For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

டங்கி @ டன்கி (Dunki) - விமர்சனம்!

07:25 PM Dec 22, 2023 IST | admin
டங்கி   டன்கி  dunki    விமர்சனம்
Advertisement

ண்டுதோறும் உலகம் முழுவதிலும் பல்வேறு காரணங்களுக்காக தங்களது வாழிடங்களை விட்டு பல கோடி மக்கள் வெளியேற்றப்பட்டு அல்லது வெளியேறும் சூழலில் இப்படி கடல் கடந்து, மலை கடந்து உரிய ஆவணம் ஏதுமின்றி வெளிநாடு சென்று உயிர் பிழைக்கவும் வாழ்க்கையை வாழவும் செல்லும் மக்களின் வலியைப் பேசுகிறது டங்கி@டன்கி. கடந்த இரண்டு தசாப்தங்களில், மனிதர்கள் ஓரிடத்தில் இருந்து வேறிடம் சென்று வாழ்வது இதுவரை இல்லாத அளவை எட்டியுள்ளது. 2000இல் 17 கோடியே 30 லட்சம் பேர் தாய் நாட்டிற்கு வெளியே வாழ்ந்தததாகவும், 2020-ல் அந்த எண்ணிக்கை 28 கோடியே 10 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது. இது உலக மக்கள் தொகையில் 3.6 சதவிகிதம் ஆகும். ஆனால் மக்கள் வேறு நாட்டிற்குச் செல்வதைப் பற்றி நாம் அனைவரும் பேசும் விதம் குழப்பமாக இருக்கும். புலம்பெயர்ந்தோர், அகதிகள், புகலிடம் கோருவோர் மற்றும் குடியேறிகள் என்ற வெவ்வேறு சொற்களை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.ஆனால் செல்வோர் அல்லது வருவோரின் பின்னணியை வைத்து இவ்வுலகம் பிறந்தபோது எல்லாம் ஒரே நாடாக இருந்தது. அதை மனிதன் பிரித்து எல்லை கோடுகள் உருவாக்கி தன் நாடு என சொந்தம் கொண்டாடியபிறகு இன்று மக்கள் வாழ்க்கையை கடத்த போராடிக் கொண்டிருக்கின்றனர் என்பதை கொஞ்சம் காமெடி, கொஞ்சம் லவ், கொஞ்சம் தேசப்பற்று, கொஞ்சம் வேர்ல்ட் பாலிடிக்ஸ் என பக்கா மசாலாவுடன் இந்த டங்கியை வழங்கி இருக்கிறார்கல்.

Advertisement

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு சட்டவிரோதமான முறையில் செல்லும் முறையே டங்கி அல்லது டன்கி என்பதாகும்..இரண்டாம் உலகப் போர் முடிவடையும் சமயத்தில் இந்தியாவில் பஞ்சாபில் இருந்து லண்டனுக்கு நிறைய உடலுழைப்புத் தொழிலாளர்கள் போய். அங்கேயே தங்கி விட , அவர்களின் உறவினர்கள் லண்டன் போவதும் செட்டில் ஆவதும் தொடர்ந்து பஞ்சாபில் இருந்து லண்டனுக்கு தமது உறவினர்களை செட்டில் செய்வதும் வருவதும் போவதும் ஏகபோகமாய் நடந்தது. பஞ்சாப்-பில் சில கிராமங்களில் இப்படி போய் செட்டில் ஆனதை பெருமிதமாக எடுத்துக் கொண்டு வீட்டின் உச்சியில் விமான வடிவம் வைத்து வீடு கட்டுவதும் ‘நாங்க லண்டனாக்கும்..’ என்று பெருமிதப்படுவதும் வழக்கமாம். ஆனால் இக்கால கட்டத்தில் அதாவது 1962 ஆம் ஆண்டில் அந்த சலுகைகளை எல்லாம் இங்கிலாந்து ரத்து செய்தது. வசதி இல்லாதவர்கள், ஆங்கிலம் தெரியாதவர்கள் லண்டன் போக முடியாது என்ற நிலை ஏற்பட்டது . இச்சூழலில்தான் பஞ்சாப் ஸ்டேடில் வசித்து வரும் நாயகி மனு ரந்தாவா (டாப்ஸி) மற்றும் அவளுடைய இரண்டு தோழர்களுக்குப் பொருளாதார ரீதியாக சில பிரச்சனைகள். அதைத் தீர்த்துக் கொள்ள இங்கிலாந்து செல்லலாம் என்று முடிவு செய்கிறார்கள். அதற்கு முறையான பல்வேறு வழிகளில் முயற்சி செய்கிறார்கள். அவர்கள் அந்த முயற்சியில் இருக்கும் போது ஹர்தயால் ஹார்டி சிங் (ஷாருக்கான்) எதிர்பாராத முறையில் அவர்களோடு வந்து சேருகிறார். அவர் மனுவின் குடும்பத்திற்கான நன்றிக்கடனாக மனுவையும் அவளின் தோழர்களையும் இங்கிலாந்து அனுப்பி வைக்கும் வரை அவர்களோடு இருந்து உதவுவதாக உறுதியளிக்கிறார். அதன்படி அவர்களுக்கு உதவவும் செய்கிறார். அப்பொழுது இங்கிலாந்து செல்வதற்கான அவர்களின் முயற்சியின் போது, அவர்களோடு சுகி (விக்கி கெளஷல்) வந்து இணைந்து கொள்கிறான். இந்த ஐவரும் இங்கிலாந்து செல்ல சட்டரீதியான எல்லா முயற்சியும் எடுக்கிறார்கள். அவை அனைத்தும் தோற்றுப் போக, அந்தத் தோல்வி அவர்களின் வாழ்க்கையை எப்படி பாதித்தது, அதைத் தொடர்ந்து அவர்கள் “டன்கி” வழியைத் தேர்ந்தெடுக்க எப்படி நிர்பந்திக்கப்பட்டார்கள், அவர்களின் டன்கி பயணம் வெற்றி அடைந்ததா, தோல்வி அடைந்ததா, அது அவர்களின் வாழ்க்கையை எப்படி மாற்றியது என்பதை விவரிக்கிறது “டன்கி” படத்தின் திரைக்கதை.

Advertisement

யூத் & சீனியர் சிட்டிசன் என்று இரண்டு கேரக்டரில்ல் நடித்திருக்கும் ஹீரோ ஷாருக்கானை டைரக்டர் ஹிரானி தன் ட்ராக்கில் பயணிக்க வைத்து ஜெயிக்க வைத்து ஜெயித்தும் விட்டார், ஷாருக்கின் டைமிங் காமெடி தொடங்கி, டாப்ஸியிடம் லவ் புரொபோஸ் செய்யும் இடம், லண்டன் கோர்ட்டில் எமோனஷனலாக பேசுவது, க்ளைமாக்ஸ் காட்சியில் செய்யும் அதகளம் என ஆக்டிங்கில் தான் மாஸ்டர் என்பதை நிரூபித்து விடுகிறார். இந்த ஆண்டு வெளியான பதான், ஜவான் படங்களைப் போலவே இந்தப் படத்தில் தனது தேசபக்தியை வெளிகாட்டி சல்யூட் அடிக்க வைத்து விடுகிறார்.டைட்டில் கார்டில் ஷாருக்கானுக்கு முன்பாக இடம் பெறும் டாப்ஸி அதற்கு நியாயம் சேர்க்கும் வகையில் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கிறார்.

பொம்மன் இரானி, விக்ரம் கோச்சார், அனில்குரோவர் மற்றும் சிறப்புத் தோற்றத்தில் வரும் விக்கிகவுசல் ஆகியோரும் தங்கள் பங்களிப்பை நிறைவாகச் செய்திருக்கிறார்கள். மனுஷ்நந்தன், சி.கே.முரளிதரன், அமித்ராய் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். பல்வேறு வகையான நிலப்பரப்புகள் மற்றும் உணர்வுகளைக் காட்சிகளிலும் வெளிப்படுத்தி படத்தை ஒரு படி உயர்த்தி விட்டார்கள்.. ப்ரீதம் இசையில் பாடல்கள் கேட்கும் இரகம், அமன்பந்தின் பின்னணி இசை அளவு.

டைரக்டர் ராஜ்குமார் ஹிரானி வெளிநாட்டு மாயையில் சட்டவிரோதமாக நாடு கடப்பவர்களின் உயிர் வலி பயணத்தை வேதனையோடு சொல்லி, சொந்த நாட்டு சுகத்தை எந்த நாடும் தராது என்பதை நெத்தியடியாகச் சொல்ல முயன்று அதில் தேறியும் விட்டார். என்றாலும் இரண்டாம் பாதியில் சட்டவிரோதமாக லண்டன் செல்லும் இவர்கள் செல்லும் வழியில் எதிர்கொள்ளும் சவால்கள் எல்லாம் எதார்த்தமாகவோ அல்லது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் கடந்து சென்றுவிடுகின்றன. போரினால், பஞ்சத்தால், வேலை வாய்ப்பு இல்லாமல் என பல்வேறு காரணங்களுக்காக மக்கள் ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டிற்கு புலம்பெயரும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். சட்டரீதியாகவும் சட்டவிரோதமனாகவும் . இவ்வளவு தீவிரமான காரணங்கள் இருந்து டங்கி படத்தின் கதாபாத்திரங்களுக்கு இருக்கும் காரணங்கள் வெயிட்லெஸ் ஆக தெரிகின்றன. எடுத்துக் கொண்டக் கதை தன் முந்தைய ‘3 இடியட்ஸ்’, ‘பி.கே’ அளவுக்கு ஆழமாகக் கொடுக்கவில்லை என்றாலும் ஃபீல் குட் மூவி அளவில் கொடுப்பதில் தப்பித்து விட்டார்..

மார்க் 3.25/5

Tags :
Advertisement