தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

மே டே -ஜஸ்ட் ஹாலி டே மட்டுமல்ல- ரத்தம் சிந்தி போராடியதை நினைவூட்டும் தினம்!

06:02 AM May 01, 2024 IST | admin
Advertisement

நாம் இன்று வாழும் இந்த நவீன யுகம் ஆண்டாண்டு காலமாய் உழைத்துக் கொண்டிருக்கிற பாட்டாளி வர்க்கத்தின் வியர்வைத் துளிகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கான ஒரு தினம் என்பது எவ்வளவு கொண்டாட்டமாக இருக்க வேண்டும். ஆனால், மிகுந்த போராட்டங்களுக்கும் வலிகளுக்கும் பிறகே வரலாறு தொழிலாளர்களுக்கென ஒரு தினம் கொண்டாட அனுமதித்தது...ஆம்.. தொழிலாளர் தினம்.. சுதந்திர தினம், அன்னையர் தினம், காதலர் தினம் தொடங்கி முட்டாள்கள் தினம் வரை அனைத்திற்கும் நாம் ஒவ்வொரு தினம் கொண்டாடுகிறோம். சில தினங்களுக்குப் பின்னால் காரணங்கள் உண்டு. ஆனால் சில தினங்களுக்குப் பின்னால் வரலாறே உண்டு. மே தினத்திற்குப் பின்னால் அப்படி ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு உண்டு.

Advertisement

நாடோடியாக இருந்த மனிதன் உழைப்பின் மூலமாகவே இன்று நவ நாகரீகமாக வாழப் பரிணாமம் அடைந்தான். ஆனால் உழைப்பாளிகளுக்கு அவர்களின் உழைப்புக்கான பிரதிபலன் கிடைக்கிறதா என்பது இன்றளவும் கேள்விக்குறியே. 8 மணி வேலை, அடிப்படை ஊதியம், தொழிலாளர் வைப்பு நிதி, காப்பீடு, பெண்களுக்குப் பணியிடத்தில் கிடைக்கும் உரிமைகள், தொழிற்சங்கங்கள் என இன்று நாம் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளுக்கும் மே தினப் போராட்டமே விதையாய் அமைந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டு, நாடுகள் ஒன்றையொன்று முந்திக் கொண்டு தொழில்துறையில் ஜாம்பவான்களாக முயன்று கொண்டிருந்த காலம். முதலாளிகளால் தொழிலாளர்கள் சக்கையாகப் பிழியப்பட்டனர். வேலை செய்யும் இடங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கோ, நலனுக்கோ முக்கியத்துவம் தரப்படாமல் இருந்த காலகட்டம் அது. சர்வசாதாரணமாக பதினெட்டிலிருந்து இருபது மணிநேர வேலை தொழிலாளர்கள் மீது நிர்பந்திக்கப்பட்டது.

Advertisement

அந்தச் சூழலிலும் அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் தரப்படாமல் மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்பட்டது. இந்த அநியாயத்தை எதிர்த்து தொழிலாளர்கள் அமெரிக்காவில் போர்க்கொடி தூக்கினர். வேலைநிறுத்தங்களிலும் ஈடுபடத் தொடங்கினர். தொடக்கத்தில் இந்த வேலை நிறுத்தங்களின் பிரதானக் கோரிக்கை `அதிக ஊதியம்' என்பதே. ஆனால், வேலை நேரத்தைக் குறைப்பதன் மூலம்தான் தாங்கள் சுரண்டப்படுவதைத் தவிர்க்க முடியும் என்பதை உணர்ந்த தொழிலாளர்களின் போராட்டங்கள் வேலை நேர குறைப்புக்கான கோரிக்கையாக வலுக்கத் தொடங்கியது.இந்தச் சுரண்டலை எதிர்த்துப் பல போராட்டங்கள் நடைபெற்றன. 1806-ம் ஆண்டு அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத் தொழிலாளர்கள் போராடத் தொடங்கியபோதே, அவர்கள் கடினமாக வேலை வாங்கப்பட்டது உலகிற்குத் தெரியவந்தது.பிலடெல்பியா நகர இயந்திரத் தொழிலாளர்களின் சங்கம்தான் உலகின் முதற் தொழிற்சங்கமாகக் கருதப்படுகிறது. இந்தத் தொழிற்சங்கம் உருவான இரு ஆண்டுகளுக்குப் பின்புதான் இங்கிலாந்தில் தொழிற்சங்கங்கள் உருவாகத் தொடங்கின. அதேபோல பத்து மணி நேர வேலை நாள் என்ற கோரிக்கையை முதன்முதலாக வைத்த பெருமையும் இச்சங்கத்துக்கே உண்டு. தொடர் போராட்டத்தின் எதிரொலியாக வேன் பியுரன் தலைமையிலான அமெரிக்க அரசு, அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பத்து மணி நேர வேலை நாள் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களும் பத்து மணி நேர வேலையை வலியுறுத்திப் போராடி அதில் வெற்றியும் கண்டனர். அதே சமயம் ஆனால், தனியார் நிறுவனங்களில் வேலை செய்வோருக்கு இது எந்தவித பலனையும் அளிக்கவில்லை. அனைவருக்கும் பத்து மணிநேர வேலை என்கிற தங்களின் கோரிக்கையோடு தொழிலாளர்கள் தொடர்ந்து போராடினர்.

கார்ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் கடுமையான உழைப்பில் உருவான கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை (Communist Manifesto) பாட்டாளி வர்க்கத்திடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மார்க்ஸ் ``உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்; நீங்கள் இழப்பதற்கு எதுவுமில்லை. பெறுவதற்கோ பொன்னான ஒரு உலகம் காத்திருக்கிறது" என அறைகூவல் விடுத்தார். அவரின் இந்தப் பிரபல வாக்கியம் பல தொழிலாளர்கள் ஒன்றுபடுவதற்கும் பின்னாளில் வரலாறு படைக்கவும் காரணமாக இருந்தது.

1850-களில் பல இடங்களில் தொழிற்சங்கங்கள் தோன்றியிருந்தன. பத்து மணிநேர கோரிக்கை இச்சங்கங்களின் அறிவுறுத்தல்களால் எட்டு மணி நேர வேலைக்கான கோரிக்கையாக மாறியது. அமெரிக்கா மட்டுமன்றி எங்கெல்லாம் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறதோ அங்கெல்லாம் கிளர்ந்தெழுந்தனர் தொழிலாளர்கள்.இதனைத் தொடர்ந்து குறைந்த வேலை நேரத்துக்கான போராட்டம் எல்லா வளரும் நாடுகளிலும் பரவத் தொடங்கியது. 1858-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் கட்டிடத் தொழிலாளர்கள் ‘8 மணி நேர வேலை, 8 மணி நேரப் பொழுதுபோக்கு, 8 மணி நேர ஓய்வு’ என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராடி அதில் வெற்றியும் பெற்றனர். பின்னர் 1884-ல் அமெரிக்காவில் 8 மணி நேர வேலையை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டங்களே மே தினம் உருவாவதற்கு நேரடியான காரணங்களாய் அமைந்தன. 1884, அக்டோபர் 7-ம் நாள் சிகாகோவில் நடைபெற்ற மாநாட்டில், அமெரிக்கா மற்றும் கனடா தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அந்த மாநாட்டில், 1886-ம் ஆண்டு மே முதல் நாள் முதல், வேலை நாள் என்பது 8 மணி நேரம்தான் இருக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சில மாதங்களுக்குப் பின் 1885-ல் நடைபெற்ற மாநாட்டில், முந்தைய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொழிற்சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை வளர்ந்து போராட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கின. 1886 மே ஒன்றாம் தேதி சிகாகோ நகரில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டு 8 மணி நேர வேலைக்காகப் போராடினர். இதனைத் தொடர்ந்து போராடியவர்களைக் கைது செய்தும், அடக்குமுறையைக் கையாண்டும் போராட்டத்தைக் கலைக்க அரசு முயன்றது. இந்த அடக்கு முறையை எதிர்த்து மே 4-ம் தேதி வைக்கோல் சந்தை சதுக்கம் என்றழைக்கப்படும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டத்தில் ராணுவ அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட, இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மோதலில் ஏழு போலீஸ்காரர்களும் நான்கு தொழிலாளர்களும் கொல்லப்பட்டனர்.1886ஆம் ஆண்டின் பிற்பாதி முழுவதும் தொழிலாளர்கள் மீது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1889-ம் ஆண்டு மீண்டும் 8 மணி நேர வேலையை வலியுறுத்தி குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. 1889-ம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற மாநாட்டில், எல்லா நாடுகளிலும் எல்லா நகரங்களிலுமுள்ள உழைக்கும் மக்கள் 8 மணி நேரத்தைச் சட்டப்பூர்வமாக்கக் கோரி போராடத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக 1890 மே முதல் நாள் சர்வதேச அளவிலான ஆர்ப்பாட்டம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது. அந்தக் குறிப்பிட்ட நாளில் எல்லா நாட்டுத் தொழிலாளர்களும் அவர்களின் நாட்டு சூழ்நிலைக்கேற்ப ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என மாநாடு அறிவித்தது. இதனைத் தொடர்ந்தே ஐரோப்பா, ஜெர்மனி, அமெரிக்கா என பல்வேறு நாடுகளில் தொழிலாளர் போராட்டங்கள் விரிவடைந்தன. 1890-ம் ஆண்டு பல ஐரோப்பிய நாடுகளில் மே தினம் கொண்டாடப்பட்டது. பின்னர் மே தினக் கொண்டாட்டம் சிறிது சிறிதாகப் பல்வேறு நாடுகளில் பரவியது.

தற்போது 80 நாடுகளுக்கும் மேல் மே ஒன்றாம் தேதியை தேசிய விடுமுறையாக அறிவித்துள்ளன. இந்தியாவின் மே தினம் முதல் முதலாகக் கொண்டாடப்பட்டது தமிழகத்தில்தான். இந்தியாவின் முதல் தொழிற்சங்கவாதியான சிங்காரவேலர், 1923-ம் ஆண்டு சென்னையில் மே தினக் கொண்டாட்டத்தை நடத்தினார். இந்த நாளின் நினைவாக மெரினாவில் அண்ணா சதுக்கத்தின் எதிரில் இருக்கும் உழைப்பாளிகள் சிலை 1959-ம் ஆண்டு எழுப்பப்பட்டது. உழைக்கும் நான்கு மனிதர்கள் சிலையில், இரண்டு மற்றும் நான்காவது மனிதர்களுக்கு, அரசு கலைக்கல்லூரியின் நைட்வாட்ச்மேன் மாடலாக இருந்தார் என்பது கூடுதல் சிறப்பு. இதுமட்டுமன்றி சென்னையில் உள்ள நேப்பியர் பூங்கா 1990-ம் ஆண்டு மேதின பூங்கா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதே போல இந்தியாவில் முதன்முதலில் மே தினத்திற்கு விடுமுறை அறிவித்தது கேரளாவில்தான். 1957-ம் ஆண்டு கேரளாவில் ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சி மே தினத்திற்கு விடுமுறை அறிவித்தது.

இங்ஙனம் போராடிப் பெறப்பட்ட தொழிலாளர்களின் பல உரிமைகள் கொரோனா காலத்திற்குப் பின் பெரிதும் பறிபோய் விட்டது. ஒர்க் ஃப்ரம் ஹோம் என்ற பெயரில் இன்றைக்கும் தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போக வைக்கக் கூடிய வகையிலான மாற்றங்களைச் செய்து பன்னாட்டு நிறுவனங்கள் முன்னர் இருந்தது போல் நேர, காலமின்றி வேலை வாங்கும் போக்கு அதிகரித்து விட்டது. . போராடிப் பெற்ற உரிமைகளைப் பற்றி அறிந்து கொள்வது எவ்வாறு நமது உரிமையோ, அதேபோல அவற்றைத் தக்க வைப்பதும் நமது கடமையாகும். அனைவருக்கும் ஆந்தை ரிப்போர்ட்டர் சார்பில் தொழிலாளர் தின வாழ்த்துகள் .

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
eight-hour dayInternational Workers' DayLabous dayMay Day
Advertisement
Next Article