For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

குடியரசு மாளிகையில் உள்ள மொகல் என்ற அமிர்த தோட்டத்துக்கு செல்லத் தயாரா ?

07:26 PM Mar 02, 2024 IST | admin
குடியரசு மாளிகையில் உள்ள மொகல் என்ற அமிர்த தோட்டத்துக்கு செல்லத் தயாரா
Advertisement

ந்திய குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் அமைந்துள்ள முகல் தோட்டம் 15 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இது பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் எட்வின் லுட்யென்ஸால் அமைக்கப்பட்டது. இங்கு ரோஜா, டஹ்லியா உள்ளிட்ட பல வகையான மலர்களும் விதவிதமான மரங்களும் வைத்து பராமரிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரியில் குறிப்பிட்ட சில தினங்களுக்கு மட்டுமே பொதுமக்களுக்காக திறக்கப்படும். குடியரசு தலைவர் அவ்வப்போது வழங்கும் விருந்து உள்ளிட்ட சில முக்கிய நிகழ்ச்சிகளும் இந்த தோட்டத்தில் நடைபெறும்.

Advertisement

முதலில், பிரிட்டிஷ் பாரம்பர்யத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான வடிவமைப்புடன் அந்தத் தோட்டத்தை உருவாக்க நினைத்தனர். அப்போது, முகலாயர் பாணியில் தோட்டத்தை உருவாக்கினால் நன்றாக இருக்கும் என்ற யோசனையை அன்றைக்கு வைஸ்ராயாக இருந்தவரின் மனைவியான லேடி ஹார்டிங்கே தெரிவித்திருக்கிறார். ‘முகலாயர்களின் தோட்டங்கள்’ என்ற புத்தகத்தை வாசித்து பிரமித்துப்போன லேடி ஹார்டிங்கே, லாகூர், ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் முகலாயர் தோட்டங்களுக்கும் சென்றிருக்கிறார். அது ஏற்படுத்திய தாக்கத்தால்தான், முகலாயர் பாணியில் தோட்டத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.

Advertisement

1917-ம் ஆண்டிலேயே தோட்டத்துக்கான வரைபடம் உருவாக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், 1928, 1929-ம் ஆண்டுகளில்தான் செடிகள் நடப்பட்டு, தோட்டம் உருவாக்கப்பட்டது. அங்கு அமைந்திருக்கும் ரோஜா தோட்டம் தனிச்சிறப்பு வாய்ந்தது. தோட்டக்கலைத்துறை இயக்குநராக இருந்த வில்லியம் முஸ்டோ, ரோஜா செடிகளை வளர்ப்பதில் நிபுணர். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து 250 வகையான ரோஜா செடி வகைகளைக் கொண்டுவந்து ரோஜா தோட்டத்தை அவர் உருவாக்கியிருக்கிறார்.அடோரா, மிருணாளினி, தாஜ்மகால், ஈஃபில் டவர், ஒக்லஹாமா, பிளாக் லேடி, புளூ மூன், லேடி எக்ஸ் உட்பட பிரபலமான பல ரோஜா செடி வகைகள் அங்கு இருக்கின்றன. அன்னை தெரசா, ராஜாராம் மோகன்ராய், ஆப்ரஹாம் லிங்கன், ஜவகர்லால் நேரு, ராணி எலிசபெத் உட்பட பல ஆளுமைகளின் பெயர்களும் ரோஜாக்களுக்கு சூட்டப்பட்டிருக்கின்றன. துலிப்ஸ், ஹெலிகோனியா போன்ற மலர்கள் 1998-ல் அங்கு அறிமுகம் செய்யப்பட்டன.

பல்வேறு காலகட்டங்களில் குடியரசுத் தலைவர்களாக இருந்தவர்கள், இந்தத் தோட்டம் சிறப்புற தங்கள் பங்களிப்பை ஆற்றியிருக்கிறார்கள். டாக்டர் ஜாகீர் உசேன் குடியரசுத் தலைவராக இருந்தபோது, புதிய வகை ரோஜாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, முகலாய தோட்டத்தில் அமைந்திருக்கும் ரோஜா தோட்டத்துக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கப்பட்டது.

இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக ராஜாஜி இருந்தபோது, நாட்டில் உணவுப்பஞ்சம் நிலவியது. அப்போது, முகலாய தோட்டத்தின் ஒரு பகுதியை உணவுதானியங்களைப் பயிரிடுவதற்காக அவர் ஒதுக்கினார். அந்தப் பகுதியில் தானே உழுது, உணவுதானியங்களைப் பயிரிட்டார். அந்தப் பகுதியில் தற்போது பல்வேறு வகையான காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. அந்தக் காய்கறிகள், குடியரசுத் தலைவர் மாளிகையில் வசிப்பவர்களுக்கு உணவாகின்றன.

முன்னாள் குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமனுக்கு கள்ளிச்செடிகள் பிடித்தமானவை. அவரின் காலத்தில், முகலாய தோட்டத்தில் கள்ளித் தோட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே.அப்துல்கலாம் இருந்தபோது, இசைத்தோட்டம், ஆன்மித்தோட்டம் உருவாக்கப்பட்டன.

இப்படி பல நூறு ஆண்டு வரலாற்றை கொண்ட முகல் தோட்டம் எனும் பெயர் அம்ரித் உத்யன் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் இந்தப் பெயரை மாற்றியுள்ளதாக அவரது துணை செய்தி தொடர்பாளர் நிகிதா தெரிவித்துள்ளார். இந்தியாவின் 75-வது சுதந்திர ஆண்டை ஒட்டி இப்பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

மாற்றம் செய்யப்பட்ட அமிர்த தோட்டத்தை பார்வையாளர்கள் மாலை 6.00 மணி வரை பார்வையிடலாம் என்று குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அமிர்த தோட்ட விழா 1-இன் கீழ், வரும் 31-ஆம் தேதி வரை, பொதுமக்கள் பார்வைக்காக அமிர்த தோட்டம் திறந்திருக்கும்.

திங்கட்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்களும் காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை (கடைசி நுழைவு – மாலை 05.00 மணி) மக்கள் தோட்டத்துக்குச் செல்லலாம்.

முன்னதாக, காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை (கடைசி நுழைவு – மாலை 4.00 மணி) மட்டுமே பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.

அமிர்த தோட்டத்தை பார்வையிட https://visit.rashtrapatibhavan.gov.in/visit/amrit-udyan/rE என்ற இணையதள இணைப்பில் பார்வையாளர்கள் முன்பதிவு செய்யலாம்.

பார்வையாளர்கள் அதற்கான கவுண்டர்கள் அல்லது குடியரசுத் தலைவர் மாளிகை நுழைவாயில் எண் 12-க்கு அருகிலுள்ள சுய சேவை வசதியில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags :
Advertisement