For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

விஜயகாந்த்: ஒரு அரசியல் பார்வை!

08:44 PM Dec 28, 2023 IST | admin
விஜயகாந்த்  ஒரு அரசியல் பார்வை
Advertisement

னது சினிமாத் தொழிலிலும், தர்ம காரியங்களிலும் மகா சிரத்தையாக வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டிக் கொண்டிருந்த போது, இந்த மதுரை வீரனை உசுப்பி விட்டது, அன்றைய சென்னை மேயரும், இன்றைய முதல்வருமான ஸ்டாலின்தான். இன்றைய கோயம்பேடு மேம்பாலம் சென்றால், அங்கே எந்த ஒரு பொறியியல் டிசைனும் இன்றி, மகா கேவலமாக ஒரு சிசர் கிராசிங் அண்ணா நகருக்கு வலது புறம் ஒரு பாலம் செல்லும். ஆளும் திமுகவிற்கு எதிராகப் பேசினார் என்ற ஒரே காரணத்திற்காக அவரது கல்யாண மண்டபத்தை வேண்டுமென்றே உடைத்து பாலம் கட்டப்பட்டது.மிகவும் கோபமடைந்த விஜயகாந்த் தேமுதிக கட்சியைத் தொடங்கி, அடுத்த தேர்தலில் விருத்தாசலத்தில் சட்ட சபைக்குப் போட்டியிட்டு வென்றார். ஒற்றை ஆளாக சட்ட சபையில் திமுகவிற்கு எதிராக முழங்கினார்.

Advertisement

அடுத்து வந்த 2011 தேர்தலில் மிகப் பரபரப்பாக அவரது கட்சி பேசப்பட்டது. திமுக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு 63 சீட்கள் தர, அதே எண்ணிக்கை வேண்டும் என்று ஜெ.வுடன் போராடி 41 சீட்கள் பெற்று அதில் 29 இடங்களில் ஜெயித்து, தனது கட்சியை, தமிழகத்தில் காங்கிரசுக்கும் மேலாக மூன்றாவது கட்சியாக நிலை நிறுத்தினார்.அவரது கட்சியினரே சிலர் அவரது முதுகில் குத்தி, எதிர்ப்பு அணியில் அமர்ந்தனர் (நடிகர் அருண் பாண்டியன், மாஃபா பாண்டியராஜன் அடக்கம்). அவருக்கு யாருடைய தவறான அரசியல் வழிகாட்டுதலின் விளைவோ என்னவோ, ஜெ.வை, பதவியேற்ற 100வது நாளிலேயே முறைத்துக் கொண்டார். இதனால் அவரும் ஜெ. க்கு இரண்டாவது எதிரியானார்.

Advertisement

அடுத்து வந்த பஞ்சாயத்துத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில், விசிக, வைகோவுடன் கைகோர்த்து தோற்றார். பின்னர் 2016 தேர்தலில் திமுகவுடன் கூட்டு சேர்வதற்கான சில அறிகுறிகளை விஜயகாந்தின் கூட்டாளிகள் காண்பித்தனர். கருணாநிதி கூட 'பழம் நழுவி பாலில் விழக் காத்திருக்கிறேன்' என்றார்.

ஆனால், மறந்தும் கூட திமுகவுடன் கூட்டணி சேரவில்லை. அவர் யாருடன் கூட்டு சேர்ந்தால் நல்லது என்பதை சோ முதற்கொண்டு பல அரசியல் விமர்சகர்கள் கூறியிருந்தாலும், அவர் தானாகவே ஒரு முடிவை எடுத்து அதில் பிடிவாதமாக இருந்தார். 2016க்குப் பின் அவரது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவரது மனைவி முடிந்த வரை, விஜயகாந்தின் முகத்தைக் காட்டி அரசியல் செய்ய முயன்றும் பலனின்றிப் போனது.

திமுகவின் 2016 ஆட்சிக் கனவைக் கலைத்ததில் 100% பங்கு தேமுதிகவிற்கு உண்டு. கூட்டு சேர்ந்திருந்தால் திமுக வென்றிருக்கும்.

விதி! 'தூரத்து இடி முழக்கம்' எனும் படத்தில் உதயமாகிய இந்த மதுரை நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி நாயுடு எனும் கறுப்பு நிலா விஜயகாந்த், ஒரு கட்டிட இடிப்பில் கோபித்து, அரசியலில் ஒரு கலக்கு கலக்கி, உடல் உபாதைகளை அனுபவித்து, இன்று மூச்சை அடக்கிக் கொண்டார் பலரை வாழ வைத்த, கேப்டன் எனும் 'தர்மதுரை'!

டிமி

Tags :
Advertisement