இந்தியாவுக்கு வாங்க- டிரம்புக்கு மோடி அழைப்பு!
இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, “மற்ற நாடுகளில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு அங்கு இருக்க எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை. இந்தியா மற்றும் அமெரிக்காவைப் பொறுத்தவரை, உண்மையிலேயே இந்தியாவின் குடிமக்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கிறார்கள் என்றால், அவர்களை மீண்டும் அழைத்துச் செல்ல இந்தியா தயாராக உள்ளது என்பதை நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம்.மேலும், நாங்கள் இதோடு நிற்கவில்லை. இவ்வாறு சட்டவிரோதமாக தங்குபவர்கள் சாதாரண குடும்பங்களிலிருந்து வருகிறார்கள். அவர்களுக்கு பெரிய கனவுகள் காட்டப்படுகின்றன. அவர்கள் பெரும்பாலும் தவறாக வழிநடத்தப்பட்டு இங்கு கொண்டு வரப்படுகிறார்கள். இதன் பின்னணியில் மனிதக் கடத்தல் உள்ளது. மனித கடத்தலின் முழு அமைப்பையும் நாம் அகற்ற வேண்டும். மனித கடத்தல் முடிவுக்கு வரும் வகையில், இதற்கான சூழல் அமைப்பை அதன் வேரில் இருந்து அகற்ற அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்பட வேண்டும். இந்த அமைப்புக்கு எதிரானது எங்கள் போராட்டம். இந்த முயற்சியில் அதிபர் ட்ரம்ப், இந்தியாவுடன் முழுமையாக ஒத்துழைப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.
முன்னதாக வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக இருந்தது. இதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்’ என்று பிரதமர் மோடி தன் சமூக வலைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரான்ஸ் மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து இரண்டு நாள் அரசு முறை பயணமாக 12ம் தேதி அமெரிக்காவுக்கு சென்றார்.அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் தன் குடும்பத்துடன் சந்தித்தார். பின்னர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபரும், அமெரிக்க ஆளுங்கட்சி முக்கியஸ்தருமான விவேக் ராமசாமி சந்தித்து பேசினார்.
பின்னர், அமெரிக்க அதிபராக 2வது முறை பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்பை, பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் இன்று அதிகாலை சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடியை கட்டியணைத்து டிரம்ப் வரவேற்றார்.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–
‘வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக இருந்தது. சிறப்பான வரவேற்பு அளித்த அதிபர் டிரம்ப்புக்கு நன்றி. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.உக்ரைன் போர் விவகாரத்தில் அமைதியை மீட்டெடுக்க டிரம்ப் முயற்சிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவோம் (மேக் அமெரிக்கா கிரேட் எகைன் – மகா) என்ற டிரம்ப் தெரிவித்திருக்கிறார். இதேபோல இந்தியாவை சிறந்த நாடாக்கும் வளர்ந்த இந்தியாவை நோக்கி நாமும் பயணித்துக் கொண்டுள்ளோம். அமெரிக்க மொழியில் மேக் இந்தியா கிரேட் எகைன். இரண்டு ஜனநாயாக சக்தியையும் ஒன்றிணைந்து மெகா கூட்டணியை உருவாக்கி செழிப்பான நாடாக உருவாக்குவோம்” எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை இந்தியாவுக்கு வர மோடி அழைப்பு விடுத்தார்.
அமெரிக்கா பயணத்தை வெற்றிக்கரமாக முடித்துவிட்டு, பிரதமர் மோடி தாயகம் திரும்பினார். அவரை விமான நிலையத்தில் அந்நாட்டு உயர் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.