For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பிரதமர் பதவி வகிப்பவருக்கு என்று ஒரு மாண்பு இல்லையா?

07:04 AM May 26, 2024 IST | admin
பிரதமர் பதவி வகிப்பவருக்கு என்று ஒரு மாண்பு இல்லையா
Advertisement

'முஸ்லிம்களிடம் அடிமைப்பட்டு அவர்களிடம் எதிர்க் கட்சிகள் முஜ்ரா நடனம் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.'... என்று பிரதமர் மோடி பீகாரில் பிரச்சார மேடையில் பேசி இருக்கிறார். முஜ்ரா என்பது முகலாயர் காலத்தில் உருவான கலாச்சாரம். அரச குடும்பத்தினரும், அதிகார வர்க்கத்தினரும் தங்கள் பொழுதுபோக்குக்காக (!) பணக்கார பாலியல் தொழிலாளி இல்லங்களுக்குப் போவது வழக்கம். அங்கே அவர்களை மகிழ்விக்க இளம் விலைமாதர்கள் ஆடும் நடனத்துக்கு முஜ்ரா நடனம் என்று பெயர். இவை பெரும்பாலும் பாலியல் இச்சையைத் தூண்டும் வகையில் அரைகுறை ஆடைகளுடனும், பல நேரங்களில் ஆடைகளே இன்றியும் இருக்கும்.

Advertisement

அதாவது தேசத்தின் பிரதமர் என்ன செய்கிறார். எதிர்க் கட்சிகளை பாலியல் தொழிலாளிகளுடன் ஒப்பிடுகிறார். இதில் பொதுவாக சொல்லாமல் முஜ்ரா என்றது குறிப்பிடத்தக்கது. காரணம் அதுதான் முகலாய கலாச்சாரத்துடன் - அதாவது அவர் பார்வையில் முஸ்லிம்களுடன் - இணைந்தது. 'இந்துக்களின் ஓட்டுக்காக பாஜகவினர் கோயில் கோயிலாகப் போய் தேவரடியார் நடனமாடி வருகிறார்கள்,' என்று ராகுலோ ஸ்டாலினோ பேசி இருந்தால் என்னவாகி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். எப்படிப்பட்ட அதிர்வலைகளை அது உருவாக்கி இருக்கும்? அவர்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவாகி இருந்திருக்கும்?

Advertisement

அதற்கு சற்றும் குறைவில்லாத அளவுக்குக் கேவலமான பேச்சு இது. இப்படியெல்லாம் பேசுபவர்கள் ஒவ்வொரு கட்சியிலும் இருப்பார்கள்தான். அவர்கள் லோக்கல் லெவல் பிரச்சாரகர்களாக இருப்பார்கள். ஏரியாவில் தரை லோக்கல் ஆட்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டும் வகையில் பேசி அவர்கள் கவனத்தைக் கவர்வது இந்தப் பிரச்சாரகர்களின் வேலையாக இருக்கும். சீனியர் தலைவர்கள் இந்த மாதிரி இறங்க மாட்டார்கள். அதுவும் பிரதமர் பதவி வகிப்பவருக்கு என்று ஒரு மாண்பு இருக்கிறது. பொதுவெளியில் கண்ணியம் காக்க வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கிறது. அந்த அத்தனை கண்ணியத்தையும் மாண்பையும் தொலைத்து விட்டு நிற்கிறார் நமது பிரதமர்.

இந்திய வரலாறு பல்வேறு உரைகளை வழங்கிய பிரதமர்களைப் பார்த்திருக்கிறது. உலக இலக்கியத்தில் இடம் பெற்ற பல்வேறு புத்தகங்களை எழுதி, கூடவே 'Tryst With Destiny' எனும் உலக வரலாற்றை உலுக்கிய சுதந்திர உரையை வழங்கிய நேரு எனும் பிரதமரைப் பார்த்திருக்கிறது. அறுபதுகள் துவங்கி இந்திய நாடாளுமன்றத்தில் கவி நயத்துடன் முழங்கிய கவிஞர் வாஜ்பாய் எனும் பிரதமரைப் பார்த்திருக்கிறது. கவிநயம் இல்லை எனினும் அறிவியல் நயத்துடன் ஐநா சபை, உலக வங்கி, மற்றும் ஆக்ஸ்போர்ட் சபைகளில் முழங்கிய ரோட்ஸ் ஸ்காலர் மன்மோகன் எனும் பிரதமரைப் பார்த்திருக்கிறது.

ஆனால் படிப்பறிவின்றி, ரவுடித்தனம் செய்து திரியும் கீழ்மை நிறைந்த மாந்தர்கள் பேசும் மொழியை தற்போது மேடைகளில் முழங்கிக் கொண்டிருக்கும் பிரதமரை இப்போதுதான் வரலாறு அறிமுகம் செய்து கொள்கிறது.

- ஸ்ரீதர் சுப்ரமணியம்

Tags :
Advertisement