைகள், நான்கு வால்வுகள் உடையது. உடலில் உள்ள அனைத்து அசுத்த ரத்தத்தையும் சுத்திகரித்து மீண்டும் உடலுக்குச் செலுத்துவதே இதயத்தின் பிரதான பணியாகும்.

ஓய்வின்றி இயங்கும் இதயம்!

நம் உடலில் தொடர்ந்து இயங்கும் இதயத்தின் துடிப்பு நின்றுபோனால் அசுத்த ரத்தம் இதயத்துக்குள்ளேயே தேங்கிவிடும். உடலில் உள்ள திசுக்களுக்குத் எனர்ஜியைத் தரும் குளூக்கோஸ், தாது உப்புகள் போன்றவை தேவையான அளவு கிடைக்காதுபோகும். திசுக்கள் பாதிப்புக்குள்ளாகும். புதுப்பிக்க முடியாத நிலை உண்டாகும். இறுதியில், உடல் செயலிழந்து போகும். இறுதியில் உயிரிழப்பு நேரிடும்.

இதய நோய்கள் எவை..?

கரோனரி தமனி நோய், மாரடைப்பு, இதயச் செயலிழப்பு, சீரற்ற இதயத்துடிப்பு, பிறப்பிலேயே இதயம் சிறிதாக இருப்பது, இதய வால்வு பிரச்னை, இதயத் தசை நோய், மூச்சுத் திணறல், புற தமனி நோய், உயர் ரத்த அழுத்தம், நுரையீரல் வீக்கம், தலை சுற்றல், இதய சுற்றுப்பை அழற்சி, கணைய சுரப்புக் குறைபாடு, நுரையீரல் உயர் ரத்த அழுத்தம் போன்றவை இதயம் சார்ந்த நோய்களாகும்.

எதனால் இதய நோய் ?

* இதய ரத்தக் குழாய்களின் மூலம் ஆக்சிஜன் கலந்த ரத்தம் இதயத்துக்குச் செலுத்தப்படும். இவ்வாறு செலுத்தப்படும் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனின் அளவு குறைவாக இருந்தாலும், ஆக்சிஜன் இல்லாமல் போனாலும் மாரடைப்பு ஏற்படும்.

* நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பானது ரத்தக் குழாய்களின் ஓரங்களில் ஒட்டிக்கொண்டு, ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்.

* அதிக அளவு உணர்ச்சிவசப்படுதல், மனஅழுத்தம் இது போன்ற நிலைகளில் இதய ரத்தக் குழாய்கள் சில விநாடிகளில் முழுமையாகச் சுருங்கும். இதனாலும் மாரடைப்பு உண்டாகும்.

* புகைப்பழக்கம், மது அருந்துபவர்கள் போன்றவர்களின் கல்லீரலில் அதிகமாக உருவாகும் கெட்ட கொலஸ்ட்ரால், ரத்தத்தில் கலந்து இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பை உண்டாக்கும். இதன் காரணமாகவும் மாரடைப்பு ஏற்படும்.

* எதிர்மறையான எண்ணங்கள் கார்டிசால் மற்றும் அட்ரீனல் ஹார்மோன்களின் சுரப்பை ரத்தத்தில் கலக்கச் செய்யும். இது உடலின் எந்தப் பகுதியில் உள்ள ரத்தக்குழாய்களிலும் அடைப்பை உண்டாக்கும்.

* பெரும்பாலும் இதய நோய் வருவதற்கு முதல் முக்கிய காரணம் ரத்தக்குழாய் அடைப்பேயாகும்.

ரத்தக் குழாய் அடைப்புக்கு காரணங்கள்.

* உடலுக்குத் தேவையான அளவைவிட அதிக அளவு உணவைச் சாப்பிடுதல்.

* தினசரி உடற்பயிற்சி செய்யாதது

* அதிக அளவு கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொள்வது.

இதய நோய்க்கான அறிகுறிகள்

* இடது புற மார்பு மற்றும் தோள்ப்பட்டைப் பகுதியில் வலி

* தாடைப் பகுதியில் வலி

* மார்பு இறுக்கம்

* மூச்சு விடுவதில் சிரமம்

* படபடப்பு, மயக்கம், தசை வலி, உடலில் எனர்ஜி இல்லாது போவது போன்ற பொதுவான அறிகுறிகளும் இதில் அடங்கும்.

இதய நோய்க்கு வழிவகுப்பவை...

* அதிக ரத்த அழுத்தம்

* அதிக கொலஸ்ட்ரால் மற்றும் குளுக்கோஸ்

* புகைப்பழக்கம்

* முறையற்ற உணவுப்பழக்கம்

* உடல் பருமன்

இதய நோய்களுக்கான பரிசோதனைகள்..

30 வயதைக் கடந்தவர்களுக்கு ரத்தச் சர்க்கரை அளவு, ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு, ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு பரிசோதனை, ஈசிஜி, மார்பு எக்ஸ்ரே பரிசோதனை போன்ற பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்.

ரத்தத்தில் - சி.பி.கே - எம்.பி (CPK-MB) என்ற பரிசோதனையையும், இதயத்தில் - எக்கோ கார்டியோ கிராம் பரிசோதனை, டிரெட்மில் பரிசோதனை, ஆஞ்சியோகிராம், நியூக்ளியர் ஸ்கேன் பரிசோதனைகளையும் செய்ய வேண்டும்.

இதய நோய் யாருக்கு வரலாம்...

* மனஅழுத்தம், மனஉளைச்சல் உள்ளவர்களுக்கு

* புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு

* 140/90 mm Hgக்கு அதிகமாக உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு

* ரத்தச் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு

* உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு

* நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு

ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன்...

பெண்களுக்கு மட்டும் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரப்பு பெண்களை இதய நோயிலிருந்து காக்கும். அதேநேரத்தில் இதய நோய்க்கு வழி வகுப்பதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள்தான் காரணம். மனஅழுத்தத்தினால் நிகழும் ஹார்மோன்களின் எதிர்மறையான சுரப்பு இதய நோயை ஏற்படுத்தும்.

இதய நோயாளிகள் செய்ய வேண்டியவை?

* ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வீதம், வாரத்தில் ஐந்துநாள்களாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

* இரவில் எட்டு மணி நேரமும், மதிய வேளையில் உணவு சாப்பிட்ட பின்னர் ஒரு மணி நேரம் தூங்க வேண்டும்.

* சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் இருப்பின் அவற்றைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

* உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவில் அதிக அளவுச் சேர்த்துக்கொள்ளலாம்.

செய்யக் கூடாதவை?

* அதிக எடையுள்ள கனமான பொருள்களைத் தூக்கக் கூடாது.

* கைகளை மூடியபடி, குனிந்தபடி செய்யவேண்டிய வேலைகளை முடிந்த அளவு தவிர்க்கலாம். உதாரணமாக, வாளிகளில் தண்ணீர் கொண்டு செல்லுதல், துணி துவைத்தல், பைக் ஓட்டுதல் போன்றவை. இவை இதயத்துக்குச் சுமையை அதிகரிக்கச் செய்யும்.

இதய நோய்க்கு முக்கிய காரணம் என்ன?

மன அழுத்தம், தவறான உணவுப்பழக்க வழக்கங்கள், உடல் செயல்பாடுகளின் பற்றாக்குறை, உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு மற்றும் மோசமான வாழ்க்கை முறை ஆகியவை மாரடைப்புக்கான முக்கிய காரணம். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஆண்டுதோறும் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதய நோய்களால் இறக்கின்றனர்.

இதய நோய்க்கான அறிகுறிகள் என்ன?

மார்பு வலி, கை, கால்களில் வலி மற்றும் வீக்கம், மூச்சு திணறல், மிக வேகமாக அல்லது மெதுவான இதயத் துடிப்பு, படபடப்பு, தலைச்சுற்றல் அல்லது மயக்கம் ஆகியவை இதய நோய்க்கான முன்னெச்சரிக்கை அறிகுறிகளாகும்.

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நடவடிக்கை என்ன?

நம் உடலையும், இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முறையான உடற்பயிற்சி, யோகா, தியானம், தரமான தூக்கம், ஆரோக்கியமான உணவு மற்றும் சரியான ஊட்டச்சத்து, புகை பிடிப்பதை தவிர்த்தல், மன அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்தல், மது அருந்துவதை தவிர்த்தல், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், ஆரோக்கியமான உடல் எடையை கொண்டிருத்தல் வேண்டும்.

மேலும் ஓய்வின்றி உழைக்கும் இருதயத்தை பழுதின்றி பாதுகாக்க வேண்டியது ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் மிக முக்கியமான கடமை என்று கூறினால் அது மிகையாகாது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை கருத்தில் கொண்டு உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது இன்றியமையாதது. நம்மை பாதுகாக்கும் இதயத்தை பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

டாக்டர்.செந்தில் வசந்த்

Tags :
cardiovasculardetectdiseasesglobal call to raise awarenesshealthheart daypreventwhoWorld Heart Dayஇதயம்இருதயம்
Advertisement
Next Article