For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

'உலகக் குடிமகன்' என்று அறிவித்துக் கொண்ட காரி டேவிஸ்!

07:20 AM Jul 24, 2024 IST | admin
 உலகக் குடிமகன்  என்று அறிவித்துக் கொண்ட காரி டேவிஸ்
Advertisement

"What is required is our individual commitment to one world and humanity first, and ourselves and our particular country second." -Gary Davis.

Advertisement

அமெரிக்கக் குடியுரிமையைத் துறந்து, 'உலகக் குடிமகன்' என்று தன்னை அறிவித்துக்கொண்டவர்; ஐ.நா.சபைக் கூட்டத்தில் தனது பாஸ்போர்ட்டை கிழித்தெறிந்தவர்; சமூக அமைதியின் பொருட்டு, உலக குடிமகன்களுக்கான சர்வதேச அரசாங்கத்தை ஏற்படுத்திய காரி டேவிஸ் (Garry Davis, 1921-2013)

Advertisement

அடக்கு முறை, சிறைவாசம், ஏளனம், நகைச்சுவை இவைகளையெல்லாம் பொருட்படுத்தாத மனதுடன் , 1953 செப்டம்பர் மாதம் 'உலக அரசாங்கத்தை' ஏற்படுத்தினார் காரி டேவிஸ். இன்றும் அவர்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு ‘ உலக பாஸ்போர்ட்’ வழங்கப்பட்டு வருகிறது. 150 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த பாஸ்போர்ட்டை (நிபந்தனைக்குட்பட்டு) அங்கீகரித்துள்ளன. நியூயார்க் நகரில் செயல்படும் இந்த அமைப்பின் "World Service Authority" பிரிவில், இதுவரை 25,00,000 பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். அவர்களுக்கென்று தனி சட்டங்களும் வரையறை செய்யப்பட்டுள்ளன. அதில் இணைந்து கொள்வதற்கான விதிகளும், விண்ணப்பமும் இன்றும் அவர்களது தளத்தில் உள்ளன. (www.worldservice.org).

கொஞ்சம் டீடெய்லாகச் சொல்வதானால் அமெரிக்காவில்,1921- ஜூலை 27ல், யூத தந்தைக்கும், அயர்லாந்து நாட்டு அன்னைக்கும் மகனாகப் பிறந்த காரி டேவிஸ், பட்டப்படிப்பும், தொழில்நுட்பக் கல்வியும் பயின்றவர். சில காலம் , பிராட்வே நாடகக் குழுவில், நடிகராகவும் பணியாற்றினார். இரண்டாம் உலகப்போரின் போது, பி-17 வகை குண்டு வீசும் விமானத்தில் பயணித்து, ஜெர்மனி நாட்டின் நகரங்களின் மீது குண்டுகள் வீசினார். இருப்பிடம் திரும்பிய பின்பு, அழிவுகளின் புகைப்படங்களைப் பார்த்தார். மனம் வருந்தினார். ’எல்லைகள் பிரித்ததும், நாடுகள் பெயரிட்டதும் மனிதனை மனிதன் கொன்று அழிக்கத்தானா’, என தனக்குள் கேள்வி எழுப்பினார். மறுமுறை விமானத்தில் சென்று, குண்டுகள் வீசாமல் திரும்பி வந்ததால், இராணுவத்தின் தண்டனைக்கும் உள்ளானார்.

இரண்டாம் உலகப் போரில், அணு ஆயுதங்களால் மனித இனம் அழிந்து போகுமோ என அஞ்சிக் கொண்டே இருந்தார். போரின் போது, தனது சொந்தத் தம்பியை இழந்தது அவருக்குள் அதிக மன அழுத்தத்தை உண்டாக்கியது. அவர் நினைத்தது போலவே நடந்தது. அணு ஆயுதங்கள் கொண்டு, மனிதனை மனிதனே அழித்தெடுக்கும் அவலத்தை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எல்லைக் கோடுகளுக்காகச் சண்டையிட்டு, மனிதன் மடிவதை இவரது மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. 1948 ஆம் ஆண்டு, தனது அமெரிக்கக் குடியுரிமையைத் துறப்பதாக அறிவித்தார் காரி டேவிஸ். இனிமேல் தான் ஒரு உலகக் குடிமகன் என உலகின் காதுகளுக்குச் சத்தமாகச் சொன்னார்.

பாரீஸில் சார்போன் பல்கலைக்கழகத்தில் நடராஜ குருவிடம் (ஸ்ரீ நாராயண குரு குலம்) ஆழமான நட்பைப் பெற்றிருந்தார். இருவரும் இணைந்து ஒரே உலகை உருவாக்கும் திட்டங்கள் தீட்டினர். ரிக் வேத வாக்கியமான "வசு தைவ குடுமபகம்" (உலகமே ஒரு குடும்பம்) என்ற சொல்லாட்சி தன்னை பெரிய அளவில் சிந்திக்க வைத்ததாக காரி டேவிஸ் எப்போதும் சொல்லுவார்.

1948ஆம் ஆண்டு முதல் உலகக் குடிமகனாக தன்னை அறிவித்துக் கொண்ட காரி டேவிஸ், 1954ல் இந்தியா வந்தபோது கைது செய்யப்பட்டார். பிறகு, நடராஜ குரு, ஆர்.கே.லெட்சுமணன் போன்ற ஆளுமைகளின் முயற்சியாலும், ஜவகர்லால் நேருவின் நேரடி தலையீட்டினாலும், அவரது உலக பாஸ்போர்ட் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சிறையிலிருந்து விடுதலை ஆன பிறகு, எட்டு மாத காலம், ஊட்டி ஃபெர்ன் ஹில்லில் இருக்கும் நாராயண குரு குலத்தில் தங்கினார். வாழ்வின் இறுதி வரை , குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்தியா வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

1956ஆம் ஆண்டு, உலக அரசுக்கான முன்வரைவையும், பொது பொருளாதாரத் திட்டத்தையும் எழுதி வெளியிட்டார். அந்த அறிக்கை பாரிஸ் நகரில் வெளியிடப்பட்டது. ஆல்பர் காம்யூ உள்ளிட்ட முக்கிய எழுத்தாளர்கள் இவரது கொள்கைக்கு ஆதரவு தந்தனர். ஒருமுறை காரி டேவிஸ், தென் ஆப்ரிக்கா நாட்டில் நான்கரை ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்குள்ளேயே தனது உலகத்தை உருவாக்கிக் கொண்டு, மன உறுதியோடு நிமிர்வ்து நின்றார் கார் டேவிஸ். 1986ல் நடைபெற்ற அமெரிக்க மாகாணத் தேர்தலில் போட்டியிட்டு, வெறும் 585 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

காந்தியவாதியாகவே இருக்க விரும்பிய காரி டேவிஸ், அமைதி வழியிலேயே, 150 நாடுகள் இவரது உலக பாஸ்போர்ட்டை ஏற்கும் படி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஸ்போர்ட் விதிகளை மீறியதற்காக இருநூறுக்கும் மேற்பட்ட முறை, இவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஆயினும், ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்பதையே உயிரெனக் கொண்டார். ஆகாயத்தின் கீழ், ‘யாவரும் ஒரே குடும்பம்’ என்ற இலட்சியத்தை நடைமுறைப்படுத்த, தனது மூச்சின் கடைசிக் கணம் வரை தன்னம்பிக்கையோடு போராடினார். ஒருநாளும் காரி டேவிஸின் உள்ளம் சோர்ந்துவிடவே இல்லை. ஏனெனில், தேசத்தின் எல்லைகள் - மானுட சிந்தனைகளைச் சுருக்கும் கயிறுகள் என்பதை அவர் புரிந்திருந்தார். மனித மனங்களைச் சுருக்கும் கயிறுகளை, தன்னால் முடிந்த மட்டும் அறுத்தெறியப் பாடுபட்டார்.

2013ஆம் ஆண்டு, ஜூலை 24ஆம் தேதி, அமெரிக்காவில், தனது 91 வது வயதில், வயது முதிர்வு காரணமாக இறந்து போனார் காரி டேவிஸ். மூன்று முறை திருமணம் செய்து கொண்ட அவருக்கு, இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் இருந்தனர். ஓருலகம் உருவாக்கும் தனது வாழ்க்கை அனுபவங்களை, நூல்களாக எழுதி வெளியிட்டுள்ளார் காரி டேவிஸ்.

உயர்ந்த இலட்சிய வேட்கை கொண்டிருந்த காரி டேவிஸின் கண்கள், அவரது கனவின் வெற்றியைக் கண்டு மகிழும் வாய்ப்பைப் பெறவில்லை. அப்படி ஒர் உலகக் கனவு, ஊழிக்காலம் முடியும்வரை நனவாகாமல் கூடப் போகலாம். ஆனால், ’ஓருலகம்’ என்ற அவரது இலட்சியமும், அதை நோக்கிய அவரது பயணமும் - காலத்தால் புறக்கணிக்க முடியாதவை. ஏனெனில், இலட்சியங்களின் வெற்றி தோல்விகளை வரலாறு பார்த்துக்கொள்ளும்; இலட்சியவாதிகளும் அது பற்றிக் கவலை கொள்வதில்லை. ஆனால், இலட்சியங்களின் வேர் மட்டும், சமூகத்தை ஒன்றுபடுத்துவதாகவும், மேன்மை செய்வதாகவும் இருக்க வேண்டும். காலத்தில் நிலைத்து நிற்க, அதுதான் முக்கியம்.!

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement