மரணத்தை மனதார ஏற்று உயிர் துறந்த சாக்ரடீஸ்!
சாக்ரடீஸ் ஏதென்சைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர் (தத்துவஞானி) ஆவார். இவர் எப்போது பிறந்தார் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவருடைய சீடர் பிளேட்டோவும் புகழ்பெற்ற தத்துவஞானி ஆவார். கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகிறார்.குட்டையான பருத்த உருவம், வழுக்கைத் தலை, வட்ட முகம், விரிந்த மூக்கு, அகன்ற வாய், ஆழ்ந்த சிந்தனையுடன் உற்றுநோக்கும் கண்கள், முழங்கால் வரை தொங்கும் தளர்ந்த அழுக்கான ஆடையுடன் இருந்த சாக்ரடீஸ்தான் "கேள்வி கேள்" என்று சொன்னதற்காக கொல்லப்பட்ட முதல் அறிவுஜீவி.
சிறுவனாக இருந்தபோதே சாக்ரடீஸ் கேள்விகள் கேட்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். எதைப்பற்றியும் கேள்வி கேட்டு, அது பற்றிய உண்மையை அறிந்து கொள்வதே சாக்ரடீசின் வழக்கமாகும். நீதி, நியாயம், ஆத்மா, கடவுள், சமூகம், அரசு, வழக்கம் என எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தினார் சாக்ரடீஸ். சாக்ரடீஸ் பொது இடங்களில் மக்களைச் சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும், அதிக நேரங்களை செலவிட்டார். ஆனால் மற்றவர்கள் சாக்ரடீஸிடம் கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாக பதில் அளிக்காமல் சாக்ரடீஸ் கேள்வி எழுப்புவார்.
ஏதாவது ஒரு பிரச்சினையை மையமாகக் கொண்டு மக்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு, அவர்களிடமிருந்தே பதிலைக் கேட்டு, அந்தப் பிரச்சினையை எழுப்பியவர்களே காரணத்தைப் புரிந்து கொள்ளுமாறு செய்வார் சாக்ரடீஸ். பிரச்சினையின் காரணத்தைத் தமது கேள்வியின் மூலம் உணரச்செய்த சாக்ரடீஸ், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் கேள்விகளைக் கேட்டார். இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள் தெளிவு பெற்றனர்; பிரச்சினையைப் புரிந்தனர். அதற்கான காரணத்தையும் அறிந்தனர். அதைப் போக்குவதற்குச் செய்ய வேண்டியவற்றையும் அவர்கள் உணர்ந்தனர். இதனால், ஏதென்ஸ் மக்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கெல்லாம் சாக்ரடீஸிடம் தெளிவு கிடைக்கும் என்று நம்பினர். சாக்ரடீஸின் எழுத்துக்களும், சொற் பொழிவுகளும் மக்களைச் சிந்திக்க வைத்தது; செயல்களில் ஈடுபடவும் அவர்களைத் தூண்டியது.
குறிப்பாக மனிதன் யார்? எப்படி வந்தான்? மனிதனின் வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் என்னவாகிறான் போன்ற கேள்விகளை சாக்ரடீஸ் எழுப்பினார். ஏதென்ஸ் நகரத்தின் மூலை முடுக்குகளில், கோயில்களில், நாடக அரங்குகளில், விளையாட்டுத் திடல், சந்தை, பொதுமக்கள் கூடுமிடங்களில் எல்லாம் சாக்ரடீஸ் பேசிக்கொண்டே இருந்தார்.``கற்பிக்கப்பட்ட எதையுமே ஏற்றுக்கொள்ளக்கூடாது, அறிவினால் சீர்தூக்கிப் பார்த்து ஏற்புடையதாக இருப்பதை மட்டுமே ஏற்க வேண்டும்” போன்ற பகுத்தறிவு சிந்தனைகளைப் பரப்பிய சாக்ரடீஸ் ஏதென்ஸின் பெரியார்.
சாக்ரடீஸ் இருக்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருப்பது சிலருக்கு எரிச்சலைத் தந்தது.சாக்ரடீஸ் தினம்தோறும் இளைஞர்களிடம் உரையாடியது கிரேக்க ஆட்சியாளர்களை கோபப்படுத்தியது. அவர் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் என்ற மேடைப் பேச்சாளனும் சாக்ரடீஸ் மீது வழக்குத் தொடுத்தனர். இதற்கு சாக்ரடீஸ் மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பே காரணமாகும். இளைஞர்களைத் தூண்டி விடுவதாகவும், மத எதிர்ப்பைக் கிளப்பி விடுவதாகவும், தனக்குப் பெருமை சேர்ப்பதற்காக சாக்ரடீஸ் தவறான வழிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்காகவும், அதன் வழியாக ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் சாக்ரடீஸ் மீது அனிடஸூம், லைகோனும், மெலிட்டஸூம் குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர்.
அறிவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட முதல் வழக்கு அது. அதில் இளைஞர்களைக் கெடுக்கிறார், கிரேக்கர்கள் தொழுது வணங்கும் கடவுள்களைத் தூற்றி, ஒரு புதுக் கடவுளைத் தானே உருவாக்குகிறார், வானத்தைப் பற்றியும் நிலத்தைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார் (ஏனெனில் அக்காலக்கட்டத்தில் கிரேக்கர்கள் இயற்கையையே கடவுளாக வழிபட்டனர்). சந்திரனை மண் என்றும் , சூரியனைக் கல் என்றும் சொல்கிறார். புதிய மதக் கோட்பாடுகளைப் புகுத்துகிறார். சாக்ரடீஸ் மிகவும் தீயவர், இவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கூறினார்கள்.
குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போதுசாக்ரடீஸுக்கு 70 வயது. அப்போது இதற்கு பதில் அளித்த சாக்ரடீஸ்,'என்னை வழக்கு மன்றத்தில் நிறுத்திய என் எதிரிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி குறுக்கு விசாரணை செய்ய நான் விரும்பவில்லை. என்னுடைய நியாயமான எதிரிகள் அநீதியும் அறிவின்மையும் தான்".
தீர்ப்பு கூறும் தருணம் வந்தது. மரணம், மன்னிப்பு என்ற இரண்டு பெட்டிகள் வைக்கப்பட்டன . நீதிக் குழுவின் உறுப்பினர்கள் 501பேர் வாக்குப்பதிவு செய்யத் தொடங்குகின்றனர்.220 பேர் சாக்ரடீஸை மன்னித்து விடுமாறும், 281 பேர் மரண தண்டனை அளிக்கவும் வாக்களித்தனர். நீதிபதிகள் சாக்ரடீஸ் குற்றவாளி தான் என்று தீர்ப்புக்கூறி அவருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை சாக்ரடீஸையே அறிவிக்கும்படி அறிவித்தனர். தாம் எந்தவிதக் குற்றமும் செய்யவில்லை என்றும்; தம் தாய் திரு நாட்டிற்குத் தமது செயல்களின் மூலம் நன்மையே செய்ததாகவும், அதன் பொருட்டு இந்த நீதிமன்றம் தமக்குத் தண்டனைக்குப் பதிலாக பாராட்டும், பரிசும்தான் கொடுத்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டார் சாக்ரடீஸ்.
ஆனால் சாக்ரடீஸை விஷம் கொடுத்துக் கொல்ல வேண்டும் என்று கி.மு. 339ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 15ஆம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பின் தண்டனையை நிறைவேற்றும் நாள் வந்தது .சாக்ரடீஸ் கை கால் சங்கிலிகள் விலக்கப்படுகின்றன. எப்போதும் விஷம் கொண்டுவருபவனின் கை அன்று நடுங்குகிறது. தான் எப்படி விஷத்தைப் பருக வேண்டும்? எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டறிகிறார் சாக்ரடீஸ். பிறகு குளித்துவிட்டு வருகிறார். சிறைக் காவலன் சொல்லியபடி ஹெம்லாக் என்ற அந்த விஷத்தை மிச்சமின்றி பருகுகிறார். ஓரிடத்தில் நிற்காமல் அறை முழுக்க நடக்கிறார். கால்கள் சோர்ந்துபோக படுக்கையில் அமர்கிறார். சோர்ந்துபோன பிறகு கால் நீட்டி படுக்கிறார். அவரின் கால்களை அழுத்திவிட்ட காவலன், “நான் அழுத்துவது உங்களுக்குத் தெரிகிறதா?” என்கிறான். “இல்லை” என்கிறார். காவலன் அழுத்துவதை நிறுத்திக்கொள்கிறான்.
கால்களில் பரவிய விஷம், இதயத்துக்கு வருகிறது. சாக்ரடீஸுக்கு மூச்சடைப்பதுபோல் இருக்கிறது. போர்த்தி இருந்த போர்வையை விலக்கி, நண்பன் கிரிட்டோவை அழைக்கிறார். “கிரிட்டோ, நான் அஸ்குலபியஸ் தெய்வத்துக்கு சேவல் பலியிடுவதாக வேண்டிக்கொண்ட வேண்டுதல் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. மறக்காமல் அக்கடனை நிறைவேற்றிவிடு” என்று சொல்கிறார். சில நிமிடங்களில் உயிர் பிரிகிறது. அறிவின் திடத்தை உலகத்துக்கு நிரூபிப்பதற்காக ஒரு கோப்பை விஷத்தை, தேநீர் பருகுவதுபோல் நிதானமாகப்பருகித் தன்னையே பலியிட்டுக்கொண்டார் சாக்ரடீஸ்.