For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஆர்த்ரைடிஸ் எனப்படும் மூட்டு அழற்சி தினம்!

08:51 AM Oct 12, 2024 IST | admin
ஆர்த்ரைடிஸ் எனப்படும்  மூட்டு அழற்சி தினம்
Advertisement

ர்வதேச மூட்டு அழற்சி (மூட்டு வலி) எனப்படும் ஆர்த்ரைடிஸ் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 12-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

Advertisement

மனிதனின் செயல் பாட்டுக்கு எலும்பு மூட்டுகள் வலுவாகவும், வலி இல்லாமலும் இருக்க வேண்டும். அப்போதுதான் சோர்வு இன்றி உழைக்க முடியும். முன்னர் முதியோர்களை மட்டுமே தாக்கி வந்த மூட்டு வலியானது பல்வேறு காரணங்களால் இன்று இளைய தலைமுறையினரையும் அதிகம் பாதித்து வருகிறது. மூட்டுகள் பலமாக இருக்க நம் உடலை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்பதை நினைவூட்டும் நாளிது. இத்தினம் கீல்வாதம் மற்றும் தசை நோய்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது. நோய்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை சமூக வலைதளங்களின் மூலம் பராமரிப்பாளர்களுக்கு தகவல் தெரிவிப்பது இத்தினத்தின் நோக்கமாகும்.

Advertisement

மூட்டுவலி என்பது முன்பெல்லாம் முதியவர்களைப் பாதிக்கும் பிரச்னையாக இருந்தது; இப்போதோ இளம்வயது பிரச்னையாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய இளைய வயதினருக்கு உடல் உழைப்பு குறைந்து வருவதும் உடற்பயிற்சி இல்லாததும் இதற்கு முக்கியக் காரணங்கள்.கணினித்துறை பெருவளர்ச்சி பெற்ற பிறகு 35 சதவீத இளைஞர்கள் அதிக நேரம் அமர்ந்தே வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு மூட்டுத்தசை இறுகி மூட்டுவலி வந்துவிடுகிறது. மாறிவரும் உணவுமுறை மூட்டுவலிக்கு அடுத்த காரணம். இளைய தலைமுறையினர் பலரும் துரித உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால், சிறுவயதிலேயே உடல் பருமன், ஹார்மோன் கோளாறுகள் வந்து அவதிப்படுகின்றனர். இது நாளடைவில் மூட்டுவலிக்கும் வழி அமைத்துவிடுகிறது.

நம்மில் ஒவ்வொருவரும் நிற்க, நடக்க, அமர, எழுத, படிக்க, திரும்ப எனப் பல்வேறு செயல்களுக்கும் மூட்டுகள் மிகவும் அவசியம். மூட்டுகளில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுவிட்டால் நம்முடைய வேலைகள் எல்லாமே முடங்கி விடும். மூட்டுவாதப் பாதிப்பு என்பது பொ.மு.4500 ஆண்டுகளில் வாழ்ந்த மனிதர்களுக்குக்கூட இருந்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே மூட்டு வலி இருந்தது. ஆனால், வாழ்க்கை முறை மாற்றத்தால் தற்போதைய காலகட்டத்தில் 35 வயது இளைஞர்களுக்குக்கூட முழங்கால், தோள்பட்டை மூட்டுகள் பலவீனம் அடைந்து வலி ஏற்படுகிறது. இதனால் அவர்களின் வாழ்க்கைத்தரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

ஆர்த்ரைடிஸ் எனப்படும் மூட்டு வலிகளில் பெரும்பாலானவை, ஜீன்களால் மட்டுமே வருகிறது. அதாவது முன்னோர்களின் மரபணு மூலம் நமக்கும் வருகிறது. சில சமயம் கடுமையான விபத்துகளால் காலில் ஏற்படும் காயம் காரணமாகவும், ஆர்த்ரைடிஸ் தாக்குகிறது. ஆர்த்ரைடிஸ் நம்மைத் தாக்கியுள்ளது என்பதை சில எளிய வழிகள் மூலம் தெரிந்துகொள்ளலாம். அதாவது கால் மூட்டில் கடுமையான வலி இருப்பது, காலைக் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நகர்த்த முடியாமல் இருப்பது, மூட்டுகளில் கடும் எரிச்சல் ஆகியவற்றின் மூலம் அறியலாம். மேலும் மூட்டுகள் விரைப்பு, வீக்கம், சிவந்திருத்தல், எரிச்சலாக இருக்கும் இடத்தில் தசைகள் மிகவும் தளர்வாக இருத்தல் ஆகியவையும் ஆர்த்ரைடிஸ்ஸின் அறிகுறிகளாகும்.

இவை நேரடியாக மூட்டுகளைத் தாக்காவிட்டாலும், பின்விளைவாக அதைச் செய்கின்றன. இதனால் சிலருக்கு காய்ச்சல், வீக்கங்கள், உடல் எடை இழப்பு, உடல் நலம் இல்லாததுபோலவே இருப்பதுபோன்ற ஒரு நிலை இருத்தல், நுரையீரல், இதயம், சிறுநீரகங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளிலும் சுணக்கம் இருத்தல் ஆகியவற்றின் மூலம் அவர்களுக்கு ஆர்த்ரைடிஸ் தாக்கியிருப்பது கண்டறியப்படுகிறது. ஆர்த்ரைடிஸ் என்பது ஆண், பெண், குழந்தைகள், சிறுவயதினர் என்று எல்லாத் தரப்பினரையுமே தாக்கும். கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவில் மட்டும் 18 கோடிக்கும் அதிகமானோர் ஆர்த்ரைடிஸ்ஸால் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 65 வயதுக்கு உட்பட்டவர்கள். உலகம் முழுவதும் ஆர்த்ரைடிஸ் தாக்கப்பட்டவர்களில் 60 சதவிகிதம் பேர் பெண்கள். இந்தியாவில் 90 சதவிகித கிராமப்புறத்தினர் ஆர்த்ரைடிஸ் பாதிப்புக்கு சிகிச்சை எடுப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலும் உடல் பருமன், முறையான உடற்பயிற்சி இல்லாமை, சாலை விபத்துக்கள், முறையான சிகிச்சை மற்றும் அணுகுமுறை இல்லாமை, உணவு பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், மன உளைச்சல், சர்க்கரை நோய், தைராய்டு சுரப்பில் ஏற்படும் கோளாறுகள் எனப் பல்வேறு காரணங்களால் மூட்டு வலி ஏற்பட்டு உழைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இப்பிரச்சினையை சரிசெய்வதற்காக அதிக செலவு செய்யும் நிலை உள்ளது. எனவே மூட்டுக்களை முறையாகப் பேணி பாதுகாக்க வேண்டும்.

மூட்டில் வலி ஏற்பட்டால் வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது. வலி ஏற்பட்டவுடன் மருத்துவரை அணுக வேண்டும்.

தினமும் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்ய வேண்டும். உடல் எடையை கட்டுப்படுத்த வேண்டும். புகை மற்றும் மது பழக்கத்தை கைவிட வேண்டும். தற்போது உணவுப் பொரு ட்களில் அதிக ரசாயன கலப்பு இருப்பதால் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும். சர்க் கரை, இதயம், ரத்த அழுத்தம் ஆகிய நோய்களால் பெற்றோர் பாதிக்கப்பட்டிருந்தால் அவர் களின் பிள்ளைகள் 30 வயதுக்கு மேல் மருத்துவர்களை அணுகி முறையான சிகிச்சை பெற வேண்டும். விபத்து ஏற்படாத வகையில் சாலை விதிகளை மதிக்க வேண்டும். இவற்றை பின்பற்றுவதன் மூலம் மூட்டுகளை பாதுகாக்கலாம்.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement