For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இன்டர்நேஷனல் டீ டே!

07:35 AM May 21, 2024 IST | admin
இன்டர்நேஷனல் டீ டே
Advertisement

ர்வதேச தேநீர் தினம். உள்ளத்தையும், உடலையும் உற்சாகமாக வைக்கின்ற உற்சாக பானம் தான் தேநீர். சாமானியர்கள் தொடங்கி அனைத்து தரப்பு மக்களும் காலை, மாலை, பகல், இரவு என எந்நேரமும் தங்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும் எனர்ஜி டானிக் தான் தேநீர். நம்மில் பலருக்கும் ஒரு கப் தேநீர் என்பது மனிதர்களுக்குள், இருக்கும் அன்பை, காதலை, நட்பை, பாசத்தை வெளிப்படுத்தக்கூடிய மேஜிக்பானமாக இருக்கும். “வாங்க ஒரு டீ சாப்பிடலாம்...” என்ற ஒரு வரியே போதும்! நம்மில் பலரும் மனதில் இருக்கும் அழுத்தம் சற்றே குறைந்தது போல் உணர்வோம்.இப்படி உடல், பொருள், ஆவி, கலாச்சாரம் என நம்மோடு பின்னிப்பிணைந்துள்ளது தேநீர். வீடு, அலுவலகம், நண்பர்கள் சந்திப்பு என எங்கு சென்றாலும் 'சூடா ஒரு டீ சொல்லுப்பா' என ஒரு குரல் ஒலிக்கும். அந்த குரலை எல்லோரும் அன்றாடம் கடந்து கொண்டு தான் இருக்கிறோம். இப்படி ஸ்ட்ராங்கா, லைட்டா, மீடியமா, சர்க்கரை கம்மியா என தேநீர் குறித்த குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த வகையில் உள்ளூர் தொடங்கி உலக லெவலில் பிரசித்தி பெற்ற பானம் இது.

Advertisement

அலுவலகங்களில், தேநீர் இடைவேளை என்று ஒன்று இருக்கும். அதுவரை மூளையை பிய்த்துக்கொண்டிருக்கும் நமக்கு, மூளையை புதுப்பித்துக்கொண்டு மீண்டும் வேலையைத்தொடர தேநீரானது உதவும். சிலருக்கு தேநீர் குடித்தால் தான் வேலையே ஓடும். ஒரு நாளைக்கு 5 அல்லது 6 தடவை தேநீர் குடிப்பவர்களும் உண்டு. இந்தியாவைப் பொருத்த வரையில் ஏழைகளின் பானம் தேநீர். காலையில் ஒரு டீயும் ஒரு ரொட்டியும் தான் பெரும்பாலான பேச்சுலர்களின் காலை உணவு என்றே சொல்லலாம். அதேபோல் என்னதான் காலை உணவை ஒரு கட்டு கட்டினாலும், ஒரு தேநீர் குடித்தால் தான் சாப்பிட்டு முடித்த திருப்தியானது சிலருக்கு ஏற்படும். அலுவலகங்களில் தேநீர் கொண்டு வரும் பொடியனின் கையில் கம்பிவளையில் குடிக்கொண்டிருக்கும் தேநீரானது ஆவிபறந்தபடி இருப்பதைப் பார்த்தால், டீ பிடிக்காதவர்கள் கூட அதை பருக நினைப்பார்கள்.

Advertisement

தேயிலையின் வரலாறு சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய சீனாவில் உள்ளது. ஆனால் தேநீரைப் போலவே சுவையான, வரலாறும் கற்பனையும் கலந்தது. அந்தக் கதையும் ஒன்றல்ல, பல கதைகள். அவற்றில் பிரபலமான இரண்டு கதைகள் சீன தேசத்திலிருந்து நமக்குக் கிடைப்பவை. காரணம், காகிதத்தை மட்டுமல்ல; தேயிலையைக் கண்டறிந்து அதன் ருசியை உலகுக்குப் பகிர்ந்தவர்களும் சீனர்கள்தாம். தேயிலையை அவர்கள் கண்டறிந்தது சராசரியாக கி.மு. 2500களில் என்கிறது சீனர்களின் வரலாறு. கி.மு.551-ல் பிறந்த சீன மெய்யியலாளர் கன்பூசியஸ் தன்னுடைய ஆன்மிகக் கவிதையொன்றில் தேநீரைப் புகழ்ந்து குறிப்பிட்டிருக்கிறார் என்றால் அவரது காலத்திலேயே புகழ்பெற்ற பானமாக தேரீர் இருந்திருக்கிறது அல்லவா? வாருங்கள் அந்த இரண்டு கதைகளையும் ஒரு வலம் வரலாம்.

மூலிகைச் செடிகள், தாவரங்களின் இலைகள் ஆகியவற்றை வாயில் போட்டு மென்று, அவை தரும் ருசியின் வழியாக அவற்றின் மருத்துவக் குணங்களைப் பற்றி எழுதி வைத்த ஒரு சீனப் பேரரசர் இருந்தார். அவர்தான் யான் வம்ச சாம்ராஜ்ஜியத்தைச் சீனாவில் நிறுவிய ஷேன் நோங் (神農). இவர் இப்படிச் செடிகளைச் சுவைத்து, கொதிக்கும் தண்ணீரில் இலைகளைப் போட்டு அவற்றின் சாறு இறங்கியதும் அதைச் சுவைத்துப் பார்த்து, அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் என்கிற மருத்துவக் குறிப்புகளை எழுதி வைத்துச் சென்றிருக்கிறார். இந்த அரசரை இன்றைக்கும் சீனர்கள் தங்களுடைய மூதாதைகளில் முக்கியமானவராக, நாட்டர் தெய்வமாக வழிப்பட்டு வருகிறார்கள். செடிகளைக் கொதிக்கும் தண்ணீரில் ஷென் நோங் போட்டுப் பார்த்த ‘டெக்னிக்’ என்பது அவர், தேயிலையைக் கண்டுபிடித்த பிறகே செய்யப்பட்ட முறை குறிப்பிடுகிறார்கள் சீனர்கள்!

அதாவது, தனது தேசத்தில் குறுக்கும் நெடுக்குமாகப் பயணம் செய்து மக்களைச் சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்த ஷென் நொங், தன்னுடைய பயணத்தில் சுடு தண்ணீரை மட்டுமே அருந்துவார். ஒருமுறை மலைப்பிரதேசம் வழியாக சென்றுகொண்டிருந்தபோது ஒரு சிறிய மரத்துத்துக் கீழே அடுப்பு மூட்டி, அதில் பாத்திரம் வைத்துத் தண்ணீர் ஊற்றி அதைக் கொதிக்க வைத்துக்கொண்டிருந்தார் அரசரின் உதவியாளர். அப்போது குளிரைச் சமாளிப்பதற்காக அடுப்பின் அருகில் வந்து அமர்ந்தார் ஷென் நொங். அந்த நேரத்தில் வேகமாகக் காற்று வீச, அந்தச் சிறிய மரத்திலிருந்து பழுத்திருந்த இலைகள் பல கொதித்துக்கொண்டிருந்த சுடுநீர் பாத்திரத்தில் விழுந்தன. அடுத்த நிமிடமே சுடு தண்ணீரின் வண்ணம் பொன்னிறத்துக்கு மாறியதுடன் அதிலிருந்து எழுந்த மணம், ஷென் நொங்கைச் சட்டென்று கவர்ந்தது. அதை எடுத்து ஊற்றப்போன உதவியாளரைத் தடுத்து, கிண்ணத்தில் சிறிது ஊற்றித் தரும்படி கேட்டார். உதவியாளரோ அரசருக்கு ஏதும் ஆகிவிடுமோ எனப் பயந்து மெய்க்காவலரை அழைத்தார். மெய்க்காவலர் ஓடி வந்து, அரசன் அருந்தும்முன், இலையின் சாறு இறங்கிய சுடுநீரை அருந்திவிட்டுக் காத்திருந்தார். சில நிமிடங்கள் கடந்ததும் அரசன் மெய்க்காவலரிடம் கேட்டார், “எப்படியிருந்தது? உன்னால் மூச்சுவிட முடிகிறதா?” மெய்க்காவலர் சொன்னார், “உற்சாகமாக இருக்கிறது அரசே..! இன்னும் அருந்த வேண்டும் எனத் தோன்றுகிறது” என்றார். அடுத்து ஷென் நோங் அருந்திவிட்டு மகிழ்ச்சியுடன் புன்னகைத்தார். இப்படித்தான் ஷென் நொங் வழியே தேயிலைக் கண்டுபிடிப்பும் தேநீர் கண்டுபிடிப்பும் ஒருசேர நிகழ்ந்தது என்கிறது சீன நாட்டர் கதை.

இன்னொரு கதை என்னவென்றால் கௌதம புத்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு, அவரது சீடர்களில் ஒருவராக ஆனவர், வட தமிழ்நாட்டிலிருந்து சீனம் சென்று சித்த மருத்துவத்தையும் பௌத்தத்தையும் பரப்பியவர் என்று போதி தர்மரைப் பற்றி இணையத்தில் நிறைந்திருக்கும் வாய்மொழி வரலாறுப் பதிவுகள் விவரிக்கின்றன. இவர் தியானக் கலையிலும் வல்லவராக இருந்தார் என்றும் இவரது கண் இமைகளே தேயிலைச் செடிகளாக முளைத்தன என்றும் சுவாரசியமான வரலாறு(?)கிடைக்கிறது.

அந்தக் கதையின்படி, கண்களை மூடி, உலகை மறந்து, இரவு, பகல் பாராமல் தியானத்தில் மூழ்கினால் மட்டுமே வாழ்க்கையை வெல்ல முடியும் என்று நம்பினார் போதி தர்மர். அதனால் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்தார். ஆனால், தியானம் ஒரு கட்டத்தில் தூக்கமாக மாறி அவரைத் தோல்வியுறச் செய்தது. இதனால் கண்களைத் திறந்தபடி தியானத்தில் அமர்ந்தார். மீண்டும் தூக்கம் தொந்தரவு செய்யவே, தூக்கம் என்பது கீழான மானிடப் பலவீனம் என்று கருதிய போதி தர்மர், தன்னுடைய கண்களின் இமைகளை அறுத்துத் தரையில் வீசிவிட்டு ரத்தம் சொட்டச் சொட்ட தியானத்தைத் தொடர்ந்தார். அவர் அறுத்து வீசிய இமைகள் மறுநாள் பசுஞ்செடிகளாக முளைத்து இலை விட்டிருந்தன. அந்த இலைகளை போதி தர்மர் சுவைத்துப் பார்த்தபோது அவை புத்துணர்ச்சி அளித்தன. அந்தச் செடிகள்தாம் தேயிலை என்பதாக முடிகிறது அந்தக் கதை. இந்த இரண்டு கதைகளிலும் நிறைந்திருக்கும் கற்பனை, புராணத் தன்மை ஆகிய அனைத்தையும் ஒதுக்கிவிடலாம். இதுபோன்ற கதைகள் சீனர்களிடம் நிறைந்திருப்பதிலிருந்தே தேயிலையையும் தேநீரையும் அவர்கள் முன்னதாகச் சுவைத்திருக்கிறார்கள் என்கிற தர்க்க ரீதியான நாம் முடிவுக்கு வரலாம்.

சீனத்தில் தேநீர் பிரபலமானதும் வெகு சீக்கிரமே பௌத்த துறவிகளின் வழியாக ஜப்பானை அடைந்தது. கி.மு.400இல் சானோயு ( 茶の湯 - chanoyu ) அல்லது சடோ என்கிற பெயரில் தேநீர் அருந்துவதையும் விருந்தினர்களுக்குத் தேநீர் அளிப்பதையும் ஓர் உயர்ந்த சடங்காக, காலச்சாரத்தின் கலாபூர்வ அங்கமாக மாற்றிக்கொண்டார்கள் ஜப்பானியர்கள். அவர்கள் தேநீரை நுரை ததும்பிய சூடான ஒரு சூப் போல அருந்தினார்கள் என்கிறது அவர்களுடைய செவ்வியல் வரலாறு. அவர்கள் உலர் பச்சைத் தேயிலையைத் தண்ணீரில் போட்டு அதில் மிதமான அளவு உப்பைப் போட்டுக் கொதிக்க வைத்ததுடன், அதில் இலவங்கம், இஞ்சி ஆகியவற்றையும் போட்டுக் பருகி வந்திருக்கிறார்கள்.

ஆனால், தேநீரை எப்படித் தயாரிப்பது என்பது பற்றிய ஓர் ஒழுங்குமுறை அறிவினை உலகுக்கு முதலில் ஒரு புத்தகமாக எழுதிக்கொடுத்தார் ஒரு சீனர். அவரது பெயர் லூ யூ சாங். ‘தேநீர் புத்தகம்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய புத்தகம் கி.பி.780இல் வெளியாகி கிழக்கு நாடுகளில் தேயிலையுடன் பிரபலமானது. ‘தேநீரின் பைபிள்’ என்று புகழப்பட்ட அந்தப் புத்தகம் உலர்ந்த தேயிலையைக் கொண்டு தேநீர் தயாரிப்பதைச் சொல்லிக் கொடுத்ததுடன் தேயிலைப் பயிரிடுவதையும் சொல்லிக்கொடுத்தது. அதன் பிறகே, ஆங்கிலேயர்களுக்கும் பிடித்துபோனது தேநீர். தங்கத்தைத் தேடியதுபோல் தேயிலையைத் தேடியும் அவர்கள் புறப்பட்டதும் தேயிலை விளையும் நிலங்கள் இருந்த பகுதிகளைக் காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்ததும் வரலாறு.

எது எப்படியோ... இன்று தேநீர் உலகலாவிய பானமாக திகழ்கிறது. அதில் மாற்றுக்கருத்தே இல்லை! அதனால்தான் இந்த சர்வதேச தேநீர் தினமும்!சர்வதேச தேயிலை தினத்தின் துல்லியமான தேதியில் நிச்சயமற்ற நிலை உள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை டிசம்பர் 15 ஐ சர்வதேச தேயிலை தினமாக அங்கீகரித்திருந்தாலும், மே 21 இந்த நாளுக்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

பால் கலந்து குடிப்பது, சர்க்கரை சேர்ப்பது, எதுவும் சேர்க்காமல் தேயிலையை மட்டும் கொதிக்க வைத்து குடிப்பது, குளுகுளுவென கூலாக குடிப்பது என பல வகையில் தேநீர் தயார் செய்து, பருகப்பட்டு வருகிறது.

இப்பேர்பட்ட தேநீரும், அதன் ஆரோக்கிய நன்மைகளும்

>தேநீர் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்

>உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தேநீரை நிச்சயம் தங்கள் டயட்டில் சேர்க்க வேண்டும் என சொல்கிறார்கள் வல்லுநர்கள். இதில் உள்ள ஃபிளாவனாய்டு (Catechin) கொழுப்பை குறைக்க பெரிதும் உதவும் என சொல்லப்படுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கிரீன் டீ பருகலாம் என வல்லுநர்கள் சொல்கின்றனர்.

>கிரீன் மற்றும் பிளேக் டீயில் காணப்படும் நுண்ணூட்டச்சத்துக்கள் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

>மன அழுத்தத்தை போக்கும் அருமருந்தாக தேநீர் போற்றப்படுகிறது. அதற்கு காரணம் அதில் உள்ள கலவைகள் என சொல்லப்படுகிறது. பதட்டம், தலைவலி, மன அழுத்தம் போன்றவை ஒரு கோப்பை தேநீரை பருகினால் பறந்து போகும் என சொல்லப்படுகிறது.

>தேநீரில் உள்ள Tannin-கள் வயிறு சார்ந்த பிரச்சனைகளை களைய அதிகம் உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Tannin குடல் அழற்சியை குறைக்க உதவுவது தான் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

>இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த தேநீர் பெருமளவு உதவுவதாக சொல்லப்படுகிறது. மாரடைப்பு உட்பட இருதய நோய் அபாயத்தை ஓரளவு குறைக்க இந்த பானம் உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

>தேநீர் அருந்துவதால் புறஊதா கதிர்களில் இருந்து சருமம் பாதுகாக்கப்பட்டு சரும புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது என ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

>தேநீரில் இருந்து பற்கள் உறுதியாக இருக்க தேவையான புளூரைடு ஒரு கோப்பைக்கு 1 மில்லி கிராம் வீதம் கிடைக்கிறது

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement