காளியம்மாளின் தலைவர் மட்டும் மாற்றம்!- முழு விபரம்!
அண்மை காலமாக சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த பிறகும், தந்தை பெரியார் குறித்து கடும் விமர்சனங்களை சீமான் முன்வைக்க தொடங்கியதை அடுத்தும் இந்த விலகல்கள் அதிகமாகி கொண்டே இருக்கின்றன.இந்த விலகல் லிஸ்டில் சில மாதங்களுக்கு முன்னரே அடிபட்ட பெயர்களில் நாம் தமிழர் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பெயரும் அடக்கம். அதற்கு முன்னர் தான் சீமான், காளியம்மாளை ஒரு தொலைபேசி உரையாடலில் திட்டியதாக ஒரு (ஆதாரமற்ற) செய்தியும் உலா வந்தது. மேலும், விஜயின் தவெக-வில் ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகியோர் இணைய உள்ளதாக செய்திகள் வந்த போது அதில் காளியம்மாள் பெயரும் அடிபட்டது.
ஆனால், அப்போது காளியம்மாள் தரப்பு மறுப்பு தெரிவித்தது. அதேபோல, ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி.ஆர்.நிர்மல் குமார் மட்டுமே தவெகவில் அப்போது இணைந்தனர். அந்த சமயத்தில் இருந்தே நாம் தமிழர் கட்சி நிகழ்வுகளில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார் காளியம்மாள். அண்மையில் ஒரு பொது நிகழ்வில் கலந்து கொண்ட காளியம்மாளின் பெயரானது சமூக செயற்பாட்டாளர் என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்போது தான் இந்த உட்கட்சி பூசல் விவகாரம் பொதுவெளியில் அதிகமாக பேசப்பட்டது.
அதன் பிறகு தான் தற்போது காளியம்மாள், தான் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன் என அதிகாரபூர்வமாக அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில்,“இதுவரை இல்லாத கனத்த இதயத்தோடு எழுதுகிறேன். கட்சியில் பயணித்த ஒவ்வொரு கணமும் உண்மையும், நேர்மையுமாய் உளப்பூர்வமாக என் குடும்பத்திற்கும் மேலாக நேசித்து வந்தேன். இந்த 6 ஆண்டுகால பயணம் எனக்கு அரசியல் ரீதியான பல அனுபவங்களை கொடுத்துள்ளது. பல உறவுகள் அக்கா, தங்கையாகவும் அண்ணன், தம்பிகளாகவும் கிடைத்ததையும் அவர்கள் என்னுடன் பழகிய விதங்களையும் எண்ணி மகிழ்கிறேன்.நமக்கெல்லாம் ஒரே பெருங்கனவு தான், அது தமிழ்த்தேசியத்தின் வெற்றியும், அதனை மக்களிடம் கொண்டு சேர்த்தல் என்னும் உன்னத நோக்கமும். அந்த நோக்கத்தை அடைய வேண்டும் என்ற பாதையில் நானும் ஒரு பகுதியாய் இணைந்து பயணித்ததில் நான் பெருமை கொள்கிறேன்.
ஆனால், இப்பாதை இவ்வளவு சீக்கிரம் முடியும் என நான் கனவிலும் நினைக்கவில்லை, கடந்த 6 வருடகாலமாக ஒரு சமூக மாற்றத்திற்காக ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு போராட முடியுமோ, என் ஆற்றலையும் மீறி உங்கள் எல்லோர் அன்பாலும், நம்பிக்கையாலும் இந்த களத்தில் நின்றிருக்கிறேன்.எனினும் காலத்தின் சூழல், உயிராக எண்ணி, வழிநடந்த நாம் தமிழர் கட்சி எனும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்பதை மிகவும் வருத்தத்துடன், கனத்த இதயத்துடனும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இங்கு பயணித்ததில் பலரின் அன்பு, அக்கறை, நம்பிக்கை என் மீதான அளவற்ற பாசம் என்ற அனைத்தையும் மனதில் நிலைநிறுத்தியுள்ளேன். என்னுடன் இத்தனை நாட்களாக உண்மையாய், உறவாய் பழகிய, பயணித்த, களத்தில் இன உணர்வோடு நின்று நேர்மையாய் வேலை செய்த அத்தனை உறவுகளுக்கும், உண்மையான உழைப்பாளர்களுக்கும், உலகத்தமிழர்கள் மற்றும் நாம்தமிழர் உறவுகளுக்கும் நன்றிகளை சொல்வதோடு என் வருத்தங்களையும் பகிர்ந்துகொள்கிறேன். ஒரு சாமானிய குடும்பத்தில் பிறந்து, பிறந்த இனத்துக்காக தமிழ்த்தேசிய களத்தில் ஓடிய என்மீது மிகுந்த நம்பிக்கையும் அன்பும் வைத்து களமாடிய உங்கள் அத்துணை பேருக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள்.எனக்கான நெருக்கடிகள் நிறைய நிறைய வந்த போதும் என்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையாலும், நான் உங்கள் மீது கொண்ட அன்பினாலும், எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக இருந்தேன்.
ஆனால் இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டதை எண்ணி மனம் வருந்துகிறேன். அவதூறு வெறும் வார்த்தைகள் தானே என்று நினைத்து அள்ளி தெளிப்பவர்களுக்கு மத்தியில், என் மீது அளப்பரிய அன்பு கொண்டு நேசிக்கிற உங்கள் அத்தனை பேருக்கும் நான் என்றென்றும் கடமை பட்டவளாக இருப்பேன். என்னுடைய இந்த முடிவு பலருக்கு வருத்தத்தைத் தரலாம், எனக்கும் தான். காலத்தின் வழிநடத்தல். என்றும் தமிழ்த்தேசியத்தை விதைக்கும் வழியில் எம் பயணம் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்
அப்படி இதில் இறுதியில் அவர் கூறிய வாசகம் தான் சற்று உற்றுநோக்க வைத்துள்ளது. ” என்றும் தமிழ்த்தேசியத்தை விதைக்கும் வழியில் எம் பயணம் தொடரும்.” என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக தமிழ் தேசியமும், திராவிடமும் தான் தனது இரு கண்கள் என தனது கொள்கைகளை விளக்கியவர் தவெக தலைவர் விஜய். இப்படியான சூழலில், தமிழ் தேசியத்தை விதைக்கும் கட்சியில் எனது பயணம் என காளியம்மாள் கூறியிருப்பது. முன்பு உலாவிய வதந்திகளை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றே ஆருடம் சொல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மட்டும் உண்மை!