For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஆடிப்பெருக்கின் அற்புதம்!

01:36 PM Aug 02, 2024 IST | admin
ஆடிப்பெருக்கின்  அற்புதம்
Advertisement

டி மாதத்தில் பொதுவாக மழை பெய்யும் மழையின் காரணமாக ஆறுகளில் புதுவெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதனை ஆற்றுப்பெருக்கு என்பார்கள். இந்த புதுவெள்ளத்தின் காரணமாக ஆறுகளும், நீர் நிலைகளும் நிரம்பி காணப்படும். ஆடி மாதத்தில் 18–ம் நாளை ஆடிப்பெருக்கு என்று கொண்டாடுவார்கள். இந்த தினத்தை 18–ம் பெருக்கு என்றும் கூறுவதுண்டு.

Advertisement

காவிரி, பெண்ணை, பொருணை ஆகிய மூன்று நதிகளிலும் ஆடிப் பதினெட்டு கொண்டாடுவதை, சிலர் மூவாறு ‘பதினெட்டு’ என்று கூறுவார்கள். தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர்வரத்து அதிகரிக்கும். விவசாயம் செய்வதற்கு ஏதுவாக, நதிகளும் நீர் நிரம்பி காணப்படும். பயிர் செழிக்க வளம் அருளும் காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில்தான் இந்த ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஆற்றங்கரை மற்றும் நீர்நிலைகளின் கரைகளில் மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.அன்றைய தினம் நீர்நிலைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பூஜைகள் செய்து ஆற்றின் கரையில் நின்று வழிபட்டு, விவசாயத்தை தொடங்குவார்கள். மேலும் ஆடிப் பெருக்கு நாளில் ஆற்றங்கரையில் மக்கள் பெரும் திரளாக கூடுவார்கள். கரையோரங்களில் ஒரு இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தை பசுஞ்சாணத்தால் மெழுகி, தரையில் இலை விரித்து, பிள்ளையார் வைத்து வழிபாடு செய்வார்கள்.

Advertisement

இவ்வாறு வழிபாடு செய்வதனால், ஆற்றில் நீர் பெருகியது போல, மக்களின் மனதிலும், வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும் என்பது நம்பிக்கையாகும். சிலர் கோவில்களுக்கு சென்றும் வழிபாடு செய்வார்கள். ஆற்றங்கரையில் கூடும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து பல வகையான சாதங்கள் செய்து கொண்டு வந்து, தங்கள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும், சுற்றத்தாருடனும் அமர்ந்து மகிழ்ச்சியாக உணவு உண்டு சந்தோஷத்தை பங்கிட்டுக் கொள்வார்கள். இந்த விழாவில் சிறப்பு அம்சமாக, ஆடிப்பெருக்கு அன்று ஆற்றங்கரையில் வைத்து சுமங்கலி பெண்கள் தாலிக்கு புது மஞ்சள் கயிறு மாற்றிக்கொள்வார்கள். ஏற்கனவே கழுத்தில் இருந்த தாலிக்கயிற்றை, ஆற்றில் விட்டு விட்டு, புதிய மஞ்சள் கயிற்றில் தாலியை கோர்த்து, கணவன் மூலமோ அல்லது சுமங்கலி பெண்கள் மூலமாகவோ தங்கள் கழுத்தில் அணிந்து கொள்வார்கள். இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.

சூரியன் தென்திசை நோக்கிப் பயணப்படுவதை, தட்சிணாயன புண்ணிய காலம் என்று குறிப்பிடுவர். இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப்பணிகளைத் தொடங்குவார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்று சொல்வதுண்டு. இந்த நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும் என்பது ஐதீகம். ஆடி 18–ந் தேதி காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பர். புதுமணத் தம்பதிகள் இந்த நாளில் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வது வழக்கம். ஆறு மற்றும் நீர் நிலைகளின் ஓரம் தான் என்று இல்லை, வீட்டிலேயே கூட எளிமையான முறையில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடலாம். அதற்கு செய்ய வேண்டியது இதுதான்.

ஒரு செம்பில் சிறிதளவு அரைத்த மஞ்சளை போட வேண்டும். பின்னர் அந்த செம்பில், நிறை குடத்தில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரில் மஞ்சள் கரைந்துவிடும். வீட்டின் பூஜை அறையில் இருக்கும் திருவிளக்கில் தீபம் ஏற்றி, விளக்கின் முன்பாக செம்பு நீரை வைக்க வேண்டும். தண்ணீரில் உதிரிப்பூக்களை போட வேண்டும். தொடர்ந்து கற்பூர ஆரத்தி அல்லது நெய் தீபம் காட்டி கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில் ஊற்றி விட வேண்டும். வழிபாட்டின் போது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து படைத்து வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் வாழ்வில் வளம் கொழிக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

ஆடிப்பெருக்கு விழா, திருச்சியின் காவிரிக் கரை மற்றும் பவானி கூடுதுறை ஆகிய பகுதிகளில் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த சிறப்பு மிகுந்த நாளில், திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் ரங்கநாத பெருமாள், காவிரி அன்னைக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி சிறப்பு வாய்ந்ததாகும். காவிரி அன்னை, ரங்கநாதரின் தங்கையாக கருதப்படுகிறாள். ஆடிப்பெருக்கு நாளன்று ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பட்டு, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெறும். அங்கு அவருக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்ததும், புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை, பாக்கு, பழங்கள் முதலிய சீர் வரிசைகளை யானையின் மேல் ஏற்றி ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து அம்மா மண்டபம் படித் துறைக்குக் கொண்டு வருவார்கள். மாலை வரை அங்கு வீற்றிருக்கும் பெருமாள், காவிரி அன்னைக்கு சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்கலப் பொருட்களை வழங்குவார். அந்த பொருட்கள் அனைத்தும் ஆற்றில் விடப்படும். இந்த காட்சியை காண்பவர்களுக்கு கோடி புண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம்.

இதே போல் தென் இந்தியாவின் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் பவானி கூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் ஆடிப் பெருக்கு அன்று அதிகாலையிலேயே நடை திறக்கப்படும். மக்கள் கூடுதுறையில் நீராடிவிட்டு இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலதுகை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கல காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.

ராவணன் உள்ளிட்ட பல அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, என்ன செய்வது என்று வசிஷ்ட முனிவரிடம் ராமபிரான் கேட்டார். அதற்கு வசிஷ்டர், ‘அறுபத்தாறு கோடி தீர்த்தங்களையும் தன்னிடத்தில் கொண்டுள்ள காவிரி ஆறு, தென்னகத்தின் கங்கை என்று அழைக்கப்படுகிறது. எனவே அந்த நதியில் நீராடினால் உன் பாவ உணர்வுகள் நீங்கும்’ என்றார். அதன்படி ராமர், காவிரி ஆற்றில் நீராடி பாவங்களை போக்கிக் கொண்டார். ராமபிரான் காவிரியில் நீராடிய தினம் ஆடிப்பெருக்கு என்று புராண தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

அட்சய திரிதியை தினத்தை விட, ஆடிப்பெருக்கு சிறப்பான நன்னாளாகும். இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். ஒருவர் செய்யும் நற்செயல்களால், எவ்வாறு புண்ணியம் பெருகுகிறதோ, அதுபோல் இந்த நாளில் தொடங்கும் எந்தக் காரியமும் நன்மை அளிக்கும் வகையிலேயே நிறைவுபெறும்.நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோல் இந்நாளில் தொடங்கும் சேமிப்பும் பல மடங்காய் பெருகும் என்பர். இந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடுவோம்... !

பண்பரசு

Tags :
Advertisement