கும்பமேளா:டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் பலர் உயிரிழப்பு..
நடப்பாண்டு ஜனவரி 13ம் தேதி, உலகில் அதிகமானோர் கூடும் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான கும்பமேளா விழா தொடங்கிய நிலையில், வரும் பிப்ரவரி 26ம் தேதி வரை 45 நாட்களுக்கு நடைபெறுகிறது. இது வரை 50 கோடிக்கும் அதிகமானவர்கள் கும்பமேளாவில் கலந்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த காலங்களில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் துறவிகள், சாதுக்கள், ஆன்மிக தலைவர்கள் மற்றும் பக்தர்கள் என தினந்தோறும் லட்சக்கணக்கில் பிரயாக்ராஜில் குவிகின்றனர்.
இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 15) இரவு புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் 3 குழந்தைகள் மற்றும் 11 பெண்கள்அடங்குவார்கள். இந்த நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு சென்றவர்கள் என முதற்கட்டமாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு மாற்றாக இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் ஏற முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிகிறது. இந்த நிகழ்வை நேரில் கண்டவர்கள், ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் தாமதித்ததாகவும், இதனால் பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி ரயிலில் ஏற முயன்றதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடைபெறுகிறது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி, இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரணம் தொகை குறித்த அறிவிப்பை இந்திய ரயில்வே வெளியீட்டுள்ளது. அதன்படி, இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் வழங்கப்படும்- படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ1 லட்சமும் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.