For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்!

07:06 AM Jun 26, 2024 IST | admin
சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்
Advertisement

தொழில் நுட்பத்திலும், விஞ்ஞானத்திலும் அதி உச்சத்திலிருக்கும் காலக்கட்டத்தில்தான் நாம் வசித்து வருகிறோம். மனித உரிமைகள் பற்றியும் ஊடக சுதந்திரம் பற்றியும் மிக அதிகமாகவே பேசி வருகிறோம்.ஆனால் நாகரீகமடைந்த சில மனித மனங்கள் மிருகங்களை விட மோசமான நிலையிலேயே இருந்து வருகிறது என்பதற்கு நாம் வாழும் உலகிலேயே பல நிதர்சனங்களை சந்தித்து வருகிறோம்.

Advertisement

ஜனநாயகத்தை நிலைநாட்டப் போவதாகவும் தீவிரவாதத்தை ஒழிக்கப் போவதாகவும் கிளம்பியவர்கள் மனித குலத்திற்கு எதிரியாக திகழ்ந்துவரும் அவல நிலையும் தொடர்கிறது.மனிதன் ஒரு சமூகப்பிராணி என்பது சில சமூகவியலாளர்களின் கருத்து. ஆனால் தனது இனத்தைச் சார்ந்தவர்களையே காட்டுமிராண்டித்தனமாக கொடுமைப்படுத்தி அல்லலுக்கு ஆளாக்கும் விநோதம் மனிதர்களிடையே மட்டுமே நாம் காண இயலும்.

Advertisement

நாகரீகமும் விஞ்ஞானமும் வளர வளர மனிதர்களை வதைச்செய்யும் உத்திகளும் நவீனமடைந்து வரும் அவலநிலையும் தொடர்கிறது. சித்திரவதைகளின் கொடூர முகம் அடிக்கடி வெளிப்பட்டாலும் கூட பெரும்பான்மையான மனித சமூகம் இதனை மௌனமாக அங்கீகரித்து வருவதுதான் மிக துரதிர்ஷ்டவசமான நிலையாகும். இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையினால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ஆம் நாள் உலகெங்கிலும் உள, உடல் ரீதியாக பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளானோர்களுக்கு ஆறுதல் மற்றும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் International Day in Support of Torture Victims அதாவது சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி மனித சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் இதன் மூலம் உலகில் விடுதலை நீதி மற்றும் அமைதி ஏற்பட வாய்ப்புண்டு என்பதை இத்தீர்மானம் வலியுறுத்துகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் 200க்கும் மேற்பட்ட சிகிச்சை மையங்கள் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டோருக்காக செயல்பட்டு வருகின்றன.ஆண்டுதோறும் சித்திரவதை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு பல்வேறு மனித உரிமை அமைப்புகள் இதற்கெதிராக போராட்டங்களையும் கருத்தரங்குகளையும் நடத்தி வந்தாலும் கூட சித்திரவதையின் கொடூரங்கள் குறைந்தபாடில்லை.

சித்திரவதைகளை தனிமனிதர்கள் செய்வது ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும் இன்று அரசாங்கமே அதை நிறைவேற்றி வருவது தான் வேதனையை அதிகரிக்கிறது.மக்களின் நலன்களையும் கண்ணியத்தையும் காப்பாற்ற வேண்டிய அரசு அதிகாரிகளே மனிதர்களை பீதிவயப்படுத்தும் நோக்குடன் இன்று சித்திரவதைகளை செய்து வருகின்றனர். இவர்கள் மேற்கொள்ளும் சித்திரவதைகள் என்பது நெஞ்சை உலுக்குகின்றன. இத்தகைய 'அங்கீகாரம்' பெற்ற சித்திரவதைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இல்லையென்றால் சித்திரவதை எதிர்ப்பு தினம் என்பது வெறும் சடங்காக மாறிவிடும். அனைத்து விதமான சித்திரவதைகளுக்கும் எதிராக மனித சமூகம் குரல் எழுப்ப வேண்டும்.அதற்கான உறுதிமொழியை இன்று ஏற்போம்.!

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement