For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

திமுகழக மகளிரணி நடத்திய ‘மகளிர் உரிமை மாநாட்டு’ விழாவில் யார்? என்ன பேசினார்கள் - முழு விபரம்!

09:12 AM Oct 15, 2023 IST | admin
திமுகழக மகளிரணி நடத்திய ‘மகளிர் உரிமை மாநாட்டு’ விழாவில் யார்  என்ன பேசினார்கள்   முழு விபரம்
Advertisement

லைஞர் கருணாநிதியின் நூற்றாண்டை யொட்டி, தி.மு.க மகளிர் அணி சார்பில் ‘மகளிர் உரிமை மாநாடு’ கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி , ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான ஆனி ராஜா ,ஆம் ஆத்மி கட்சியின் முன்னணி தலைவர் ராக்கி பிட்லன், திரிணாமுல் காங். செய்தி தொடர்பாளர் சுஷ்மிதா தேவ், பீகார் அமைச்சர் லெஷி சிங் உள்ளிட்ட INDIA கூட்டணியின் பல்வேறு முக்கிய அகில இந்தியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

இந்நிகழ்வில் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் முன்னணி தலைவர் ராக்கி பிட்லன், “பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து நாம் போராட வேண்டியுள்ளது. பல்வேறு தளங்களிலும் பெண்கள் தடைகளை உடைத்து இன்று முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Advertisement

அதேபோல், திரிணாமுல் காங். செய்தி தொடர்பாளர் சுஷ்மிதா தேவ், “இந்தியாவிலேயே பெண்களுக்காக பல முன்னேற்றத் திட்டங்களை அதிகளவில் கொண்டுவந்த தலைவர்தான் முன்னாள் முதலமைச்சர் கலைஞர். மகளிருக்கு இட ஒதுக்கீடு, சொத்துரிமை உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை பெண்களுக்காகவே தீட்டியவர் கலைஞர் மட்டும்தான். தமிழ்நாட்டில் மிக நீண்ட காலம் முதலமைச்சராக இருந்தவர் கலைஞர், சமூக நீதி, சமத்துவத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் என்பதை இங்கிருக்கும் அனைவரும் அறிவோம். அன்றிலிருந்து இன்றுவரை நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாட்டின் திமுக அரசு முன்னணியில் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

அதேபோல், பீகார் அமைச்சர் லெஷி சிங் பேசும் போது, "தி.மு.கவில் மகளிரணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல் படுத்தும் நோக்கத்தில் மோடி அரசு கொண்டு வரவில்லை" என கூறினார்.

இதில் பேசிய சமாஜ்வாதி கட்சியின் டிம்பிள் யாதவ்,"முற்போக்கு சிந்தனையாளர் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை நாம் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். சுதந்திர தின விழாவில் மாநில முதலமைச்சர்கள் தேசிய கொடியேற்றும் உரிமையை பெற்றுத்தந்த முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்நாட்டின் சிறந்த அடையாளமாக திகழ்கிறார். பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைஅதிகரித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். மகளிர் உரிமை, பாலின சமநிலை, பெண்களுக்கு சொத்தில் உரிமை என பல்வேறு திட்டங்களிலும் சமாஜ்வாதி கட்சி அரசுக்கு தமிழ்நாடு தான் முன்மாதிரி" என தெரிவித்துள்ளார்.

பின்னர் பேசிய CPI இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆனி ராஜா, "பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி உதவி கோரி கதறி அழுததும் நம் கண்முன்னால் தான் நடந்தது. பெண்களுக்கு எதிரானகொடுமைகள் முன்பும் இருந்தாலும் இப்போது எண்ணிக்கையில் மிக அதிகமாகவும், மிகவும் குரூரமாகவும் உள்ளது.ரயில்களில் பயணிகளை காப்பாற்ற வேண்டிய காவலர்கள், பயணிகளை சுட்டுக்கொல்லும் நிலை இப்போது உள்ளது. மதசார்பற்ற இந்த நாட்டில் இப்போது எங்கும் கேட்கிறது ஜெய்ஸ்ரீராம் என்ற குரல். இத்தகைய இக்கட்டான சூழலில் தான் இந்த மகளிர் உரிமை மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

இம்மாநாட்டில் பேசிய தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி பேசும் போது, “தந்தை பெரியார் கண்ட கனவுகளே திமுக ஆட்சியில் திட்டங்களாக மலர்ந்து சாதனைகளை படைத்தது. கலைஞர் ஆட்சியின் நீட்சியாக தளபதியின் ஆட்சி பெண்களின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றினால் ஆயிரம் விளக்குகளை ஏற்ற முடியும். அறிவொளி பெற்ற ஒரு பெண்ணாலும் அத்தகைய ஒளியை உருவாக்க முடியும் என்று சொன்னவர் தலைவர் கலைஞர். 11 பெண் மேயர்கள் இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு.

இன்னும் 50 ஆண்டுகளானாலும் அமலுக்கு வராத வகையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. குடியரசுத் தலைவர் தலித் சமூக பெண் என்பதால் கோயிலுக்குள் செல்ல முடியவில்லை. டாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் இந்தியாவின் முதல் குடிமகள் புறக்கணிக்கப் பட்டிருக்கிறார் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரியில் ஒரு தலித் பெண் அமைச்சராக நீடிக்க முடியாத நிலை உள்ளது. குடியரசுத் தலைவர் தொடங்கி சாமானிய பெண்கள் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழலை பாஜக ஆட்சி உருவாக்கியிருக்கிறது" என தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரியங்கா காந்தி "இந்திய பெண்களின் உரிமை பற்றி நான் பேசப் போகிறேன். நீங்களே என் தாய், என் சகோதரி. இங்கே இருப்பதை பெருமையாக நினைக்கிறேன்." என தமிழில் தனது உரையை தொடங்கினார். மேலும், பிரியங்கா காந்தி தனது உரைகளுக்கு இடையே தமிழில் பேசி அசத்தினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், "32 ஆண்டுகளுக்கு முன்பு, என் வாழ்வின் இருண்ட இரவில், நான் முதன்முதலில் தமிழக மண்ணில் கால் வைத்தேன். நான் என் தந்தையின் சிதைந்த உடலை சேகரிக்க வந்தேன். சில மணி நேரங்களுக்கு முன் தான், என் தந்தை கொல்லப்பட்டார். நானும் என் அம்மாவும் விமானத்தின் படிக்கட்டுகளில் இறங்கும்போது, ​​பெண்கள் கூட்டம் எங்களைச் சூழ்ந்துகொண்டு என் அம்மாவை தங்கள் கைகளில் பிடித்துக் கொண்டது. எனக்கும் தமிழ்நாட்டுப் பெண்களுக்கும் இடையே விலக்கவோ அழிக்கவோ முடியாத ஒரு பிணைப்பை அது ஏற்படுத்தியது

பெண்களே இந்தியாவின் தூண்கள். பெண்களின் செயல்திறனே தேசத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லும். பெண்களை மையமாக வைத்து தான் குடும்பம் கட்டமைக்கப்படுகிறது. இந்தியாவில் பெண்கள் பல்வேறு அடக்குமுறைகளை சந்திக்கிறார்கள். இன்றும் பெண்களின் அதிகாரம் பறிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. பல தலைமுறைகளை தாண்டி நீடிக்கும் அடக்குமுறையிலிருந்து விடுபட பெண்களாகிய நீங்கள் தொடர்ந்து போராடி வருகிறீர்கள்.

சமூக மாற்றத்திற்கான புரட்சி இங்கே தான் உருவானது. ’பெண் ஏன் அடிமையானாள்’ என்று 100 ஆண்டுகளுக்கு முன்பே கேள்வி எழுப்பியவர் பெரியார். பெண் உரிமைக்காக 100 ஆண்டுகளுக்கு முன்பே குரல் கொடுத்தவர் பெரியார். சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டதை எதிர்த்துப் பல கட்டுரைகளை பெரியார் எழுதி உள்ளார். அண்ணாவும், கலைஞரும் பெரியார் வழியில் பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தனர். சமத்துவத்தை முழுமையாக நாம் பெற்றிட இன்னும் உழைத்திட வேண்டும். உடனடியாக மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்த வேண்டும். பெண்களுக்கான முக்கியத்துவத்தை அரசியலில் அதிகமாக்க வேண்டும்.

அடக்குமுறைகளுக்கு எதிராக பெண்களின் சகிப்புத் தன்மையை புகழ்ந்து பேசுவதை நிறுத்த வேண்டும். பெண்கள் மனித குலத்திற்கே ஆதாரமாக விளங்குகின்றனர். பெண்கள் ஒன்று திரண்டால் எந்த சக்தியும் அதற்கு எதிராக நிற்காது. அன்பையும், போராடும் குணத்தையும் சமூகத்துக்கு கற்றுக் கொடுத்ததே பெண்கள் தான். பெண்கள் சமத்துவத்தை பெற முடியாத நிலை இருந்து வருகிறது. மாற்றத்திற்கான சரியான தளத்தில்தான் நாம் இங்கு நின்று கொண்டு உள்ளோம். கலைஞரின் நூற்றாண்டை கொண்டாடுவதற்காக நாம் இங்கு திரண்டு உள்ளோம்." இவ்வாறு பிரியங்கா காந்தி உரையாற்றினார்.

இந்த மாநாட்டில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, " இந்த மகளிர் உரிமை மாநாட்டிற்கு அழைத்த முதலமைச்சருக்கு நன்றி. வாழ்க்கை முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு உழைத்தவர் கலைஞர். கவிஞர், எழுத்தாளர் என பன்முக தன்மை கொண்டவர். பல போராட்டங்கள் இருந்தாலும் நீண்ட நெறிய போராட்டத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் இந்திய பெண்கள் பல துறைகளில் சிறப்பாக திகழ்ந்து வருகின்றனர். ஏழை எளிய சகோதரிகள் பல போராட்டங்களை தாண்டி தான் சமத்துவ சாதனைகளை நிகழ்த்த முடிகிறது.

ஒரு பெண்ணிற்கு கல்வி கற்றுக்கொடுத்தால் குடும்பத்திற்கே கல்வி கற்றுக் கொடுத்ததாகும். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்று நிறைவேறி இருப்பதற்கு காரணமாக இருந்தவர் ராஜீவ் காந்திதான். அவர் காட்டிய பாதையில் இன்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்கும் திமுக அரசின் முன்னெடுப்புகளால் தமிழ்நாட்டை இந்தியாவே புகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு மகளிருக்கான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தாய் - சேய் இறப்பு விகிதம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் குறைவாக உள்ளது.

ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கலைஞரின் ஆட்சியில் தான் காவல் துறையில் பெண்கள் என்ற உரிமையை கொண்டு வந்தார். தற்போது இருக்கும் காவல்துறையில் 4-ல் ஒரு பங்கு காவல்துறையில் பெண்களாக இருப்பது பெருமைக்குரியது. மற்றொரு முக்கியமான சீர்திருத்தம். அரசு பணியில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30 சதவிகிதம். அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 40 சதவிகிதமாக உயர்த்தி உள்ளார். இந்தியா கூட்டமைப்பு பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை நிச்சயமாக நிறைவேற்றிய தீரும். அனைவரும் சேர்ந்து போராடுவோம் நாம் அனைவரும் இணைந்து நிச்சயமாக இதனை சாதிப்போம்" என தெரிவித்தார்.

‘மகளிர் உரிமை மாநாட்டு’க்குத் தலைமை தாங்கி ஆற்றிய முதல்வரும் திமுகழக த்லைவருமான மு.க ஸ்டாலின் உரையின் விவரம்

பெண்ணினத்தின் எழுச்சியின் அடையாளமாக, இந்த மாநாட்டை ஒரு ‘மாநில மாநாடு’ போல் ஏற்பாடு செய்து, இதை எழுச்சியோடு நடத்திக் கொண்டிருக்கிறார் நம்முடைய தங்கை கனிமொழி அவர்கள். அவர் கர்ஜனை மொழியாக - கனல் மொழியாக இப்போது நாடாளுமன்றத்தில் முழங்கி வருவதைப் பார்க்கும்போது, கழகத் தலைவராக மட்டுமல்ல, அண்ணனாகவும் நான் மிகுந்த பெருமை அடைந்து வருகிறேன். இந்த மகளிர் உரிமை மாநாட்டைத் தடையின்றி ஓடும் மாரத்தான் ஓட்டம் போல் நம்முடைய மாண்புமிகு அமைச்சர் மா.சு அவர்கள் துணை நின்று ஏற்பாடு செய்திருக்கிறார். அவர் மட்டுமல்ல, நம்முடைய மாண்புமிகு அமைச்சர் செயல்வீரர் தா.மோ.அன்பரசன் அவர்களும் துணை நின்று தன்னுடைய கடமையை நிறைவேற்றித் தந்திருக்கிறார். அதற்காக முதலில் நான் அவர்களை எல்லாம் வாழ்த்துகிறேன்.

மகளிரணிச் செயலாளர் ஹெலன் டேவிட்சன் - மகளிர் தொண்டரணிச் செயலாளர் நாமக்கல் ராணி உள்ளிட்ட மகளிரணி நிர்வாகிகள் அனைவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இருக்கும் பெரும்பாலான மாநிலத்தைச் சேர்ந்த பெண் தலைவர்களை அழைத்து வந்து, ஏற்றத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு, தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடாக மட்டுமல்ல - இந்தியப் பெண்களின் மாநாடாக அமைந்துள்ளது என்பதை நான் பெருமையோடு பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன். இதுவரை ‘சென்னை சங்கமம்‘ நடத்திக் காட்டிய தங்கை கனிமொழி அவர்கள், இப்போது இந்தியச் சங்கமத்தை நடத்திக் காட்டி இருக்கிறார். இதுதான் வித்தியாசம். இவை அனைத்துக்கும் மகுடம் வைப்பது போல அன்னை சோனியா காந்தி அவர்கள் வருகை தந்துள்ளார்கள்.

‘நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சியைத் தருக!’ என்று 1980-ஆம் ஆண்டு இந்திரா அம்மையாரைச் சுட்டிக்காட்டிச் சொன்ன தலைவர் கலைஞர் அவர்கள், 2004-ஆம் ஆண்டில், ‘இந்திராவின் மருமகளே வருக! இந்தியாவின் திருமகளே வெல்க!’ என்று வரவேற்றுச் சொன்னார். தலைவர் கலைஞர் சொன்னதைப் போலவே நாம் நாற்பதுக்கு நாற்பது வெல்ல, அகில இந்திய அளவில் காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றது. அப்போது தனக்காக காத்திருந்த பிரதமர் பதவியை மறுத்து இந்திய அரசியல் வானில் ஒரு கம்பீரப் பெண்மணி என நின்றவர் அன்னை சோனியா காந்தி அவர்கள். அப்போது அன்னை சோனியா காந்தி அவர்கள்தான் ஆட்சிக்குத் தலைமை வகித்து பிரதமராக வேண்டும் என்று முன்மொழிந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். அது வரலாறு.

When Thalaivar Kalaignar left us to his resting place, Madam Sonia Gandhi sent a letter to me. (தலைவர் கலைஞர் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து அவர் ஓய்விடத்துக்குச் சென்றபோது, அன்னை சோனியா காந்தி அவர்கள் எனக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.)

She wrote, “For me, Kalaignar’s loss is very personal. He always showed me great kindness and consideration, which I can never forget. He was like a father figure to me.” (அதில் அவர், “கலைஞர் அவர்களின் மறைவு எனக்குத் தனிப்பட்ட முறையிலும் இழப்பாகும். என் மீது அவர் எப்போதுமே மிகுந்த கனிவும் அக்கறையும் கொண்டிருந்ததை நான் எப்போதுமே மறக்க இயலாது. அவர் எனக்கு ஒரு தந்தையைப் போன்றவர்” என்று குறிப்பிட்டிருந்தார்.) அத்தகைய ஆழமான குடும்பப் பாச நட்பைக் கொண்டவர் அன்னை சோனியா காந்தி அவர்கள். அவரும் - இளம் அரசியல் ஆளுமையாக மிளிரும் அருமைச் சகோதரி பிரியங்கா காந்தி அவர்களும் இங்கு வந்திருப்பது நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தன்னிகரில்லா மெஹபூபா முப்தி அவர்கள் ஒரு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர். சுப்ரியா சுலே எழுந்தாலே நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வினர் அஞ்சி நடுங்குவார்கள்.

பீகாரில் இருந்து அருமை நண்பர் நிதிஷ்குமாரின் குரலை எதிரொலிக்க லெஷி சிங் வந்திருக்கிறார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எண்ணத்தைச் சொல்வதற்கு டெல்லி சட்டப்பேரவை துணைத் தலைவர் ராக்கி பிட்லன் வந்திருக்கிறார். சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அருமை நண்பர் அகிலேஷ் யாதவ் அவர்களது மனைவியுமான டிம்பிள் யாதவ் அவர்களும், அக்கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவர் ஜூஹி சிங் அவர்களும் வருகை தந்துள்ளார்கள். மேற்கு வங்கப் பெண் சிங்கம் மமதா பானர்ஜியின் பிரதிநிதியாக சுஷ்மிதா தேவ் வருகை தந்துள்ளார். இடதுசாரி இயக்கங்களின் பிரதிநிதியாக சுபாஷினி அலியும், ஆனி ராஜாவும் இடம்பெற்றுள்ளார்கள். எனவே இந்த மேடையே இந்தியா கூட்டணியாக காட்சியளிக்கிறது.

I would like to request all the leaders present on the dais... The BJP can be defeated only through unity. Tamil Nadu has shown this since the 2019 elections. A united alliance, like the one in Tamil Nadu, should be formed in every state across India. (மேடையில் இருக்கும் தலைவர்கள் அனைவருக்கும் நான் வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். பா.ஜ.க.வை ஒற்றுமையின் மூலமாக மட்டுமே வீழ்த்த முடியும். தமிழ்நாடு இதை 2019 தேர்தல் முதலே நிரூபித்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ளது போல ஒன்றுபட்ட கூட்டணி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்பட வேண்டும்.)

If the anti-BJP parties can unite and rise above the minor differences, we can surely defeat the BJP, which is against the interests of the people of India.

I urge our sisters present here to relay this message to their party leaders! (பா.ஜ.க.வை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளும் நமக்கிடையேயான சிறிய வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு நின்றால், நம்மால் நிச்சயம் இந்திய மக்களுக்கு எதிரான சக்தியான பா.ஜ.க.வை வீழ்த்த முடியும். இங்கே வருகை தந்துள்ள சகோதரிகள் இந்தச் செய்தியை உங்கள் கட்சித் தலைவர்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.)

பாரதீய ஜனதா கட்சியைத் தோற்கடிப்பது என்பது, இந்தியாவில் இயங்கும் அனைத்து ஜனநாயக சக்திகளின் வரலாற்றுக் கடமை! மகளிர் உரிமையைக் காக்க மாநாடு கூட்டி இருக்கிறார் கனிமொழி. மகளிர் உரிமை மட்டுமா? பாஜக ஆட்சியில் அனைத்து மக்களது உரிமைகளும் பறிக்கப்பட்டு விட்டது. இன்றைக்கு நாம் பார்க்கும் நாடாளுமன்ற அமைப்பு முறை இருக்குமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களாட்சி இருக்குமா? என்ற கேள்வி பெரிதாக எழுந்து வருகிறது. ஒரே நாடு - ஒரே மொழி - ஒரே மதம் - ஒரே பண்பாடு - ஒரே தேர்தல் - ஒரே தேர்வு - ஒரே உணவு என்ற பெயரால் ஒற்றைக் கட்சி ஆட்சியைக் கொண்டு வரப்பார்க்கிறார் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். அது நடந்தால், ஒரே மனிதர் என்ற எதேச்சாதிகாரத்துக்கு அது வழிவகுக்கும். எனவேதான் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை முற்றிலுமாகத் தோல்வி அடையச் செய்ய வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் பெண்களை ஏமாற்ற, மகளிருக்கு நாடாளுமன்றம் - சட்டமன்றங்களில் 33 விழுக்காடு இடஒதுக்கீடு என்று சட்டம் கொண்டு வந்ததைப் போல ஏமாற்றுகிறார்கள். இங்கு உரையாற்றிய அத்தனை பேரும் மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள். எனவே நான் அதிகம் விளக்கம் சொல்ல விரும்பவில்லை. 33 விழுக்காடு இடஒதுக்கீடு பெண்களுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்ற சதி எண்ணத்தோடுதான் இந்தச் சட்டத்தையே பா.ஜ.க. கொண்டு வந்திருக்கிறது என்று நான் கருதுகிறேன். அப்படித்தான் எல்லோருக்கும் எண்ணம் வருகிறது.

‘நடைபெற இருக்கும் நாடாளுமன்ற - சட்டமன்றத் தேர்தலில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படும்‘ என்று இந்த சட்டம் சொல்லி இருந்தால் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நாமெல்லாம் பாராட்டலாம். * மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடிந்த பிறகு - அதை வைத்து தொகுதி மறுவரையறை முடிந்த பிறகு - என்று சொல்கிறார்கள். பழைய படங்களில் “என் கையில் உள்ளதை நான் தரவேண்டுமானால் ஏழு மலையைச் சுற்றி வா! ஏழு கடலைச் சுற்றி வா!” என்று பூதம் சொல்வதாகக் கதை சொல்வார்கள் அல்லவா? அது போன்ற கப்சா சட்டத்தை மோடி நிறைவேற்றி விட்டு, பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு கொடுத்துவிட்டதாக பிரதமர் சொல்லிக் கொள்கிறார்.

2029-ஆம் ஆண்டுதான் இந்த இடஒதுக்கீடு கிடைக்கும் என்றும், 2034-ஆம் ஆண்டு கூட ஆகலாம் என்றும் கணக்கிட்டுச் சொல்கிறார்கள். எதுவாக இருந்தாலும் 2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு மோடி ஆட்சியில் இருக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள்.

1996-ஆம் ஆண்டு தி.மு.க. - காங்கிரஸ் ஆதரித்த ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டபோது இந்த நிபந்தனைகளை நாம் விதிக்கவில்லை. 2010-ஆம் ஆண்டும் நமது கூட்டணி அரசு இப்படி ஒரு சட்டத்தை கொண்டு வந்தபோதும் இது மாதிரியான நிபந்தனைகளை விதிக்கவில்லை. இப்போது பா.ஜ.க. நிபந்தனை போடுகிறது என்றால் அவர்கள் உண்மையான அக்கறையுடன் இதனை கொண்டு வரவில்லை.

மகளிர் எந்த உரிமைகளையும் பெற்றுவிடக் கூடாது, வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டும் என்று நினைக்கும் கட்சிதான் பா.ஜ.க. அன்னை சோனியா காந்தி அவர்களும் - பிரியங்கா காந்தி அவர்களும் இந்த மேடையில் இருக்கிறார்கள். இங்கு ஒரு விஷயத்தை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். அவரே பேசுகிறபோது சொன்னார், பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள்தான், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை முதன்முதலாக உறுதி செய்தார். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை முதன்முதலாக 1996-ஆம் ஆண்டு வழங்கியவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். இப்போது உள்ளாட்சியில் 50 விழுக்காட்டில் பெண்கள் பொறுப்பில் இருக்கிறார்கள். பா.ஜ.க. கொண்டு வந்த சட்டத்தில், இன்னொரு முக்கியமான விஷயம், இதர பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கும் - சிறுபான்மையின பெண்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கவில்லை. அப்படி வழங்கினால்தான் ஏழை எளிய - விளிம்பு நிலை மக்களின் குரல் சட்டமன்றத்திலும் - நாடாளுமன்றத்திலும் ஒலிக்கும். அப்படி ஒலித்துவிடக் கூடாது என்று பா.ஜ.க. நினைக்கிறது.

இதை பா.ஜ.க.வின் அரசியல் தந்திரமாக மட்டுமல்ல, அரசியல் சதியாகவும்தான் பார்க்க வேண்டியுள்ளது. இதனை நாம் சுட்டிக் காட்டினால், ஒரு அரிய கருத்தைப் பிரதமர் அள்ளி விடுகிறார். அதாவது, பெண்களை சாதிரீதியாகப் பிளவுபடுத்தப் பார்க்கிறோமாம். சாதிரீதியாக, மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்துவது யார் என அனைவருக்கும் தெரியும்.

இடஒதுக்கீடு நாம் கேட்கிறோம் என்றால், சாதிரீதியாகப் பிரிப்பதற்காகவா கேட்கிறோம் என்பதல்ல. அனைத்து மகளிரும் எல்லாவித உரிமைகளும் பெற்றவர்களாக உயர வேண்டும் என்பதற்காகத்தான். இதை விட்டுக் கொடுத்துவிட்டால் - அடுத்தடுத்து சமூகநீதியைக் காவு வாங்கி விடுவார்கள். எந்தச் சூழலிலும் சமூகநீதியை நாம் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது. இதுதான் நமக்கு இருக்க வேண்டிய உறுதி. ராகுல் காந்தி அவர்கள் சமூகநீதிக் குரலைத் தான் தொடர்ந்து எதிரொலித்து வருகிறார். இந்தியா கூட்டணி என்பது தேர்தல் கூட்டணியாக மட்டுமல்ல - கொள்கைக் கூட்டணியாக அமைந்துள்ளது. சமூகநீதி - மதச்சார்பின்மை - மாநில சுயாட்சி - கூட்டாட்சிக் கருத்தியல் அனைவர்க்குமான அரசியல் பங்கீடு என்ற கோட்பாடுகளைக் கொண்டதாக இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைப்பதன் மூலமாக மகளிர் உரிமை மட்டுமல்ல - அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் கிடைக்கும் இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும்.

சொத்தில் சம உரிமை, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு, ஆரம்பப் பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக பெண்களைத்தான் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்ற சட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித் தொகை, விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம், ஒரு ஏழை-எளிய குடும்பத்தில் பிறந்திருக்கும் பெண்ணுக்கு திருமணம் என்றால், அந்தப் பெண்ணுக்கு நிதி உதவி செய்யும் ஒரு அற்புதமான திட்டம், இப்போது மகளிர் உரிமைத் தொகை – கடந்த மாதம் 15-ஆம் தேதி, 14-ஆம் தேதி இரவே சென்று சேர்ந்துவிட்டது. இந்த மாதம் 15-ஆம் தேதி வரப்போகிறது – 14-ஆம் தேதி இரவே வந்து சேரப்போகிறது. எனவே மாதாமாதம் ஆயிரம் ரூபாய். உதவித் தொகை அல்ல, பெண்களே… அது உங்களுக்கு இருக்கும் உரிமைத் தொகை. மறந்து விடாதீர்கள்.

பேருந்துகளில் விடியல் பயணம், பெண் அர்ச்சகர்கள், ஓதுவார்கள் நியமனம் - இப்படி தமிழ்நாட்டு பெண்களுக்கு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டும் நமது திராவிட மாடல் கொள்கைகள் இந்தியா முழுமைக்கும் பரவும் நாளே, மகளிர் உரிமை பெற்ற நாளாக அமையும். அதற்கான அடித்தளத்தை உருவாக்கும் இந்த மாநாட்டை நடத்திக் காட்டியிருக்கும் என்னுடைய அருமை தங்கை கனிமொழிக்கும் – அவருக்கு துணை நின்ற மகளிரணி நிர்வாகிகளுக்கும் என்னுடைய வாழ்த்துகள், பாராட்டுகள். வாழ்க! வாழ்க! INDIA வாழ்க! INDIA கூட்டணி வெல்க! நன்றி வணக்கம்!~ என்று தெரிவித்தார்

Tags :
Advertisement