For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சர்வதேச நீதிக்கான உலக நாள்!

06:29 AM Jul 17, 2024 IST | admin
சர்வதேச நீதிக்கான உலக நாள்
Advertisement

ர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) பணிகளை ஆதரிப்பதற்கும் அங்கீகரிப்பதற்கும்,நீதிமன்றங்களின்மீது நம்பிக்கை கொள்ளவுமே, சர்வதேச நீதிக்கான உலக தினம் (சர்வதேச குற்றவியல் நீதி நாள் அல்லது சர்வதேச நீதி தினம் என்றும் அழைக்கப்படுகிறது) ஜூலை 17 அன்று உலகளவில் கொண்டாடப்படுகிறது. ஆங்கிலத்தில் சொல்வதானால் International Justice Day. ஜூலை 17, 1998-ல் ரோம் நகரில் நடந்த உலக நாடுகளின் மாநாட்டில் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தை (International criminal court) உருவாக்குவதற்கான ரோம் ஒப்பந்தம் உருவானது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2002-ம் ஆண்டு ஜூலை மாதம் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் நிறுவப்பட்டது. இந்த ரோம் ஒப்பந்தத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

'எல்லாரும் ஓர் நிறை; எல்லாரும் ஓர் விலை; எல்லாரும் இந்நாட்டு மன்னர்' - என்று புளகாங்கிதம் அடைந்து பாடியவன் மகாகவி பாரதி. மண்ணில் பிறந்த எல்லோரும் சமமானவர்கள். ஆண் பெண், படித்தவர் படிக்காதவர், ஏழை பணக்காரர், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதமே இல்லாமல் வாழ வேண்டும் என்பதே எல்லா நாட்டின் சட்டமும் விருப்பமும் ஆகும். இதை நிலை நாட்டவே, ஒவ்வொரு நாட்டிலும் நீதி வகுக்கப்படுகிறது. ஒரே ஒரு தனி மனிதனுக்காவது அவனது உரிமைகள் மறுக்கப்படும்போது, அந்த நாட்டின் சட்டம் அவனுக்கு நீதி வழங்குகிறது. இதற்காகவே நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. ஒருவேளை, நீதி மறுக்கப்படும்போதோ தாமதிக்கப்படும்போதோ மக்களின் வாழ்க்கை முறை அச்சத்துக்குள்ளாகிறது.

Advertisement

இச்சூழலில் நீதியை நிலைநாட்டவும் நீதிமன்றங்களின்மீது நம்பிக்கைகொள்ளவுமே, ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 17-ம் நாள் சர்வதேச நீதி நாள் கொண்டாடப்படுகிறது. இதே நாளில்தான், ரோமில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. இதனாலேதான், இந்த நாளை சர்வதேச நீதி நாளாகத் தேர்ந்தெடுத்தது ஐக்கிய நாடுகள் சபை. நீதிமன்றங்களின்மீது நம்பிக்கை உண்டாகவும், தவறு செய்தவர் எவராக இருப்பினும் அவருக்குத் தண்டனை அளித்திடவும், நிரபராதிகள் தண்டிக்கப்பட்டு விடாமலும் இருக்க, இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.
நாடுகளைத் தாண்டியும் சர்வதேச அளவிலும் ஒரு நாட்டுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உள்ளது என்பதையும், அது நிச்சயம் நீதியை அளிக்கும் என்பதையும் நினைவுறுத்தவே இந்த உலக நீதி நாள் கொண்டாடப்படுகிறது.

மேற்படி ரோம் ஒப்பந்தத்தில் அமெரிக்கா, இஸ்ரேல், சூடான், ரஷ்யா ஆகிய நாடுகள் முதலில் கையெழுத்திட்டாலும் பிற்காலங்களில் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்டன. இந்த நாடுகள் எல்லாம் தற்போது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினராகவும் இல்லை. உலகளாவிய நியாயாதிக்க அமைப்பாகச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் நிறுவப்பட்ட போதும், உலகின் முதன்மையான சர்வதேச சக்தியுள்ள நாடுகள் உறுப்புரிமை பெறாததாதல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இந்த நாடுகளில் அதிகாரம் பெறாது. இதன் காரணமாகவே 123 நாடுகள் கொண்டாடும் சர்வதேச நீதி தினம், ரோம் ஒப்பந்தத்தில் உறுப்பு நாடுகளாக இல்லாத இந்தியா உள்ளிட்ட பல முக்கிய நாடுகளில் அங்கீகரிக்கப்படுவதில்லை.

அதாவது உலகில் இரண்டு சர்வதேச நீதி அமைப்புகள் உள்ளன. ஒன்று ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரத்தின் கீழ் வரும் சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice). இதில் ஐநாவில் உறுப்பினராக இருக்கும் அனைத்து நாடுகளும் உறுப்பினராக இருக்கும். மற்றொன்று ரோம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court). இதில் 1998-ல் ரோம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் மட்டுமே உறுப்பு நாடுகளாக இருக்கும். முதலில், இனப் படுகொலை, மனிதக்குலத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் ஆகிய மூன்று குற்றங்களை விசாரிப்பதற்கு இந்த நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. பின்னர் ஒருவர் தேசிய ராணுவத்தைப் பயன்படுத்தி தேவையற்ற தாக்குதலில் ஈடுபடும் குற்றமும் இதில் சேர்க்கப்பட்டது.

இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைத்தான் இந்தியா ஆரம்பம் முதலே கடுமையாக விமர்சித்து வருகிறது. மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்பது மிகவும் பரந்த பொருள் கொண்டதாக இருப்பதும், உறுப்பு நாடுகள் இல்லாத நாடுகளையும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் விசாரணைக்கு உட்படுத்தலாம் என்னும் விதியையும் இந்தியா எதிர்த்தது. அணு ஆயுதப் பயன்பாட்டைக் குற்றமாக வரையறுக்க இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தவறிவிட்டதையும் இந்தியா சுட்டிக் காட்டுகிறது. இந்தியாவின் இறையாண்மையையும், இந்திய சட்டத்தின் சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் குறைப்பதாக இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் செயல்படும் என்ற பயத்தையும் இந்தியா வெளிப்படுத்தியிருக்கிறது. ஒரு தேசத்தின் எல்லைகளுக்குள் நடக்கும் செயல்பாடுகளை போர்க் குற்றங்களில் சேர்த்ததையும் இந்தியா எதிர்த்தது.

இப்படி பல்வேறு காரணங்களுக்காக இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. மேலும், இந்த நீதிமன்றம், வலுவான ஐரோப்பிய மேலை நாடுகளுக்குச் சாதகமாகச் செயல்பட்டுப் பின்தங்கிய நாடுகளுக்கு எதிராகச் செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆப்பிரிக்க ஒன்றியம் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களைத் திட்டமிட்டுக் குறிவைப்பதாக வெளிப்படையாகவே குற்றம் சாட்டியது. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் இதுவரை சுமார் 12 குற்றவியல் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளது. அவற்றில் ஜோர்ஜியா, மியான்மர் தவிர மீதமுள்ள அனைத்தும் ஆப்பிரிக்க நாடுகளே என்பது குறிப்பிடத்தக்கது.

முதலாம் உலக போரின் முடிவில் பாரிஸ் அமைதி மாநாட்டில் `சர்வதேசத் தீர்ப்பாயத்தின்’ தேவை குறித்து முதலில் பேசப்பட்டது. ஆனால், அது செயல் வடிவம் பெறவில்லை.

இரண்டாம் உலகப் போரின் நிறைவில் அப்போரில் நிகழ்ந்த குற்றங்களை விசாரிக்க நியூரெம்பேர்க், டோக்கியோ தீர்ப்பாயங்கள் நிறுவப்பட்டன. ஆனால், போரில் தோற்ற ஜெர்மனிய, ஜப்பானிய ராணுவ அதிகாரிகளையும் அரசாங்க அலுவலர்களையும் மட்டுமே விசாரித்து தண்டனைகள் வழங்கப்பட்டன. ஹிரோஷிமா நாகசாகியில் அணுகுண்டு வீசிய அமெரிக்காவை இந்தத் தீர்ப்பாயங்கள் கண்டுகொள்ளவில்லை. இப்படி, இது போரில் வென்ற நாடுகள் தோற்றவர்களைத் தண்டிக்க உருவான தீர்ப்பாயமாக அமைந்ததேயன்றி சர்வதேச தீர்ப்பாயமாக அமையவில்லை. பின்னர், உருவான சர்வதேச நீதிமன்றமும் இன்றுவரை பல்வேறு எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றன.

புலி, வேட்டையாடி மானைக் கொல்வது இயற்கையின் நியதி. ஒரு விலங்கு தன் பசிக்குக் கொல்லும் இந்த நியதிகளுக்கு எல்லாம் நீதிகள் இல்லை. ஆனால், மனிதன் அப்படியில்லையே... தன் இனமான மனிதனை ஏதேதோ காரணங்கள் சொல்லி தானே கொல்லும் சுயநலவாதி அல்லவா? எனவேதான் சட்டங்களும் வரையறைகளும், கட்டுப்பாடுகளும், சரி, தவறுகளும், நீதியும் கொண்டே ஒரு மனிதனின் செயல்பாடுகளை நாம் அளவிட வேண்டியிருக்கிறது. ஆனாலும் நாட்டில் நடக்கும் கொடுமைகளைத் தட்டிக் கேட்கவும், நீதிமுறைகளைத் தவறாது கடைப்பிடிக்கவும் இந்த நாளில் உறுதி ஏற்போம். சமாதானமும் சகிப்புத்தன்மையும் நம்முள் உருவாக எண்ணுவோம். இதுவே இந்நாளில் நமக்கு தேவைப்படும் நல்ல ஆயுதம்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement