தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

10 ஆண்டுகளுக்குப் பின் பாராளுமன்றத்தில் ஜனநாயகக் குரல் - முழு விபரம்!

07:39 PM Jul 01, 2024 IST | admin
Advertisement

னாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது இன்று லோக்சபாவில் விவாதத்தில் அனல் பறந்தது. பல்வேறு விஷயங்கள் குறித்தும் ராகுல் காந்தி பேசிய நிலையில், அப்போது மத்திய அமைச்சர்கள் பலரும் குறுக்கிட்டுப் பதிலளித்தனர். குறிப்பாக இரண்டு முறை பிரதமர் நரேந்திர மோடியே நேரடியாக எழுந்து பதில் கொடுத்தார். கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்தளவுக்குக் காரசார விவாதம் பாராளுமன்றத்தில் நடந்துள்ளது மீடியாக்களுக்கே வியப்பாக இருந்தது.. அதிலும் ராகுல் காந்தி பேசும் போது பாராளுமன்றத்தில் கடுமையான கூச்சல் குழப்பம் நிலவியது. குறிப்பாகச் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையில் பாஜக ஈடுபடுவதாக ராகுல் காந்தி கூறிய போது, அதற்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது ராகுல் காந்தி, "நமது சமூகத்தில் இருந்த பெரிய மனிதர்கள் அகிம்சையைப் பற்றிப் பேசினார்கள்.. ஆனால் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் வெறுப்பைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள்.. நீங்கள் இந்துக்களே இல்லை" என்று அவர் கூறிய போது மன்றத்தில் கடுமையான கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. ராகுல் பேசும் போது, பா.ஜ., எம்.பிக்கள் பாரத் மாதா கி ஜெய் என கோஷமிட்டனர்.

Advertisement

இன்று ராகுல் காந்தி அவையில் பேசியதன் முழு விபரம் இதுதான்,

Advertisement

“எனது இன்றைய உரையை சிவன் படத்தை காண்பிப்பதில் இருந்து தொடங்குகிறேன். இந்தப் படத்தை இங்கு ஏன் காண்பிக்கிறேன் என்றால், இதில் உள்ள யோசனைகளை எதிர்கட்சிகளாகிய நாங்கள் காத்துள்ளோம்.முதல் யோசனை... ஒருபோதும் பயப்படக் கூடாது என்ற எண்ணமும் சிவனின் உருவத்தில் இருந்துதான் பிரதிபலிக்கிறது. சிவன் கழுத்தில் உள்ள பாம்பு உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும், அதில் இருந்து பின்வாங்க கூடாது என்பதையும் வலியுறுத்துகிறது. அந்த உணர்வோடு தான் நாங்கள் போராடி வருகிறோம். இந்த யோசனை எங்களை எதிர்க்கட்சியாக மட்டுப்படுத்தியுள்ளது. எனக்கு இது தெரியும். நாங்கள் எதிர்க்கட்சியாக இருப்பதில் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். எங்களை பொறுத்தவரை அதிகாரத்தை விட உண்மைதான் சக்தி வாய்ந்தது. எங்களுக்கு அதிகாரம் முக்கியமில்லை. ஆனால், உங்களுக்கு அப்படி இல்லை. உங்களுக்கு அதிகாரம் மட்டுமே முக்கியம். அதுதான் உண்மை.

சிவனின் இடது தோள் ஓரமாக திரிசூலத்தை பிடித்திருக்கிறார். திரிசூலம் என்பது வன்முறையின் அடையாளம் அல்ல. மாறாக, அகிம்சையின் சின்னம். அதனால்தான் இடதுபக்கம் வைக்கப்பட்டுள்ளது. வன்முறையின் சின்னமாக இருந்தால் சிவனின் வலதுகை பக்கம் திரிசூலம் இருந்திருக்கும். நாங்கள் பாஜகவை எதிர்த்து போராடியபோது எங்களிடம் வன்முறை இல்லை. நாங்கள் உண்மையை பாதுகாக்க துணிந்தபோதும் வன்முறை வெளிப்படவில்லை.

அடுத்து மூன்றாவது யோசனை. மூன்றாவது யோசனை உண்மை, தைரியம் மற்றும் அகிம்சையில் இருந்து வெளிப்படுகிறது. இது யோசனை நீங்கள் வெறுக்கும் ஒரு சின்னமாக இருக்கலாம். அதுதான் காங்கிரஸ் கட்சியின் சின்னமான அபய் முத்ரா. பயமின்மையையும், சத்தியத்தையும், அகிம்சையும் இந்த முத்திரை வலியுறுத்துகிறது. சத்தியமும், அகிம்சையும் மகாத்மா காந்தியின் போதனைகள். கடவுளுடன் நேரடி தொடர்பும், கடவுளிடம் நேரடியாக பேசும் பிரதமர் மோடி, காந்தி இறந்துவிட்டதாகவும், ஆவணப் படம் மூலமே காந்திய உலகம் அறிந்ததாகவும் கூறுகிறார். அறியாமையை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? காந்தி இறக்கவில்லை. அவருடன் உயிருடன் இருக்கிறார்.

நான் கவனித்த இன்னொரு விஷயம், ஒரு மதம் மட்டுமே தைரியத்தை கூறவில்லை. அனைத்து மதங்களும் தைரியத்தைப் பற்றி பேசுகின்றன. இஸ்லாம், சீக்கியம் என அனைத்து மதங்களும் தைரியத்தை வலியுறுத்துகின்றன. உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. பாஜகவினர் சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள். பிரதமர் மோடியும், பாஜகவும் மட்டுமே ஒட்டுமொத்த இந்துக்கள் கிடையாது. அயோத்தி பற்றி பேசத் தொடங்கியதும் மைக் அணைக்கப்பட்டது ஏன்? ராமர் பிறந்த அயோத்தியிலேயே பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர்.

அக்னிவீரர் திட்டம் ராணுவத்துக்கான திட்டமல்ல; மோடிக்கான திட்டம். இத்திட்டத்தை உருவாக்கியது ராணுவம் அல்ல. பிரதமர் மோடிதான். அக்னிவீரர் திட்ட வீரர்களின் உயிரிழப்பை வீர மரணங்களாக பாஜக அரசு ஏற்குமா? 'USE AND THROW' முறையில் ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முறைதான் அக்னிபாத் திட்டம்.

மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா? அங்கு ஏன் பிரதமர் மோடி செல்லவில்லை. பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் பொறுத்தவரை மணிப்பூர் ஒரு மாநிலமே இல்லை. ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு அயோத்தி மக்களுக்கு அழைப்பு இல்லை. அம்பானி மற்றும் அதானிக்கே அழைப்பு விடுக்கப்பட்டது. அயோத்தி மேம்பாட்டு திட்டத்துக்காக அங்குள்ள ஏராளமான மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது. ஆனால் அதற்கான இழப்பீடு வழங்கப்படவில்லை.

நீட் தேர்வு வியாபார ரீதியாக நடத்தப்படுகிறது. பணக்காக்காரர்களின் குழந்தைகளுக்காகவே நீட் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த 7 ஆண்டுகளில் 70 முறை வினாத்தாள் கசிவு நிகழ்வுகள் நடந்துள்ளன. பணம் இருந்தால் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது" என்று ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரதமர் மோடியே எழுந்து ராகுல் காந்தி பேச்சைக் குறுக்கிட்டார். ராகுல் காந்தி பேச்சு இந்துக்கள் மீதான தாக்குதல் எனப் பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்தார். இந்துக்களை வன்முறையாளர்களாகக் காட்ட ராகுல் முயல்கிறார் என்ற பிரதமர் மோடி, ராகுல் காந்தியின் பேச்சு ஒட்டு மொத்த இந்து சமுதாயத்தின் மீதான தாக்குதல் என்றும் தெரிவித்தார்..தொடர்ந்து ராகுல் காந்தி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில், பிரதமர் மோடி இரண்டாவது முறையாகக் குறுக்கிட்டார். தான் அரசியலமைப்பு சட்டத்தைப் பின்பற்றி நடந்து வருவதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மதிப்பளிக்க அரசியலமைப்புச் சட்டம் தனக்குக் கற்றுக் கொடுத்ததாகவும் பிரதமர் மோடி சொன்னார்

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
எதிர்கட்சித் தலைவர்பாராளுமன்றம். மக்களவைபிரதமர்மோடிராஜிவ் காந்தி
Advertisement
Next Article