For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறை வெளியீடு!

01:38 PM Apr 04, 2024 IST | admin
பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறை வெளியீடு
Advertisement

பள்ளி வாகனங்களில் மாணவிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடப்பதைத் தடுக்கும் வகையில் புதிய உத்தரவை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது. இதற்காக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

Advertisement

சமீப காலங்களில் பள்ளி வாகனங்களில் நடத்துனர்களால் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக அடிக்கடி செய்திகள் உலாவி வருகின்றன. இந்த நிலையில் பள்ளி வாகனங்களுக்கான 32 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளி வாகனங்களை இயக்குவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

Advertisement

கல்வித்துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் இதோ:,

1. தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள்(பள்ளி வாகனங்கள் மற்றும் கட்டுப்படுத்துதல்) சிறப்பு விதிகள் 2012 பிரிவு 5(6)-ன்படி மாணவியர்களுக்கு இயக்கப்படும் பள்ளி வாகனங்களில் கட்டாயமாக பெண் உதவியாளர்கள் நியமிக்கப்படவேண்டும். மேலும், அனைத்துப் பள்ளி வாகனங்களிலும் ஒரு பெண் உதவியாளர் நியமிக்கப்படவேண்டும்.

2. பள்ளி வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வாகனத்தை ஓட்டும் ஓட்டுநரின் உரிமத்தினைப் பள்ளி நிர்வாகம் அவ்வப்போது சரிபார்த்து அவை காலாவதியாவதற்கு முன்பே அவற்றைப் புதுப்பிக்க அறிவுறுத்த வேண்டும்.

3. பள்ளி வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளர் நியமனத்தின் போது அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான காவல் துறை சான்று சமர்பிக்க வேண்டும். சார்ந்த மருத்துவரிடம் மருத்துவ தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

4. பள்ளி வாகன உதவியாளர்களுக்கு நியமிக்கப்பட்ட 1 மாத காலத்திற்குள் போக்குவரத்துத் துறையால் வழங்கப்படும் உதவியாளர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் சார்ந்த பயிற்சி அளிக்கப்படவேண்டும். மேலும், மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படவேண்டும்.

5. மேற்படி பயிற்சியின் போது POCSO சட்டத்தின் சாராம்சம் தெளிவாக விளக்கப்படவேண்டும்

6. வாகன ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தினமும் சுவாச சோதனை (Breath Analysis) மேற்கொள்ளப் படவேண்டும்.

7. பள்ளி வாகனங்களில் GPS மற்றும் CCTV கேமரா பொருத்தப்படவேண்டும் என பார்வை 5-ல் காணும் சுற்றறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து பள்ளி வாகனங்களிலும் GPS மற்றும் CCTV கேமரா கட்டாயமாகப் பொருத்தப்படவேண்டும்.

8. CCTV தரவுகள் அனைத்தும் குறைந்த பட்சம் 6 மாதம் காலம் பாரமரிக்கப்பட்டு பின்னர் காவல் துறையில் ஒப்படைக்கப்படவேண்டும்.

9. போக்குவரத்துத்துறையிடமிருந்து பள்ளி வாகனம் என்பதற்கான அனுமதி (School Permit) பெறப்பட்ட வாகனங்களை மட்டுமே இயக்க வேண்டும்.

10. ஒவ்வொரு வாகனத்திற்கும் தரச்சான்று (Fitness Certificate) உரிய காலத்தில் புதுப்பிக்கப் படவேண்டும்.

11. பள்ளி வாகனங்களின் தரச்சான்றினை புதுப்பிப்பதோடு அல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவிலான ஆய்வுக்குழுவின் ஆய்வுக்கும் வாகனங்களை உட்படுத்தவேண்டும்.

12. ஒவ்வொரு பள்ளி வாகனமும் காப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். காப்பீடு உரிய காலத்தில் புதுப்பிக்கப்படுவதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

13. பள்ளி வாகனத்தின் முன்னும் பின்னும் “பள்ளி வாகனம்” என பெரிய எழுத்தில் தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும்.

14. ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் முதலுதவிப்பெட்டி கண்டிப்பாக வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

15. ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் தீயணைப்புக் கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். தீயணைப்புக் கருவி உரிய காலத்தில் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

16. ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் அந்தந்த பள்ளியின் தொலைபேசி எண் எழுதப்பட்டிருக்க வேண்டும். மற்ற வாகனங்களிலிருந்து வேறுபாடாகத் தெரியும் வண்ணம் பள்ளி வாகனங்களுக்கு மஞ்சள் வண்ணம் பூசப்பட்டிருக்க வேண்டும்.

17. புத்தக பையினை பாதுகாப்பாக வைக்க இருக்கையின் அடியில் போதிய இட வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

18. ஒவ்வொரு வாகனத்திலும் விதிகளின்படி அவசரகால வழி இருக்க வேண்டும்.

19. ஒவ்வொரு பள்ளிவாகனத்திலும் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். வேகக்கட்டுப்பாட்டுக் கருவி

20. பள்ளி வாகனத்தில் முன் மற்றும் பின் சக்கரங்களில் இடையே Guarding Sheets கண்டிப்பாக பொருத்தப்படவேண்டும்

21. பள்ளி வாகன ஜன்னல்களில் துணியிலான திரைகள் அல்லது வண்ண மயமான காதிக ஒட்டிகளை ஒட்டக் கூடாது.

22. காலாவதியான வாகனங்களைப் (Condemned Vehicles) பள்ளி வாகனங்களாகப் பயன்படுத்தக் கூடாது

23. அவசர காலங்கள் அல்லது அசாதாரண சூழ்நிலைகளில் மாணவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ள அவசர கால பொத்தான் (Panic Buttons) பள்ளி வாகனங்களில் பொருத்தப்படவேண்டும்.

24. பள்ளி வாகன உட்புறத்தில் எளிதில் மாணவர்களின் பார்வையில் தெரியும் வகையில் அவசர கால உதவி எண்களான 14417 மற்றும் 1098 குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

25. எந்தவொரு பள்ளி வாகனத்திலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் பள்ளிக் குழந்தைகளை ஏற்றக் கூடாது.

26. பள்ளி வாகனத்தில் குழந்தைகள் ஏறும் போதும், பள்ளி வாகனத்திலிருந்து குழந்தைகள் இறங்கிச் செல்லும் போதும் வாகனத்திற்கு அருகிலோ,
பின்புறமோ குழுந்தைகள் எவரும் இல்லை என்பதை உறுதிசெய்த
பின்னரே வாகனம் இயக்கப்பட வேண்டும்.

27. பள்ளி வாகனத்திலிருந்து குழந்தைகளை அவர்களது இருப்பிடத்தில் இறக்கிவிடும்போது பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் குழந்தைகளை ஒப்படைத்த பின்னரே அங்கிருந்து வாகனத்தை இயக்க வேண்டும்.

28.பள்ளி வாகனத்தில் குழந்தைகள் ஏற்றப்பட்ட பின்னர் கதவு மூடப்பட்டு அவர்கள் இருக்கையில் அமர்ந்த பின்னர்தான் வாகனத்தை இயக்க வேண்டும்

29. எக்காரணம் கொண்டும் பள்ளியை ஒட்டியுள்ள சாலை, மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றில் வாகனங்களை நிறுத்திக் குழந்தைகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது.

30. “மாணவர் மனசு” புகார் பெட்டியில் மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்யும் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி வெளிப்படுத்த பள்ளி முதல்வர்கள்/வகுப்பு ஆசிரியர்கள் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளித் தலைமையாசிரியர்/ பள்ளி முதல்வர் மற்றும் பாதுகாப்பு குழுவைச்(SSAC) சேர்ந்த 2 நபர்கள் உடன் இப்புகார் பெட்டியில் பெறப்படும் புகார்களின் மீது 24 மணி நேரத்திற்குள் உரிய நடடிவக்கை மேற்கொள்ள வேண்டும்.

31. பள்ளி வாகனம் பயன்பாட்டில் இருக்கும் ஒவ்வொரு பள்ளியிலும் “பள்ளி " (School Level Transport Committee) அமைக்கப்பட்டிருக்க வேண்டும். (சிறப்பு விதி எண். 10) அக்குழு மாதம் ஒருமுறை கூட்டப்பட்டு குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.

32. பள்ளி வாகனங்களில் செல்லும் மாவணவர்களுக்கு. வாரம் ஒருமுறை NSS, NCC, JRC, Scout & Guide உள்ள பெண் ஆசிரியர்களை கொண்டு கூட்டம் நடத்தி மாணவர்களிடமிருந்து கருத்துகளை பெறவேண்டும். அக்கூட்டத்தில் Sexual harassment மட்டுமின்றி வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவது. வாகனம் ஓட்டும் போது செல்பேசி பயன்படுத்துவது. தவறான வழியில் வாகனத்தை இயக்குவது, வாகனத்தில் புகைபிடித்தல் போன்ற நிகழ்வுகள் குறித்தும் கேட்க்கப்பட்டு தொடர் நடவடிக்கைக்காக பள்ளி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

மேற்காண் வழிகாட்டுதல்களுடன், தனியார் பள்ளிகளில் மாணவர்களின் போக்குவரத்திற்காக மட்டும் பயன்படுத்தப்படும் வாகனங்கள், ஓட்டுநர்கள், உதவியாளர்கள் சார்பான படிவங்கள் EMIS Portal-ல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பள்ளிகளைத் தொடர்பு கொண்டு சார்ந்த பள்ளிகளுக்கான EMIS Login-இல் சென்று அதில் உள்ள படிவங்களில் கோரப்பட்டுள்ள விவரங்களை 05.04.2023 மாலை 5மணிக்குள் பதிவேற்றம் செய்து முடிக்க அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்(தனியார் பள்ளிகள்) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களும் முதன்மைக் கல்வி அலுவலர்களின் அறிவுரையின்படி அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தனியார் பள்ளிகளின் வாகனங்கள், ஓட்டுநர்கள், உதவியாளர்கள் சார்பான விவரங்களை EMIS Portal-ல் சார்ந்த பள்ளிகளால் பதிவேற்றம் செய்யப்படுவதை கண்காணித்து 05.04.2023 மாலை 5மணிக்குள் இப்பணி முடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேற்காண் பணியினை மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளிகள்) தங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் ஆலோசனைகளை பெற்று இப்பணியினை உரிய காலத்திற்குள் முடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement