For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

நிஜமாகவே 'நீர்வழிப் படூஉம்' நாவலுக்காக தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது!-

06:42 PM Dec 20, 2023 IST | admin
நிஜமாகவே  நீர்வழிப் படூஉம்  நாவலுக்காக தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது
Advertisement

த்திய அரசின் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில், (கடந்த டிசம்பர் இரண்டாம் வாரத்திலேயே பரவியபடி- இப்போது நிஜமாலுமே) ’ நீர் வழிப்படூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

சாகித்ய அகாடமி விருதுகள் இலக்கிய உலகிற்கு அவர்களின் பங்களிப்பிற்காக எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த மற்றும் மிகப்பெரிய கௌரவமாகும். சாகித்ய அகாடமி விருது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டு அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் ஆங்கிலம் மற்றும் ராஜஸ்தானி ஆகிய மொழிகளுக்கும் வழங்கப்படுகிறது. இந்த 24 மொழிகளில் உள்ள இலக்கியப் படைப்புகள் பல்வேறு அளவுருக்களில் பகுப்பாய்வு செய்யப்பட்டு மதிப்பீடு செய்யப்படுகின்றன, அதே நேரத்தில் அவற்றின் சிறந்த தகுதி மற்றும் சிறப்பிற்காக பாராட்டப்படுகின்றன.

Advertisement

எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாகித்ய அகாடமி விருது:

ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டையை சேர்ந்த எழுத்தாளர் தேவி பாரதியின் இயற்பெயர் ராஜசேகரன். இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பல நூல்களை இயற்றியுள்ளார். நிழலின் தனிமை, அற்ற குளத்து அற்புத மீன்கள், பிறகும் ஒரு இரவு, நொய்யல் உள்ளிட்ட நாவல்களையும் இவர் இயற்றியுள்ளார். இந்தநிலையில், ’நீர் வழிப் படூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதிக்கு மத்திய அரசின் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது தேர்வு செய்யப்பட்டுள்ளது,

தேவிபாரதி பல நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், திரைப்படக் கட்டுரைகள் போன்றவற்றை எழுதி உள்ளார். குறிப்பாக தேவிபாரதியின் சிறுகதைகளில் காந்தியை பற்றிய “பிறகொரு இரவு” போன்றவை கவனிக்கப்பட்ட படைப்பாக உள்ளது. மேலும், அரசியல் கட்டுரைகளும், நெடுக்கடி நிலை மற்றும் இடதுசாரி இயக்கங்களில் செயல்பட்டதைப் பற்றிய நினைவுக்குறிப்புகளும் எழுதியிருக்கிறார்.

எழுத்தாளர் தேவபாரதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளில் ஒன்று தன்னறம். இந்த சிறுகதை 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு பலரின் வரவேற்பை பெற்றது. பலி, கண் விழுத்த மறுநாள், மூன்றாவது விலா எலும்பும் விழுதுகற்ற ஆல மரமும் போன்ற பல சிறுகதைகளை படைத்துள்ளார். புழுதிக்குள் சில சித்திரங்கள் (அரசியல் கட்டுரை), அற்ற குளத்து அற்புத மீன்கள், சினிமா பாரடைஸோ (திரைப்படக்கட்டுரை) போன்ற கட்டுரைககளையும், நிழலின் தனிமை, நட்ராஜ் மகராஜ், நீர்வழிப்படூஉம், நொய்யல் போன்ற நாவல்களையும் எழுதி உள்ளார்.

இவரின் அற்புதமான படைப்புகளுக்காக ஜெயந்தன் விருது, அறிஞர் போற்றுதும் விருது, திருச்சி தன்னறம் விருது 2022 போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். இந்த நிலையில், எழுத்தாளர் தேவிபாரதியின் “நீர்வழிப்படூஉம்” தொகுப்பு சாகித்ய அகாதெமி விருது க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நீர் வழிப்படூஉம்’ நாவல், இவருடைய மூன்றாம் நாவல். இதில், குடி நாசுவர் எனப்படும் சிறுகுடி மக்களின் வாழ்வுப்புலத்தில் ஒரு தனிமனிதனின் வாழ்க்கையின் வீழ்ச்சியை, அவனுடன் சமூகம் கொள்ளும் உறவைச் சித்தரிக்கிறது. இந்த நாவலுக்குத்தான் தற்போது சாகித்ய விருது கிடைத்திருக்கிறது’ .

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் தேவிபாரதியின் ‘நீர்வழிப் படூஉம்’ – நாவிதர் வாழ்க்கைப்பின்னணியில் எழுதப்பட்ட நாவல்.

இன்றைக்கு பத்துக்குப் பத்து அடைப்புகளுக்குள் ‘பார்பர்’ ‘அம்பட்டன்’ போன்ற பெயர்களில் புழங்கும் நாவிதர் சமூகம்தான் நமக்குத் தெரியும். ஆனால் அன்று சமூகத்தில் ஓர் இடத்துடன் இருந்திருக்கிறார்கள். அன்றைக்கு குடிநாவிதர்கள் இல்லாமல் கல்யாணமோ, கருமாதியோ, பூப்புனித நீராட்டுவிழாவோ, வளைகாப்போ எந்த ஒரு காரியமும் நடந்துவிட முடியாது. எந்தெந்த விசேஷங்களுக்கு யார்யாரை, எப்படி அழைக்க வேண்டும் என்று முடிவு செய்பவர்களும் அவர்களே. இவ்வாறு பண்ணையக்காரர்களின், பண்ணையக்காரச்சிகளின் சமூக அடுக்குகளிடையே முக்கியமான கண்ணியாக இருந்திருக்கிறார்கள் குடிநாவிதர்கள். அவர்களுக்கு ‘மருத்துவர்’ என்றொரு பெயருமுண்டு. இன்றைக்கு இருக்கும் ‘∴பேமிலி டாக்டர்’ என்று சொல்லப்படுபவர்களின் ஆதிவடிவங்கள். வீட்டில் யார் யாருக்கு என்னென்ன நோக்காடு, அதற்கான மருத்துவ முறைகள். கே.கே.பிள்ளை எழுதிய ‘தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்’ நூலில் புதிதாகக் குடியேறிய கொங்கு வேளாளர்களுக்கு அந்த ஊர் நாவிதர்கள் வேலைசெய்ய மறுத்துவிட, தங்கள் சாதியிலிருந்தே குடிநாவிதர்களை உருவாக்கிக் கொண்டதை எழுதியிருப்பார்.

தங்கைகளுக்காக உயிர் கொடுக்கும் அண்ணனாய் இருந்து மணம் முடித்து, குழந்தைகளைப் பெற்று, பெண்டாட்டி பிள்ளைகள் உட்பட எல்லோரையும் தொலைத்துத் தேடி அலைந்து, நொந்து வலிப்பு நோயால் அவதியுற்று மரிக்கும் கதைசொல்லியின் காருமாமா. லிங்கநாவிதன் என்ற அந்த சமூகத்துப் பாணனின் இழவுப்பாட்டுக்களை தங்கச்சி பாட, ஊர்கூடிச் சிறப்பாக, காருமாமாவின் காடேத்தம் நடந்து முடிவதில்தான் கதையே தொடங்குகிறது. திருப்பூருக்கருகில் உள்ள உடையாம்பாளையத்தில் உள்ள குடிநாவிதரான ஆறுமுகம் என்கிற காருமாமாவின் வாழ்க்கைச் சம்பவங்கள் கதைசொல்லியின் பார்வையில் நினைவுகூறலாக விரிகிறது. அவருடைய பிரிந்துபோன குடும்பம் அவருடைய இறப்பின்மூலமே ஒன்று சேர்கிறது.

கதைசொல்லிக்கும் அவர் அத்தை மகளுக்குமான காதல் அந்த இழவுச்சடங்குக்கு நடுவேயே இயல்பாக மலர்கிறது. பெரியவர்களெல்லாம் ஜெமினி கணேசன், சாவித்திரி என்று கிண்டலடிக்கிறார்கள். காருமாமாவின் தங்கைப் பாசமும் பாசமலர் சிவாஜி – சாவித்திரி என்றே கிண்டலடிக்கப்படுகிறது. எழுபது எண்பதுகளின் வாழ்வியலில் பிரிக்கமுடியாத ஆதிக்கம் செலுத்திய வானொலி, சினிமாவின் தாக்கங்கள்- குழந்தைகளை வேலைசெய்யும் இடத்திற்கு அழைத்துச்சென்று அவர்கள் கண்முன்னேயே பண்ணையக்காரச்சியின் அவமதிப்புக்குள்ளாகும் பெரியம்மா -சாயப்பட்டறையில் என்றைக்கோ செய்துகொள்ளப்போகும் தற்கொலைக்காக ஒளித்துவைக்கப்படும் சாயப்பொடிகள், அரசுவேலை அடித்தளச் சமூகத்தில் ஏற்படுத்திய மறுமலர்ச்சி என்று வாழ்க்கையின் பலமுகங்களைச் சித்தரிக்கும் ஆழமான பதிவு.

நாவலில் ‘தாயரக்கட்டம்’ முக்கியமான படிமமாக உள்ளது. கதாபாத்திரங்களே சுழட்டிப்போட்ட தாயக்கட்டைகள்தான் என்கிற நிலையில், இழவு வீட்டில் அவர்கள் கட்சி கட்டிக்கொண்டு ஆடுகிற ‘தாயரக்கட்டம்’ ஒரு முக்கியமான நிகழ்ச்சியை முடித்துவைக்கக் காத்திருக்கிறது. நான் படித்த நாவல்களில் மிகவும் பரபரப்பான கட்டத்தில் முடிந்த சமூக நாவல் இதுதான்.

அதேபோல் கோவை வட்டார வழக்கு இவ்வளவு விஸ்தாரமாக ஆவணப்படுத்தப் பட்டிருப்பது இந்த நாவலில்தான். அந்த வட்டார வழக்கு அறிமுகமாகாத பொதுவாசகனுக்கு அதுவே பெரியதடையும் கூட. அதேபோல நாவலில் ஆங்காங்கே காணப்படும் ஒரு பாரா அளவுக்கேயான மிகநீண்ட வாக்கியங்கள்.

Tags :
Advertisement