For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

மோடி விசிட் அடித்த மாலத்தீவு சர்ச்சை: ஹனிமூன் ஜோடிகள் அப்செட்!

05:45 PM Jan 07, 2024 IST | admin
மோடி விசிட் அடித்த மாலத்தீவு சர்ச்சை  ஹனிமூன் ஜோடிகள் அப்செட்
Advertisement

ம்மவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் சுற்றுலா செல்லும் இடங்களில் முதன்மையானது மாலத்தீவு.. குறிப்பாகத் திருமணமான இளசுகள் பலரும் மாலத்தீவுக்கு தான் செல்வார்கள்,இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள மாலத்தீவு இளசுகள் மத்தியில் டிரெண்டிங்கில் தான இருக்கும். மேலும் ஒருமுறையாவது இங்கு சென்றுவிடமாட்டோமா என்ற சாமானியனின் ஏக்கத்திற்குப் பின்னாலும் இந்த நாடு இருக்கும்... ஆம், வர்ணிக்க வார்த்தைகளற்ற மாலத்தீவு தான் அந்த நாடு. காணும் திசையெங்கும் அழகிய கடல், நெஞ்சைக் கவரும் இயற்கைக் காட்சிகள், அழகான கடற்கரைகள், கடலுக்கு அடியில் உணவு, ஆழ்கடல் நீச்சல் (scuba diving) என தன்னைத் தேடி வருபவரின் மனங்களை புத்துணர்ச்சியாக்கும் எல்லா அழகியலையும் கொண்டது தான் மாலத்தீவு.

Advertisement

இது, இந்தியப் பெருங்கடலில் 20க்கும் அதிகமான பவளத்தீவுகளையும், 1000க்கும் அதிகமான சிறிய தீவுகளையும் உள்ளடக்கிய தீவு நாடு.மாலத்தீவு குட்டி நாடாக இருந்தாலும் இந்த நாட்டுக்குத் தனிப் பாரம்பரியம் உள்ளது. ஆரம்பத்தில் கிராவரு என்ற தமிழர்கள் அங்கு ஆட்சி புரிந்ததாக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பின்னர் சோழர்கள் ஆட்சிக் காலத்தில் அவர்கள் ஆட்சியின் கீழ் நீண்ட காலமாக மாலத்தீவு இருந்துள்ளது. இதன் பிறகு சிங்களவர்கள் மாலத்தீவை கைப்பற்றி ஆட்சி செய்துள்ளனர். அப்போது, அங்கு பரவலாக புத்த மதம் பின்பற்றப்பட்டுள்ளது.

Advertisement

தொலைகிழக்குப் பகுதிகளுக்குச் சென்ற அரேபிய வணிகர்கள், தங்கள் பயணத்தின் நடுவே மாலத்தீவில் தங்கிச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டனர். முஸ்லிம்களுக்கு மாலத்தீவு மிகவும் பிடித்து விட்டது. அங்கு, தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தி ஆட்சியில் அமர்ந்தனர். 1153-ம் ஆண்டு சுல்தான் ஆட்சி முறை வந்தது. அங்குள்ள மக்கள் அனைவரும் இஸ்லாமியர்களாக மாறத்தொடங்கினர். 16-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய ஆதிக்க சக்திகள் பலவும் இந்தியப் பெருங்கடலில் உள்ள வணிகத்தில் பெரும் பகுதியை தங்கள் கைவசமாக்கிக் கொண்டார்கள். பிரிட்டன், பிரான்ஸ், போர்ச்சுகல், ஹாலந்து, டென்மார்க், ஸ்பெயின் என பல நாடுகளுக்கும் இதில் பெரும் போட்டி நிலவியது.

default

ஏற்கெனவே மேற்கிந்தியாவில் இருந்த கோவாவில் அழுத்தமாகக் காலூன்றியிருந்த போர்ச்சுக்கீசியர்கள், இந்தியப் பெருங்கடலில் லாபத்தை ஈட்டும் வணிக வழித்தடங்களில் தங்களுக்கு நிச்சயம் பங்கிருக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்திருந்தார்கள். அவர்கள் மாலத்தீவி மீது கண் வைத்தனர். 'உங்களுக்காக சின்னதாக ஒரு கோட்டையும், தொழிற்சாலையும் கட்டிக் கொள்ளலாம்' என்று அனுமதி அளித்தார் அப்போதைய மாலத்தீவு மன்னர். போர்ச்சுக்கீசிய ஒட்டகம் மாலத்தீவில் நுழைந்தது. 1558-ம் ஆண்டில் போர்ச்சுக்கீசியர்கள் மாலத்தீவு தேசத்தைக் கைப்பற்றினார்கள்.

முகம்மது தகுருஃபானு அல் ஆஜம் (Muhammad Thakurufaanu Al Auzam) என்பவர் தனது சகோதரர்களையும், நண்பர்களையும் சேர்த்துக் கொண்டு மாலே நகரில் ஆட்சி செய்த போர்சுக்கீசியர்கள் மீது தொடர்ந்து கொரில்லாத் தாக்குதல் நடத்தினார். இதில் அத்தனை போர்ச்சுக்கீசிய ஆட்சியாளர்களும் கொலை செய்யப்பட்டனர். இந்த வெற்றியை, தேசிய தினமாக இன்றளவும் மாலத்தீவு கொண்டாடுகிறது. முகம்மது தகுருஃபானுவுக்கு ஓர் நினைவகமும் எழுப்பப்பட்டது. இவர்தான் அடுத்த சுல்தான் சாம்ராஜ்யத்தை நிறுவினார். உதீமு என்ற பெயர் கொண்ட அந்த சாம்ராஜ்யம் அடுத்த 120 வருடங்களுக்கு மாலத்தீவை ஆட்சி செய்தது.

30 pictures of Maldives beautiful Aerial Views

1968-ம் ஆண்டு சுல்தான் ஆட்சியிலிருந்து குடியரசாக மாறியது. மாலத்தீவுகளின் முதல் குடியரசுத் தலைவராக இப்ராஹிம் நசீர் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மவ்மூன் அப்துல் கையூம் (Maumoon Abdul Gayoom) அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு 30 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருந்தார். 2008-ல் பொதுத் தேர்தலில் கையூமை தோற்கடித்து முகம்மது நஷீத் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஒரு கடல்வாழ் உயிரின விஞ்ஞானி. சுற்றுச்சூழல் தொடர்பான செயல்பாடுகளில் நிறைய ஆர்வம் காட்டினார். சுறா வேட்டைக்குத் தடை விதித்தார். அரசு நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டன. 'உயர்ந்து கொண்டிருக்கும் கடல் மட்டத்தில் அழியும் முதல் பகுதியாக மாலத்தீவு இருக்கலாம்' என்று ஆய்வுகள் சொன்னது. இதனால், தடுப்பு நடவடிக்கைக்கு நிதி உருவாக்கினார்.

மாலத்தீவு தனி நாடாக இருந்தாலும் இந்தியக் கலாசாரத்தோடு ஒன்றிணைந்த பகுதி ஆகும். குறிப்பாக, தமிழ் மற்றும் மலையாள கலாசாரம் கொண்ட நாடாக மாலத்தீவு திகழ்கிறது. அங்கு மலையாளம் முக்கிய மொழியாகவும் இருக்கிறது.மாலத்தீவு இந்தியாவுக்கு மட்டுமல்ல இலங்கைக்கும் அருகிலுள்ள நாடு. இப்பேர்பட்ட மாலத்தீவு இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது. அத்துடன் ஹனுமூனுக்கு இந்தியர்கள் மாலத்தீவு செய்ய புக் செய்திருந்த டிக்கெட்டை கேன்சல் செய்யுமளவு நிலைமை போய் விட்டது.

அதாவது நம் பிரதமர் மோடி அண்மையில் விசிட் அடித்த லட்சத்தீவு பயணம் தொடர்பான மாலத்தீவு அமைச்சரின் ட்வீட்தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக கடந்த 2-ம் தேதி லட்சத்தீவு சென்றிருந்தார். சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒருபகுதியாக இது கருதப்பட்டது. தன்னுடைய பயணம் குறித்த அனுபவத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்த மோடி, “லட்சத்தீவு என்பது வெறும் தீவுகளின் கூட்டமல்ல. காலம் காலமாக நீடித்து வரும் பாரம்பரிய மரபு மற்றும் மக்களுக்கான சான்று அது. கற்பதற்கும் வளர்வதற்குமான வாய்ப்புள்ளதாக எனது பயணம் அமைந்தது.

லட்சத்தீவுகளின் பிரம்மிக்க வைக்கும் அழகையும், அங்கு வாழும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பையும் கண்டு நான் இன்னமும் பிரமிப்பில் இருக்கிறேன். அகத்தி, பங்காராம், கரவட்டி ஆகிய இடங்களில் மக்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் விருந்தோம்பலுக்காக நன்றி கூறுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

அதே பிரதமரின் இந்தப் பயணம் குறித்து கருத்து தெரிவித்திருந்த மாலத்தீவு அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித் தனது சமூகவலைதளப் பக்கத்தில், இந்தியா மாலத்தீவை குறிவைக்கிறது என்றும், மாலத்தீவு கடற்கரை சுற்றுலாத்தலத்துடன் போட்டியிடுவதில் இந்தியா பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது என்றும் குற்றம்சாட்டியிருந்தார். அதேபோல மேலும் சில மாலதீவு மக்களும் இதில் பதிவிட்டிருந்தனர். அவர்களின் கருத்துகளை இந்தியர்களையும் இந்தியாவையும் குற்றஞ்சாட்டும் வகையிலும் இனவெறியாகவும் இருந்தது. அவர்களின் இந்தக் கருத்துகள் மிகப் பெரிய சர்ச்சையானது. இதையடுத்து இணையத்தில் பலரும் மாலத்தீவுக்கு எதிராகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். மாலத்தீவுக்குச் செல்ல திட்டமிட்ட பலரும் தங்கள் டிக்கெட்களை கேன்சல் செய்து அதிருப்தியைக் காட்டியுள்ளனர்.

இது நெட்டிசன்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி நிலையில், பலரும் மாலத்தீவுக்கு மாற்றான சுற்றுலாத்தலமாக லட்சத்தீவை முன்வைத்தனர். இதனால் எக்ஸ் பக்கத்தில் VisitMaldives என்ற ஹேஸ்டேக் டிரெண்டான நிலையில் BoycottMaldives என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டானது. மேலும், பலர் - குறிப்பாக ஹனிமூன் போக திட்டமிட்ட தங்களின் மாலத்தீவு பயணத்தையும் ரத்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement