For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

புதுச்சேரி : ஐந்து மாத செலவுக்கான இடைக்கால பட்ஜெட்- முதலமைச்சர் என்.ரங்கசாமி தாக்கல்!

05:17 PM Feb 22, 2024 IST | admin
புதுச்சேரி    ஐந்து மாத செலவுக்கான  இடைக்கால பட்ஜெட்   முதலமைச்சர் என் ரங்கசாமி தாக்கல்
Advertisement

புதுவை சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். யூனியன் பிரதேசமான புதுவையில் பட்ஜெட் தாக்கலுக்கு மத்திய நிதித்துறை, உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும். இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் 2024–25ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய புதுவை சட்டசபை இன்று காலை 9.45 மணிக்கு கூடியது.

Advertisement

துவக்கத்தில் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன. புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் மறைவு குறித்து இரங்கல் தீர்மானத்தை முதல்வர் ரங்கசாமி வாசித்தார். அதையடுத்து காங்கிரசைச் சேர்ந்த வைத்தியநாதன், தி.மு.க.வைச் சேர்ந்த நாஜிம், சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு, எதிர்க்கட்சித் தலைவர் சிவா, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பேசியபோது சிலை அமைக்க கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து மறைந்த எம்எஸ் சுவாமிநாதன், பங்காரு அடிகளார், சங்கரய்யா, பாத்திமா பீவி, நடிகர் விஜயகாந்த் ஆகியோரின் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன.மறைந்த தலைவர்களுக்காக, சபை உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து சட்ட முன்வரைவுகளுக்கு உறுப்பினர்கள் ஒப்புதல் பெறப்பட்டது. சட்டசபை குழு அறிக்கை, கூடுதல் செலவின அறிக்கை, சட்டசபை முன் வைக்கப்பட்டது.

Advertisement

இதனை தொடர்ந்து அரசு செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத செலவினங்களுக்கு ரூ.4634 கோடி 29 லட்சத்து 89 ஆயிரத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முழு பட்ஜெட் தாக்கல் செய்யாததால் தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சிவா எழுந்து பேசும்போது, “மத்திய அரசு நிதி ஒதுக்கிவிட்டார்கள். முழு பட்ஜெட்டை முயற்சி எடுத்திருந்தால் போட்டிருக்கலாம். கவர்னர் பிரச்சினையால் அனுப்பவில்லையா? 10 ஆண்டுகள் பின்தங்கிவிட்டனர். வாய்ப்பு கிடைத்திருந்தாலும் அலட்சியமாக கோஷ்டி பூசலால் தவற விட்டுள்ளீர்கள். புதுச்சேரிக்கு பிரச்சினை அதிகமாக இருக்கிறது. 3 நாட்களாவது கூட்டத்தை நடத்தலாம். அடுத்து 6 மாதங்கள் கழித்துதான் கூட்டத்தை நடத்துவீர்கள். அதனால் வெளிநடப்பு செய்கிறேன்” என்றார்.

இதனையடுத்து பட்ஜெட்டுக்கு குரல் வாக்கெடுப்பு நடத்தி, அனுமதி வழங்கப்பட்டதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார். தொடர்ந்து சட்டசபையை காலவரையின்றி சபாநாயகர் ஒத்திவைத்தார்.

Tags :
Advertisement