For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் யோசனை சரியா?

06:46 PM Dec 27, 2023 IST | admin
தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் யோசனை சரியா
Advertisement

மிழகத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிப்பதற்கான தேவையுள்ளதா?நிச்சயம் தேவையுள்ளது. வடக்கு வாழ்கிறது , தெற்கு தேய்கிறது என்பது தமிழகத்திற்கு தான் மிகச்சரியாக பொருந்தும். சென்னைக்கு இணையான அல்லது பாதியளவு வளர்ச்சி கூட மதுரையில் இல்லை. கோவை , திருப்பூர் , ஈரோடு , சேலம் மாவட்டங்கள் டாலரிலே உருள்கின்றனர்.இங்கு வளர்ச்சி சமமாக இல்லை. ஒரு புறம் அளவுக்கு அதிகமான வளர்ச்சி . மறுபுறம் அதள பாதாள வீழ்ச்சி. தஞ்சை ,மதுரை , புதுகை ,சிவகங்கை , ராமநாதபுரம் , திண்டுக்கல் , நெல்லை , விருதுநகர், தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொழில் வாய்ப்புகளே இல்லை. சென்னைக்கு மட்டும் தான் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது.

Advertisement

தென் மாவட்ட மக்கள் லட்சக்கணக்கில் வருடந்தோறும் சென்னையை நோக்கி படையெடுக்கின்றனர். தென் மாவட்டங்களில் மக்கள் தொகை மிகப்பரவலாக குறைந்துவிட்டது. எங்கு பார்த்தாலும் முதியவர் கூட்டம் தான். அதை விட்டால் 20 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டுமே. படித்து முடித்துவிட்டால் அவர்களும் சென்னைக்கு ஓட வேண்டும். இது தான் தென் மாவட்டங்களின் நிலை.

ஒரே மாநிலமாக இருப்பதால் சென்னைக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது . தமிழர்கள் சென்னைக்குள் மட்டுமே அடைக்கப்படுவதால் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்துவிட்டது. ஆந்திராவிலிருந்து தெலுங்கானா பிரிந்தாலும் இரு மாநிலத்திலும் வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. வட மாநிலங்கள் பிரிக்கப்படும் முன்பு வரை கடுமையான வறுமையிலும் கல்வியில் பின் தங்கியும் இருந்தது. பல மாநிலங்கள் உருவான பின்பு தான் நிர்வாகம் செய்ய எளிதாக இருக்கும்.

Advertisement

தேசிய அரசியலில் மக்களின் முடிவை ஏற்றுக் கொள்ள அரசியல் கட்சிகளுக்கு நிர்பந்தம் ஏற்படும். மதுரை தலைநகராக இருந்தால் ராம்நாடு மீனவர் தாக்கப்படும் போது போராட்டம் செய்வது எளிதாக சென்றடையும். சிறிய மாநிலத்தில் மக்கள் தான் முதலாளிகள். புதுச்சேரி , கோவா , டெல்லி முதல்வர்களை எல்லாம் பாருங்கள் . மக்களோடு மக்களாக தான் இருப்பார்கள்.இதை தவிர்க்க விரும்பினால் அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் சென்னையில் உள்ள நிறுவனஙகளை பிரித்து அனுப்ப வேண்டும்..

இந்த கோரிக்கையை பாமக உள்ளிட்ட கட்சிகள் பல ஆண்டுகளாகவே எழுப்பி வருகின்றன. குறிப்பாக பாமக தலைவர் ராமதாஸ் தமிழ்நாட்டை மூன்றாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த ஆண்டும் முன்வைத்திருந்தார். சென்னை, கோவைக்கு இணையாக மதுரையில் தொழிற்சாலைகள் இல்லாததால் மாவட்டங்களை மூன்றாக பிரிக்க வேண்டும் என அவர் கோரி இருந்தார்.குறிப்பாக 70 களின் பிற்பகுதியிலேயே வட தமிழ்நாடு கோரிக்கை எழுப்பப்பட்டது. எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார், 1976 ஆம் ஆண்டிலேயே திட்டக்குடியில் ஒரு மாநாட்டை நடத்தி வன்னியர் மாநிலம், அல்லது வட தமிழ்நாடு என்ற பெயரில் மாநிலத்தை அமைக்க வேண்டும் என்று கோரினார். இதேபோல் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்த சேதுராமன் மதுரையை தலைமையிடமாக கொண்டு தென் தமிழ்நாடு என்ற தனி மாநில கோரிக்கையை பல ஆண்டுகளுக்கு முன்பே முன்வைத்தார்.

கொங்குநாடு முன்னேற்றக்கழகம் என்ற கட்சி கோவையை தலையிடமாகக் கொண்டு மேற்கு தமிழ்நாடு என்ற தனி மாநிலத்தை உருவாக்கிட வேண்டும் கோரிக்கையை முன்வைத்தே உருவாக்கப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வென்றவுடன் ஒன்றிய அரசு என்று கூறி வந்ததால் கொங்கு நாடு மாநிலமாகப்போகிறது என்ற தகவல் வெகுவாக பரவியது. அந்த சமயத்தில் தமிழ்நாட்டை கொங்குநாடு, சோழநாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, நடு நாடு என ஐந்தாக பிரித்தும் ஒரு மேப் அப்போது பரப்பப்பட்டது..

இந்நிலைட்யில் தலைநகரம் மத்தியப்பகுதியில் இருப்பது தான் நிர்வாகத்திற்கு வசதியாக இருக்கும் என கூறப்பட்டாலும், Decentralisation முறையில் எல்லா அதிகாரங்களும் மண்டல ரீதியில் பிரித்து வழங்கப்பட்டுள்ளன. சென்னை ஒரு de jure தலைநகரம் மட்டும் தான். மேற்படி சென்னை தவிர்த்த வடதமிழகம் தான் இன்று தமிழகத்திலேயே வளர்ச்சிக்குன்றிய பகுதிகள். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்கள் தான் தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்கள்.

அதே போல தென்தமிழகம் - மதுரை, விருதுநகர், தூத்துக்குடி எல்லாம் நல்ல தொழில்வளர்ச்சியைக் கண்டுள்ளன. தென்தமிழ்நாடு வளர்ச்சி குன்றியிருக்கிறது என்ற வாதமே அபத்தமானது. இந்த தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டுமென்ற வாதம் தொடர்ந்து அந்தந்த பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் சாதிகளாலும், சாதி சங்கங்களாலும் தான் இந்தப் பார்வையயே அறிமுகப்படுத்தப்படுகிறது. அறிஞர்கள் யாரும் இதைப்பற்றி சட்டை செய்யவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமின்றி இப்போதே தமிழ்நாடு திவாலான நிலையில் உள்ளது. கொடுக்கவேண்டியக் கடன்தொகை மூன்றரை லட்சம் கோடிகளுக்கும் அதிகம். இன்னும் மாநிலத்தைப் பிரித்துக் கொண்டேபோனால் அவ்வளவுதான்.. அரசு அதிகாரிகளின் தொல்லை மற்ரும் இன்னபிற விஷயங்களை நாமெல்லாம் தாங்கமுடியாது என்பதையும் நினைவில் கொண்டால் நல்லது.

நிலவளம் ரெங்கராஜன்.

.

Tags :
Advertisement