For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பிரளயத்தை ஏற்படுத்த வரும் `பார்க்கிங்` படம்!

08:50 PM Nov 16, 2023 IST | admin
பிரளயத்தை ஏற்படுத்த வரும்  பார்க்கிங்  படம்
Advertisement

வாகன நெரிசல் மிகுந்த ஒரு நகரத்தில் கார் ஓட்டிச் செல்வதைக் கூட சமாளித்து விடலாம். ஆனால், நகர் பகுதியில் சாலையோரமாக கார்களை நிறுத்துவதற்கும் கூட நாம் பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். சாலைகள் மட்டுமல்லாமல் எந்தவொரு பொது இடத்திலும் கார்கள் நிறுத்தப்பட்டால் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இவ்வாறு வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யும் அத்துமீறல், அடாவடி குறித்த அனுபவம் சகலரும் இருக்கலாம்.. இந்நிலையில் “இந்தியாவை எதிர்நோக்கி இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை வண்டிகளை பார்க்கிங் செய்வதுதான்…” என்று ஃபீல் பண்ணி அதை ‘ பார்க்கிங் ‘ என்ற தலைப்பில் ஒரு படமாக எடுத்து எச்சரிக்கைக் கொடுக்க ஆயத்தமாகி இருக்கிறார்கள்.அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் டைரக்‌ஷனில் ஹரிஷ் குமார் ஹீரோவாக நடித்திருக்கும் படத்தின் தலைப்பே ‘பார்க்கிங்’-தான். இதில் நாயகியாக இந்துஜா நடிக்க, முக்கிய வேடத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். என்.கே.ராகுல் கலை இயக்குநராக பணியாற்ற, தினேஷ் காசி மற்றும் பீனிக்ஸ் பிரபு சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.ஃபேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்கும் புரோமோ வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. நகைச்சுவை பாணியில் உருவாக்கப்பட்டுள்ள புரோமோ வீடியோ இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

இந்த நிலையில், படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நாயகி இந்துஜா ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து ’பார்க்கிங்’ படத்தை பற்றி மட்டும் இன்றி, பார்க்கிங் பிரச்சனையால் நடந்த சில உண்மை சம்பவங்கள் பற்றியும் பகிர்ந்துக் கொண்டார்கள். அப்போது பேசிய டைரக்டர் ராம்குமார் பாலகிருஷ்ணன்.“கொல்கத்தாவில் நடந்ததாக நான் ஒரு செய்தி படித்தேன். அதில் ஐந்து பேர் சேர்ந்து ஒருவரைக் கொன்று விட்டார்கள். அதை விசாரணை செய்த போதுதான் அதன் பின்னணி வண்டி பார்க்கிங் செய்வதால் எழுந்த பிரச்சினை என்று தெரிய வந்தது… அச்செய்தியின் தாக்கத்தை ஃபீல் பண்ணியபடி கொரோனா மற்றும் ஊரடங்கு சமயத்தில் சிலபல உண்மை சம்பவங்களை கோர்த்து நான் எழுதிய கதை இது. ரசிகர்களை தங்களது வாழ்க்கையில் அல்லது அவர்களுக்கு நெருங்கியவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களுடன் தொடர்பு படுத்தும் வகையில் படம் இருக்கும். இப்படி ஒரு கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று தெரிந்ததும் என்னை சுற்றி இருந்த அனைவருமே அவரவர்களுக்கு பார்க்கிங்கில் ஏற்பட்ட பிரச்சனைகளைச் சொன்னார்கள். அது அனைத்தையும் சேர்த்து சைக்கலாஜிக்கலாக நான் எழுதிய ஒரு திரில்லர் டிராமாதான் இந்தப் படத்தின் திரைக்கதை. தீர்க்க முடியாத இந்தப் பிரச்சினைக்கு படத்திலும் எந்தவிதமான தீர்வையும் நான் சொல்லவில்லை.

Advertisement

பார்க்கிங் பிரச்சனை மட்டும் அல்ல, சாலையில் வாகனத்தில் செல்லும் போது நம்மை யாராவது இடித்துவிட்டால், அவர்கள் சாரி என்று சொல்லிவிட்டால் போதும் அந்த பிரச்சனை முடிந்துவிடும், ஆனால் அப்படி சொல்லாமல் ஒருவருக்கு ஒருவர் முறைத்துக்கொண்டு, திட்டிக்கொண்டால் அந்த பிரச்சனை நினைத்து பார்க்க முடியாதபடி வளர்ந்து விடும். எனவே, மனிதாபிமானத்தோடு இத்தகைய செயலை அணுகினால் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாது, என்றுதான் சொல்லியிருக்கிறேன்.” என்றார்.

இதை அடுத்து ஹரிஷ் கல்யாண் பேசும்போது, “இந்த படத்தை பற்றி சொல்வதற்கு முன்பு இயக்குநர் ராம்குமார் பற்றி சொல்கிறேன். அவர் இந்த திரைக்கதையை என்னிடம் கொடுத்த போது, அதை படித்த உடன் நான் உணர்ந்த விசயம், ஒரு நடிகராக அல்லாமல் ஒரு பார்வையாளராக இந்த கதையை அனுக வேண்டும் என்பது தான். திரைக்கதையில் என்ன இருந்ததோ, அதை துளி கூட மாற்றாமல் அனைத்தையும் அப்படியே எடுத்தார். கூடுதலாக சேர்த்தாரே தவிர திரைக்கதையில் இருந்த எதையுமே அவர் மாற்றவில்லை, அந்த அளவுக்கு மிக தெளிவாக இருந்தார். இப்படி ஒரு கதையில் என்னை பொருத்தி பார்த்ததற்கு அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு இந்த கதையை கேட்கும் போது, என் வாழ்க்கையில் எங்கேயோ இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பதாக தோன்றியது. பள்ளிக்கு சைக்கிளில் தான் செல்வேன், அப்போது பள்ளியில் சைக்கிள் நிறுத்துவதற்கு இடம் இருக்கும். அங்கு யார் வேண்டுமானாலும் சைக்கிள் நிறுத்தலாம். அங்குள்ள ஒரு இடத்தில் நான் வழக்கமாக சைக்கிள் விடுவேன். ஒரு நாள் என் இடத்தில் வேறு ஒரு சைக்கிள் இருந்ததால், என் சைக்கிளை வேறு இடத்தில் நிறுத்தினேன். அப்போது அங்கு வழக்கமாக சைக்கிள் விடும் ஒரு மாணவர் என்னிடம் சண்டை போட்டார், அப்போதே இந்த பிரச்சனை இருந்தது.

இப்படி ஒரு கதையை டைரக்டர் சொன்ன போது, நிஜ வாழ்க்கையில் இதுபோன்ற சம்பவங்கள் எப்படி எல்லாம் இருந்திருக்கும் என்பதை அறிந்துக்கொள்வதற்காக நான் பல செய்திகளையும், கட்டுரைகளையும் தேடி படித்தேன். அதில் ஒரு சம்பவம் நினைத்து பார்க்க முடியாதபடி இருந்தது. அது எந்த நகரம் என்று சொல்ல விரும்பவில்லை, ஒரு வீட்டில் மூன்று பேர் தங்கியிருந்தார்கள், அங்குள்ள இடத்தில் தான் அவர்கள் இருசக்கர வாகனத்தை விடுவார்கள், அதில் அந்த மூன்று பேருக்கும் பிரச்சனை ஏற்பட்டு அதில் ஒருவர் கொலை செய்யப்பட்டு விட்டார். இதுபோன்ற சம்பவங்கள் நகரத்தில் மட்டுல் அல்ல, நகரம் அல்லாத ஊர்களிலும் பார்க்கிங்கிற்காக இப்படி பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இப்படிப்பட்ட பிரச்சனைகள் எதனால் நடக்கிறது என்று நான் யோசித்த போது, முன்பு எல்லாம் கார் என்பது ஆடம்பரமான பொருளாக இருந்தது. ஆனால், இப்போது அவசியமான பொருளாக மாறிவிட்டது. ஒரு வீட்டில் இரண்டு கார்கள், மூன்று இருசக்கர வாகனங்கள் இருப்பது கூட சகஜமாகி விட்டது. ஒரு விபத்து குறித்து கேள்விப்பட்டால் கூட அதை சாதாரணமாக எடுத்துக் கொள்பவர்கள், தங்களது காரில் சிறிய கோடு விழுந்தால் உடனே அதிர்ச்சியாகி விடுகிறார்கள். இது போன்ற ஒரு உணர்வின் வெளிப்பாடு, எனக்கும், எம்.எஸ்.பாஸ்கர் சாருக்கும் இடையே இருக்கும் ஈகோவை தூண்டி விடுவதோடு, அது எவ்வளவு தூரம் போகிறது என்பது தான் படத்தின் கதை. எழுதிய ஸ்கீரின்பிளேயில் என்ன இருந்ததோ, அதைத் துளி கூட மாற்றாமல் அனைத்தையும் அப்படியே எடுத்திருக்கிறார் டைரக்டர். கூடுதலாகச் சேர்த்தாரே தவிர திரைக்கதையில் இருந்த எதையுமே அவர் மாற்றவில்லை, அந்த அளவுக்கு மிகத் தெளிவாக இருந்தார். இப்படி ஒரு கதையில் என்னைப் பொருத்திப் பார்த்ததற்கு அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

நடிகை இந்துஜா படம் குறித்து கூறுகையில், “நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு சவால் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். இந்த படத்திலும் அப்படி ஒரு சவாலான கதாபாத்திரம் தான். அதாவது படம் முழுவதும் கர்ப்பிணியாக நடித்திருக்கிறேன். இந்த படத்தில் அனைத்து விசயங்களுக்கும் தொடர்பு இருக்கிறது அதுபோல் காருக்கும் என் கர்ப்பத்திற்கும் கூட தொடர்பு இருக்கும். அனைத்தையும் இப்போது சொல்ல முடியாது, படம் பார்த்தால் உங்களுக்கு புரியும்.” என்றார்.

இப்படம், டிசம்பர் 1,2023 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பிரளயத்தை ஏற்படுத்தும் என்று நம்பலாம்

Tags :
Advertisement