போப் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்!- வாடிகன் தகவல்!
நுரையீரல் அலர்ஜி மற்றும் நிமோனியா பிரச்னை தொடர்பாக சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ், சுவாசக் கோளாறு காரணமாக மிகவும் ஆபத்தான நிலையில்,சிகிச்சை பெற்று வருவதாகவும் வாடிகன் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.போப் பிரான்சிஸ் எதிர்கொள்ளும் உடல்நிலைக் குறைவால் செப்சிஸ் (Sepsis) ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இது நிம்மோனியாவால் ரத்தத்தில் ஏற்படும் ஒருவித நோய் ஆகும். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும் எனவும் தகவல் வந்துள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88 வயது), உடல் நலக்குறைவு காரணமாக 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை மாலை அவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், அவரது இதயம் நன்றாக செயல்படுவதாகவும் வாடிகன் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை காலை வெளியான தகவலின்படி, ‘இரவு அவர் நன்றாக ஓய்வெடுத்தார். இன்று காலை போப் பிரான்சிஸ் எழுந்து காலை உணவை உட்கொண்டார்’ என கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது, போப்பின் உடல் நிலை மோசம் அடைந்துள்ளதாகவும், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வாடிகன் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், "போப்பிற்கு சுவாசிப்பதில் பிரச்சனை உள்ளதால், அவருக்கு அதிகளவில் செயற்கை சுவாசம் (ஆக்ஸிஜன்) அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அவர் தற்போது வரை ஆபத்தான கட்டத்திலிருந்து மீண்டு வரவில்லை.
உடலில் உள்ள ரத்த தட்டுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அவருக்கு ரத்த மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. அவரது உடல்நலம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், போப் பூரண நலம் பெற வேண்டி தேவாலயம் முன்பு சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.போப் பிரான்சிஸ் உடல் நலம் பெற உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். போப் பிரான்சிஸ் உடல் நலமற்று இருப்பது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
போப்பிற்காக வெள்ளை மாளிகை சிறப்புப் பிரார்த்தனை:
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் நேற்று சனிக்கிழமை கூறுகையில், "அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு போப்பின் உடல்நிலை குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்தான அவரது சொந்த அறிக்கை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், போப்பிற்காக நாங்கள் ஜெபிக்கிறோம்" என்றும் கூறியுள்ளார்.