For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

அயோத்தி ராமர் கோயிலுக்கு வெளிநாட்டினர் நன்கொடை வழங்க மோடி அரசு அனுமதி!

05:56 PM Oct 19, 2023 IST | admin
அயோத்தி ராமர் கோயிலுக்கு வெளிநாட்டினர் நன்கொடை வழங்க மோடி அரசு அனுமதி
Advertisement

யோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ.900 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வங்கி இருப்பு ரூ.3 ஆயிரம் கோடியாக உள்ள நிலையில் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு, வெளிநாட்டிலிருந்து நிதி பெற மத்திய அரசு அனுமதித்து உள்ளதாக, ராமஜென்ம பூமி அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வெளிநாட்டு நன்கொடைகளை, ராமர் கோயில் அறக்கட்டளையின் டெல்லி எஸ்.பி.ஐ வங்கி கணக்கு வாயிலாக மட்டுமே அனுப்பலாமாம்

Advertisement

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இதனை அடுத்து ராமர் கோயில் கட்டுவதற்கு ராமஜென்ம பூமி அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, அதன் பிறகு கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.கோயிலுக்கான கட்டுமானப் பணிகள் அதன் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன. 2024, ஜனவரி மத்தியில் ராமர் கோயிலுக்கான கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற உள்ளன. ராமர் கோயில் கட்டுமானப் பணிகளில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களும் தங்கள் பங்களிப்பை இயன்ற வகையில் செய்து வருகின்றனர்.இந்தக் கோயிலின் கட்டுமானத்திற்குத் திட்டமதிப்பு ரூபாய் 1700 கோடி வரை முடிவு செய்திருந்த போதிலும் ஸ்ரீ இராம பக்தர்களின் காணிக்கையாக மட்டும் 3400 கோடிகளுக்கு மேல் பொருள் உதவி கிடைத்துள்ளது. கட்டுமான செலவு போக மீதமிருக்கும் பணத்தை அயோத்தியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப் படும்கோயில் அறக்கட்டளையினர் சார்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

54,700 சதுர அடி பரப்பளவில் 360 அடி நீளமும் 235 அடி அகலமும், தரையில் இருந்து 16.5 அடி உயரமும் கொண்ட இத் திருக்கோயில் ஐந்து குவி மாடங்கள் ,மூன்று தளங்களுடன் உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் உடையதாக , அமைக்கப் பட்டுள்ளது . தரை தளத்தில் 160 தூண்களும் , முதல் தளத்தில் 132 தூண்களும் , இரண்டாவது தளத்தில் 74 தூண்களும்,அமைக்கப் படுகின்றன .12 நுழைவு வாயில்கள் உடைய இக்கோயிலின் திருக்கோபுரம் 161 அடியாகும். மேலும்புயல் மழை வெள்ளம் நிலநடுக்கம் போன்ற இயற்கை பாதிப்புக்களில் இருந்து திருக்கோயிலைப் பாதுகாக்கும் விதமாக கோயிலைச் சுற்றி மூன்று அடுக்குகளில் மரம் வளர்ப்பு மற்றும் நந்தவனம் வளர்ப்பு முறைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இந்திய விடுதலைக்குப் பின் இந்தியாவில் கட்டப் படும் மிகப் பிரம்மாண்டமான முதல் திருக்கோயில் இதுதான்.

ஏறக்குறைய 70 சதவீதத்திற்கும் அதிகமான கட்டுமான பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் ஜனவரி மூன்றாவது வாரத்தில் கோவில் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராம ஜானகி பாத், பக்தி பாத், ராம் பாத் ஆகியவற்றின் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக புதிதாக அமைய உள்ள விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றின் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

அதோடு மிக முக்கியமாக ராம் ஜென்ம பூமியையும், அயோத்தியில் உள்ள மிக முக்கியமான மற்றும் பழமையான ஹனுமன் கோவிலையும் இணைக்கும் சாலை விரிவாக்கப் பணிகளும் நடந்து வருகின்றன. ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஹனுமனையும் தரிசிக்க செல்ல வசதியாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராம் ஜெயண்ட பூமி பாத் 30 மீட்டர் அகலமும், பக்தி பாத் 14 மீட்டர் அகலமும் கொண்டதாகும்.

இக்கோவிலின் சுவர்களில் ராமரின் வாழ்க்கையை சித்தரிக்கும் கலை சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் கருவறை எண்கோண வடிவம் கொண்டதாகும். இக்கோவிலின் கர்ப்ப கிரகத்தில் நிறுவனப்பட உள்ள ராம் லல்லாவின் சிலையின் மீது சூர்ய கதிர்கள் படும் வகையில் கட்டப்பட்டுள்ளன. மூலவர் ராமர் சிலை 5 அடி உயரத்தில் வெள்ளை பளிங்கு கல்லால் அமைக்கப்படட்டுள்ளது. இந்த கோவிலுக்காக 2100 கிலோ எடையுள்ள மணி, எட்டாவிலிருந்து பிரத்யேகமாக செய்து கொண்டு வரப்பட்டுள்ளது. 6 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட இந்த மணியின் விலை 21 லட்சம் ரூபாயாகும்.

கோயிலுக்கு வெளியே துணை ராணுவப் படையினர் நிறுத்தப்படுவார்கள். சிசிடிவிகேமராக்கள் மற்றும் பிறநவீன கருவிகள் கோயில் பாதுகாப்புக்கு நிறுவப்படும். அனைத்து சிசிடிவி கேமராக்க ளையும் கண்காணிக்க ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம்உருவாக்கப்படும். இதற்கான திட்டம் அரசிடம் தெரிவிக்கப்பட்டு ரூ.38 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பை உருவாக்க மாநில அரசு அனைத்து உதவிகளையும வழங்கி வருவதாக மூத்த அரசு அதிகாரி கவுரவ் தியால் தெரிவித்துள்ளார்.

இதனிடையே வெளிநாடு வாழ் இந்தியர்கள், அங்கே பணிபுரிவோர் உள்ளிட்டோரும் அயோத்தி கோயிலுக்கு நன்கொடை வழங்க விரும்பினர். இவர்களை ஒருங்கிணைக்கவும், அயோத்தி ராமர் கோயில் திருப்பணியின் பெயரிலான சமூக விரோதிகளின் மோசடி முயற்சிகளை தடுக்கவும் ராமஜென்ம பூமி டிரஸ்ட் விரும்பியது. இது தொடர்பாக அறக்கட்டளையினர் மத்திய அரசுக்கு விடுத்த வேண்டுகோளின் கீழ் அனுமதியும் கிடைத்துள்ளது.இதன்படி, அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு வெளிநாட்டிலிருந்து நன்கொடை வழங்க விரும்புவோர், அதற்கான வங்கிக்கணக்கு வாயிலாக முறைப்படி அனுப்ப முடியும். இது தொடர்பாக ராமஜென்மபூமி அறக்கட்டளையின் பொதுச்செயலர் சம்பத் ராய் தன் சமூகவலைப் பக்கத்தில் வெளிநாட்டு பங்களிப்புகள் ஒழுங்குபடுத்துதல் சட்டப்படி, ராமர் கோயில் கட்டுமானத்துக்கு இந்தியாவுக்கு வெளியிலிருந்து நன்கொடைகள் பெறுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி வெளிநாட்டு நன்கொடைகளை, ராமர் கோயில் அறக்கட்டளையின் டெல்லி எஸ்.பி.ஐ வங்கி கணக்கு வாயிலாக மட்டுமே அனுப்பலாம்” என்று தெரிவித்துள்ளார்

Tags :
Advertisement