For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இந்தியாவில் ‘மத சுதந்திரம்’ மோசமா?-அமெரிக்கா சீண்டல்

09:50 PM Oct 03, 2024 IST | admin
இந்தியாவில் ‘மத சுதந்திரம்’ மோசமா  அமெரிக்கா சீண்டல்
Advertisement

லகின் பெரியண்ணா என்று சொல்லிக் கொள்ளும் அமெரிக்க வெளியுறவுத் துறை வருடா வருடம் அறிக்கை ஒன்றை வெளியிடும். அதில் ஆண்டுதோறும் நம் நாட்டில் மத சுதந்திரம் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்தும் அலசுவது வாடிக்கை . குறிப்பாக இந்தியாவில் மத சுதந்திரம் மோசமடைந்து வருவதாகவும், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடுவது வாடிக்கை.அந்த வகையில் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (USCIRF), இந்த ஆண்டும் பாரததேசத்தில் மத சுதந்திரம் வேகமாக மோசமடைந்து கவலைக்குரிய பாதையை நோக்கி செல்வதாக தெரிவித்து இடைக்கால அறிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisement

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் மத சுதந்திரம் எப்படி இருக்கிறது என்பது குறித்துக் கண்காணிக்கச் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் என்ற அமைப்பு உள்ளது.இந்த அமைப்பு உலக நாடுகளில் மத சுதந்திரம் எப்படி இருக்கிறது என்பது குறித்து ஒவ்வொரு ஆண்டும் ரிப்போர்ட் அளிக்கும். அந்த அமைப்பு தரும் ரிப்போர்ட்டிற்கு ஏற்ப அமெரிக்க வெளியுறவுத் துறை நடவடிக்கை எடுக்கும். மத சுதந்திரம்: அதன்படி இந்தாண்டிற்கான ரிப்போர்ட்டை இந்த அமைப்பு இப்போது வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது அரசியல் தலைவர்கள் பேசிய வெறுப்புப் பேச்சுக்களை சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்கா, அது முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களை அதிகரிக்க வழிவகுத்ததாக கூறியுள்ளது. மேலும் வழக்கம் போல் மதமாற்றத் தடைச் சட்டங்கள், பசு வதைச் சட்டங்கள், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் போன்ற பாரபட்சமான சட்டங்களைக் கொண்டு வந்து இந்திய அரசு பிற மதங்களைச் சேர்ந்தவர்களை ஒடுக்கி, கட்டுப்படுத்துவதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், பல ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் மதத் தலைவர்கள் தன்னிச்சையாக எந்த நடைமுறையும் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் இது மத சுதந்திரத்தை மீறலின் உதாரணம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Advertisement

நேற்று (அக்டோபர் 2) வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் 2024 ஜனவரி மற்றும் மார்ச் மாதத்திற்கு இடையில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 161 வன்முறை சம்பவங்களை நிகழ்ந்துள்ளதை பட்டியலிட்டுள்ளது. அதில் 47 சம்பவங்கள் சத்தீஸ்கரில் நிகழ்ந்ததாகவும் கூறியுள்ளது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் உத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்ததாகக் கூறி 20 கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.பொதுத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, முஸ்லிம்களை குறிவைத்து குறைந்தது 28 தாக்குதல்கள் நடந்ததாகவும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் அதிகரிப்பும் தேர்தலின்போது பிரதமர் மோடி வெளியிட்ட கருத்துகளுடன் தொடர்புபடுத்தியும் அறிக்கை விவரிக்கிறது.

“2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, பல அரசியல் தலைவர்கள் முஸ்லிம்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பூட்டும் பேச்சுகளை அதிகளவில் பயன்படுத்தினர்” என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.தேர்தல் பிரச்சாரங்களின் போது, “இந்து மதத்தை எதிர்க்கட்சிகள் அழித்துவிடும்” என்று மோடியும், ‘ஷரியா சட்டத்தை எதிர்க்கட்சிகள் திணிக்கும்’ என்று அமித்ஷாவும் கூறி இருந்தனர்.

கடந்த மார்ச் மாதம், இந்தியா வந்த ஐநா நிபுணர்கள் குழு ஒன்று, மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மற்றும் வெறுப்பு குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்ததையும் அமெரிக்கா வெளியிட்டுள்ள ஸ்பெஷல் அறிக்கையில் நினைவு கூறப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் ராமர் கோயில் திறப்பு விழாவைத் தொடர்ந்து, மும்பையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் நிதேஷ் ரானே மற்றும் கீதா ஜெயின் ஆகியோரின் பேச்சுகளால் தூண்டப்பட்ட முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களின் உதாரணத்தை அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது.

மோடி தலைமையிலான மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய ‘2024 வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை’ விமர்சித்துள்ள அமெரிக்கா, அந்த மசோதாவின் புதிய விதிகள் சமூகத்தின் உரிமையை சிதைக்கும் என்றும் கூறியுள்ளது. இப்படி அறிக்கையில் பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம், இந்தியாவில் மத சுதந்திரம் தொடர்ந்து மோசமடையும் பாதையை நோக்கி செல்வதாக கவலை தெரிவித்துள்ளது.மேலும், “மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்கள், பசு வதைச் சட்டங்கள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் போன்ற பாரபட்சமான சட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் இந்திய அரசாங்கம் தொடர்ந்து சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்கி வருகிறது” என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்த அறிக்கைக்கும் வழக்கம் போல் கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை, சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் ஒரு அரசியல் நோக்கம் கொண்ட அமைப்பாகும் என விமர்சித்துள்ளது. மேலும், இந்தியாவைப் பற்றிய உண்மைகளை தவறாக சித்தரித்து தொடர்ந்து பரப்பி வருகிறது என்றும் இந்த அறிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம் என்றும் கூறியுள்ளது.அமெரிக்காவின் USCIRF ஆணையம் தனது நேரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி அமெரிக்காவில் நிலவும் மனித உரிமைகள் பிரச்சினைகளைத் தீர்க்க கவனம் செலுத்த வேண்டும் எனவும் இந்திய வெளியுறவுத் துறை கடுமையாக சாடியுள்ளது.

Tags :
Advertisement