For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ரசவாதி படத்தில் ரொமான்ஸ் சீன் அதிகம்!- டைரக்டர் சாந்தகுமார்!

05:47 PM May 02, 2024 IST | admin
ரசவாதி படத்தில் ரொமான்ஸ் சீன் அதிகம்   டைரக்டர் சாந்தகுமார்
Advertisement

‘மௌன குரு’, ‘மகாமுனி’ படங்களுக்குப் பிறகு சாந்தகுமார் இயக்கும் படத்துக்கு ‘ரசவாதி – The Alchemist’ என டைட்டில் வைத்துள்ளார்கள். பக்கா க்ரைம் - ரொமான்டிக் - ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதில் நடிகர் அர்ஜுன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உடன் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம். சுந்தர், சுஜித் ஷங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா உட்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார். சரவணன் இளவரசு, சிவகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில், வரும் மே 10 ஆம் தேதி திரையரங்குகளில் ‘ரசவாதி’ படம் வெளியாக உள்ள நிலையில், இயக்குநர் சாந்தகுமார் பத்திரிகையாளர்களிடம் படம் பற்றி பேசும் போது, “என்னோட ஒவ்வொரு படத்திற்கும் மிகப்பெரிய இடைவெளி ஏன்? என்பது தான் என்னிடம் கேட்கும் முதல் கேள்வியாக இருக்கிறது. நான் கதை எழுதவோ, திரைக்கதை எழுதவோ அதிக நாட்கள் எடுத்துக்கொள்வதில்லை, படம் தொடர்பான நடிகர்கள் தேர்வு உள்ளிட்ட விசயங்களால் தான் இடைவெளி ஏற்படுகிறது. இனி அந்த இடைவெளி அதிகம் இருக்காது. ‘ரசவாதி’ படத்தின் ரிலீஸூக்குப் பிறகு எனது அடுத்த படத்தை தொடங்கிவிடுவேன், அதற்கான கதையும் ரெடியாக இருக்கிறது.

Advertisement

மெளனகுரு படம் முடித்துவிட்டு மகாமுனி படத்தின் திரைக்கதை எழுதுவதற்காக கொடைக்கானலில் ஒருவாரம் தங்கலாம் என்று சென்றேன். ஆனால், அங்கு ஐந்து மாதம் தங்கியிருந்தேன். அங்கு நான் தங்கியிருந்த நாட்கள், எனது கொடைக்கானல் அனுபவம் மூலம் எழுதப்பட்ட கதை தான் இது. படத்தில் ஐந்து முக்கியமான கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள், அந்த கதாபாத்திரங்களின் பயணதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறேன். அல்கெமிஸ்ட் என்ற பெயரில் நாவல் இருக்கிறது. ஆனால், இந்த படத்தின் கதைக்கும் அந்த நாவலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சினிமாவில் இதுவரை அல்கெமிஸ்ட் என்ற தலைப்பு பயன்படுத்தவில்லை, அதனால் அதை பயன்படுத்தியிருக்கிறேன்.

இந்த ரசவாதி படத்தில் ஆக்‌ஷன், திரில்லர், காதல் என அனைத்தும் இருக்கிறது. என் படங்களில் ரொமான்ஸ் காட்சிகள் அதிகம் இருக்காது, வைக்க கூடாது என்பதில்லை, கதை அதை கேட்கவில்லை. ஆனால், இந்த கதையில் அதிகமான ரொமான்ஸ் காட்சிகள் இருக்கிறது. கதைக்கு அது தேவைப்படுகிறது. நாயகன் அர்ஜுன் தாஸ் சித்த மருத்துவராக நடித்திருக்கிறார். இரண்டு விதமான தோற்றத்தில் நாயகனை காட்ட வேண்டும், அதற்கு அர்ஜுன் தாஸ் சரியாக இருப்பார் என்று தோன்றியதால் தான் அவரை நாயகனாக தேர்ந்தெடுத்தேன். அவர் இதற்கு முன்பு இதுபோன்ற அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், அதன் சாயல் இந்த படத்தில் இருக்காது, படம் பார்க்கும் போது உங்களுக்கு தெரியும்.

ஹீரோ சித்த மருத்துவர் என்பதால் இது சித்த மருத்துவம் தொடர்பான படம் அல்ல, இது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் காதல் கதை தான். அவரைப் போல் மலையாள நடிகர் சுஜித் சங்கர் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். அவர் இதுவரை இவ்வளவு பெரிய வேடத்தில் நடித்ததில்லை. அவருடைய நடிப்பு நிச்சயம் வியப்பை தரும், அந்த அளவுக்கு படப்பிடிப்பு தளத்தில் அவரது நடிப்பை பார்த்து கை தட்டினார்கள், திரையிலும் அது பிரதிபலிக்கும்.

புரொடியூஸராக உருவெடுத்ததற்கு காரணம் சுதந்திரம் தான். சுதந்திரமாக இயங்கலாம் என்று முடிவு செய்து தான் தயாரிப்பில் இறங்கினேன். நான் எழுத்து பணியை முடித்து விட்டு, படப்பிடிப்புக்கு செல்வதால், எவ்வளவு நாட்களில் படத்தை முடிப்பேன், என்பது எனக்கு முன்பே தெரிந்துவிடும், அதனால் தயாரிப்பாளராக எனக்கு எந்த சிரமும் இல்லை. 50 நாட்களில் ரசவாதி படத்தை முடித்துவிட்டேன். தயாரிப்பாளராக தொடர்வேனா என்றால் அது எனக்கு தெரியாது, ஆனால் நான் எழுதுவதையும், இயக்குவதையும் தான் விரும்புகிறேன், அதை தொடர்ந்து செய்துக்கொண்டிருப்பேன்.” என்றார்.

பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் ’ரசவாதி’படம் வரும் மே 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சக்தி பிலிம் பேக்டரி சார்பில் பி.சக்திவேலன் தமிழகம் முழுவதும் படத்தை வெளியிடுகிறார்.

Tags :
Advertisement