For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

வாழ்த்த வேண்டிய வாத்தி ஜெய்சங்கர்!

06:26 PM Apr 07, 2024 IST | admin
வாழ்த்த வேண்டிய வாத்தி ஜெய்சங்கர்
Advertisement

வாழ்க்கையில் முதன் தடவையாக ஒரு இந்திய அரசியல்வாதியை அவரது அரசியல் ராஜதந்திரங்களுக்காகவே ரொம்ப பிடித்துப் போகிறது. சொல்லப்போனால் அவரது பரம ரசிகையாகவே மாறிக்கொண்டு வருகிறேன். அவர் தான் எஸ். ஜெய்சங்கர் என்று அழைக்கப்படும் இந்திய வெளியுறவு அமைச்சர் பத்மஶ்ரீ சுப்ரமணியம் ஜெய்சங்கர். ஒரு அரசியல்வாதியாக, ஒரு தலைவராக, ஒரு ராஜதந்திரியாக, ஒரு திறமையான வெளியுறவுத்துறை அமைச்சராக, ஒரு அறிவுஜீவியாக, ஒரு கெத்தான ஆசாமியாக என எல்லா கோணங்களிலும் இந்த மனுஷன் ரொம்பவே கவர்கிறார். 1955 ஜனவரி 9 பிறந்த ஜெய்சங்கர் அரசியல் மற்றும் அறிவியலில் எம்.ஏ மற்றும் எம்.பில் பட்டம் பெற்று, பின் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) சர்வதேச உறவுகளில் (International relations) முனைவர் பட்டம் பெற்றார் (with specialised in Nuclear Diplomacy). Russian, English, Tamil, Hindi, Japanese, Chinese, Hungarian மொழிகள் சரளமாக பேசக்கூடியவர்.

Advertisement

இப்போதைக்கு ஒரு அரசியல்வாதியைப் பற்றி என்னால் நாள் முழுதும் பேசிக்கொண்டே இருக்கலாம் என்றால் என் சாய்ஸ் புடினுக்கு அடுத்த படியாக ஜெய்சங்கர் தான். பார்க்க ஏதோ திருவையாறு கச்சேரியில் பாட வந்த அம்பி போல இருந்தாலும், மனுஷன் வாயை திறந்தாலே Thug life அனல் தெறிக்கிறது. ஏன் இவரை இவ்வளவு பிடிக்கிறது என்பதை சொல்லும் முன் அவரைப் பற்றி அவ்வளவாக தெரியாதவர்களுக்காக கொஞ்சம் சொல்லி விடுகிறேன். 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்று புதிய அமைச்சவை நியமனங்கள் வழங்கப்பட்ட போது, ஒரு நாட்டின் மிக மிக முக்கிய பொறுப்புக்களில் ஒன்றான வெளியுறவுத் துறை அமைச்சராக ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டார். இதில் ஹைலைட் என்னவென்றால், அதுவரை நேரடி அரசியலில் ஈடுபடாத, மக்களவை, மாநிலங்களவை எம்.பி.யாகக் கூட இருந்திராத, குறிப்பாக சொல்லப்போனால் பிஜேபியின் உறுப்பினராக கூட இல்லாத ஜெய்சங்கர் கையில் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. தகுதியிருப்பவர் எவரானாலும் அவரை நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துதல் நல்லதுதானே…!

Advertisement

நேரடி அரசியலில் தான் இல்லையென்றாலும் ஜெய்சங்கருக்கு மூன்று தசாப்தங்களுக்கும் மேலான இராஜதந்திர அனுபவம் உள்ளது. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஷங்கர் தயாள் ஷர்மாவின் செய்தித் தொடர்பாளராகவும், உரை எழுத்தாளராகவும் கூட ஆரம்பத்தில் பணியாற்றியுள்ளார். தொழில்முறையில் ஒரு ஐஎப்எஸ் அதிகாரியான ஜெய்சங்கர், அதற்கு முன் பல்வேறு நாடுகளில் வெளியுறவுத்துறை தொடர்பாக பணியாற்றி இந்திய வெளியறவுத்துறை விவகாரத்தைக் மிகத் திறமையாக கையாண்டு இருக்கிறார். குறிப்பாக அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர், ஜப்பான், செக் குடியரசு போன்ற நாடுகளின் இந்திய தூதராக பணியாற்றியவர்.
அதாவது, உலக வல்லரசுகளின் வெளியுறவுத்துறை விவகாரங்களை கையாண்டு இருக்கிறார். அதிலும் சீனாவில் அதிகபட்சமாக நான்கரை ஆண்டுகள் தூதராகப் பணியாற்றியது ஜெய்சங்கர் மட்டுமே. இவர் காலத்தில்தான் இந்தியா - சீனா உறவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. அதே போல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தியா-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவதில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குடன் இணைந்து இவர் முக்கிய பங்கு வகித்தார்.

1978 இல் மாஸ்கோவில் தனது தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கிய போதே ரஷ்யன் மொழியை சரளமாகப் பேசுவார் இவர். அந்த திறமையே இந்திய-ரஷ்ய உறவுகளை பெரிதும் மேம்படுத்த உதவியது. ஜெய்சங்கரின் தந்தை கே. சுப்பிரமணியமும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி தான். திருச்சியைச் சேர்ந்த கே.சுப்பிரமணியம், பாதுகாப்புத்துறையில் நீண்ட காலம் பணியாற்றியவர். அதுமட்டுமல்ல, இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தில் முக்கியப் பங்காற்றினார். அதேபோல ஜெய்சங்கரின் குடும்ப உறுப்பினர் எல்லாருமே அரச, தனியார் துறைகளில் மிக முக்கிய உயர் பதவிகளை வகித்துள்ளனர்.

2019-ம் ஆண்டே ஜெய்சங்கர் இந்திய வெளியுறவு அமைச்சராக பதவி ஏற்றாலும், அவரை இவ்வளவு நெருக்கமாக கடந்த இரண்டு வருடங்களாகத்தான் நான் பின் தொடர்கிறேன். அதாவது குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், ரஷ்ய-உக்ரைன் மோதல் ஆரம்பித்ததில் இருந்து. ரஷ்ய-உக்ரைன் விவகாரத்தில் இந்தியா சார்பில் ஜெய்சங்கர் எடுத்து வைத்த ஒவ்வொரு நகர்வும், என் பார்வையை மட்டுமல்ல, ஒட்டு மொத்த உலகின் பார்வையையும் அவர் பக்கம் திருப்பியது. உலகின் பல நாடுகளும் பெரியண்ணாவுக்கு பயந்து மேற்குலக நாடுகளுடன் ஆமாம் சாமி போட்டுக் கை கோர்த்து, ரஷ்யாவுக்கு எதிராக அணி சேர, இந்தியாவோ நாங்கள் யாருக்கும் ஆதரவு தரப்போவாதில்லை என்று கெத்தாக அறிவித்தது முதல், இன்று வரை, இந்தியா சார்பில் ஜெய்சங்கர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு நகர்வும் வேற லெவல் diplomacy!
சர்வதேச சட்டத்தை நிலை நிறுத்துவதற்கும், உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளிப்பதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய அதே வேளை, ரஷ்யாவுடனான எவ்வித அரசியல் ராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொள்ளாமல் தொடர்ந்ததில் மிளிர்ந்தது ஜெய்சங்கரின் சாணக்கியத்தனம். அதே போல கனடாவில் நடந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜரின் படுகொலையை தொடர்ந்து உருவான இந்திய - கனேடிய பதற்ற நிலையை மிகவும் சாதுரியமாக கையாண்டார் ஜெய்சங்கர்.

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

சரி, இப்போது ஏன் இவரைப் பற்றி இத்தனை சிலாகிப்பு என்றால், காரணம் இருக்கிறது.

சமீபத்தில் ஜெர்மனியின் முனிச் நகரத்தில் உலக தலைவர்கள் எல்லாம் கலந்துகொண்ட முனிச் பாதுகாப்பு மாநாடு நடந்தது. சர்வதேச பாதுகாப்புக் கொள்கையை விவாதிப்பதற்காக, உலகின் தலைவர்கள் எல்லாம் ஒன்றுகூடும் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் உலக நாட்டமைக்கே thug லைஃப் காட்டியிருந்தார் ஜெய்சங்கர். அந்த நிகழ்வில் ஜெய்சங்கர், ஜெர்மனியின் ஃபாரீன் மினிஸ்டர் மற்றும் அமெரிக்க மாநில செயலாளர் Antony Blinken மூவரையும் வைத்து ஒரு நேர்காணல் எடுக்கப்பட்டது. அமெரிக்கா, ஜெர்மனி என்ற இரு வல்லரசுகள் பக்கத்தில் இருந்தாலும், ஒட்டு மொத்த அட்டென்ஷனையும் தன் பக்கமே வைத்திருந்தார் ஜெய்சங்கர். கேள்விகள் எல்லாம் துப்பாக்கியில் இருந்து பாயும் தோட்டா மாதிரி சர சரவென்று வந்து விழ, அத்தனை தோட்டாக்களையும் அசால்ட்டாக தெறிக்கவிட்டார் ஜெய்சங்கர். லைவ் நேர்காணல். எந்த முன்னாயத்தமும் இல்லாமல், கையில் ஒரு சிறிய பேப்பர் துண்டு கூட இல்லாமல், வந்த கேள்விகளை எல்லாம் சிக்சர் அடித்து, கேள்வி கேட்டவரையே அலற விட்டார் நம்ம தலைவர்.

உதாரணத்துக்கு பேட்டி எடுக்கும் நிருபர், ‘ரஷ்யா உக்ரைன் விவகாரத்தில் இந்தியா யாருடனும் கூட்டணியும் வைத்துக்கொள்ளவில்லை. அணிசேரா கொள்கையிலும் இல்லை. இந்தப்பக்கம் பார்த்தால் அமெரிக்காவுடனும் ராஜதந்திர உறவுகளை தொடர்கிறீர்கள், மறுபக்கம் ரஷ்யாவிடமிருந்தும் தொடர்ந்து எண்ணைய் கொள்வனவு செய்துகொண்டு இருக்கிறீர்கள். இதன் அர்த்தம் என்ன? டபுள் கேம் ஆடுறீங்களா?” என்று நக்கலாக கேட்க, “Why is it a problem for you? It shouldn’t be a problem, I’m smart enough to handle both so you should encourage my smartness rather than criticising….” என்று ஆரம்பித்து ஜெய்சங்கர் கொடுத்த பதில்கள் எல்லாம் சும்மா அதிரடி சரவெடி. “Good partners provide choices, Smart partners takes some of those choices” என்ற ஒரே வாக்கியத்தில் உலக அரசியல் அரங்கில் நிச்சயமாக India is undoubtedly a smart partner என்பதை பொது மேடையில் எடுத்து வைத்த விதம் எல்லாம் வேற லெவல் smartness.

அதே போல BRICS பற்றி கேட்கப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும் அவர் சொன்ன பதில்கள் எல்லாம் சர்வதேச அரசியலை அவர் எவ்வளவு ஆழமாக கரைத்துக் குடித்திருக்கிறார் என்பதை மறுபடியும் நிரூபித்தது.மேற்குலகம் உலகை டொமினேட் செய்துகொண்டிருத்த போது, அதற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட BRICS, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சவால் விடும் அளவுக்கு பலம் பொருந்திக்கொண்டு வருக்கிறது. தனக்கு எதிராக யாரும் வளர்வதை விரும்பாத, குறிப்பாக ரஷ்ய கூட்டணியுடன் வளர்வதை விரும்பாத அமெரிக்காவுக்கு இது நிச்சையம் ஒரு பெரும் தலையிடி தான்.

ஆக, இந்த விடயத்தில் இந்தியாவின் வாயை பிடுங்கலாம் என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு “There is a difference between non western and anti western. We are non western” என்று ஜெய்சங்கர் தெளிவாக கொடுத்த பதிலடியை எல்லாம் பார்த்து வாயடைத்துப் போன வெள்ளைக்காரன் “யாருயா நீ!! சும்மா பின்னுற!!!…” என அந்நியன் பிரகாஷ் ராஜ் மாதிரி ஆடிப் போயிருப்பான். இந்த நிகழ்வு நடந்து சுமார் 10 நாட்கள் கடந்து விட்டது. அப்போது அவர் பேசிய நேர்காணல்களை பார்த்துவிட்டு என் நெருங்கிய வட்டத்துக்குள் மட்டும் பகிர்ந்து கொண்டு விட்டு விட்டேன்.ஆனாலும் மனசு கேட்கவே இல்லை. இவரைப் பற்றி இரண்டு வரிகளாச்சும் எழுதியே தீர வேண்டும். இப்படி ஒரு ராஜதந்திரி, அதுவும் ஒரு தமிழர் இந்தியாவை உலக அரசியல் மேடையில் இறுக்கப் பற்றி இழுத்துச் செல்கிறார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காகவாச்சும் எழுதனும்’ என்று மனசு சொல்லிக்கொண்டே இருந்தது: அதனால் தான் இன்று இந்தப் பதிவு!

ஜெய்சங்கரின் ஒவ்வொரு நேர்காணலையும் நான் ஒரு மாஸ் ஹீரோவின் கமர்ஷியல் படம் பார்ப்பது போல ரசித்துப் பார்ப்பேன். காரணம் அவர் ஒவ்வொரு பதிலிலும் ஆயிரம் இராஜதந்திர அர்த்தங்கள் இருக்கும். ஆஹா! மனுஷன் பின்றான்யா என மனம் குஷியாகும். எனக்கு புடினிடம் ரொம்பவே பிடித்த விடயங்களில் ஒன்று அவரது பேச்சுத்திறன். எங்கு, யார் எந்த கேள்வி கேட்டாலும், எந்த மேடையில் பேசினாலும், கையில் ஒரு துண்டு பேப்பர் கூட இல்லாமல், சரியான ஆதாரத்தோடு, துல்லியமான தகவல்களோடு, வரலாற்று சான்றுகளோடு டான் டான் என்று பதில் சொல்லுவார் / பேசுவார். அதே குணத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கரிடமும் காண்கிறேன்.

ரீல் லைஃப் சினிமா நடிகர்களுக்கு பின்னால் பைத்தியம் போல சுற்றும் சமூகம், ஜெய்சங்கர் போன்ற ரியல் லைஃப் ஹீரோக்களையும் கொஞ்சம் உற்று நோக்க ஆரம்பித்து விட்டாலே போதும்! வருங்காலத்தில் இந்தியாவை இன்னும் உறுதியாக கொண்டு நடத்த ஆயிரம் ஜெய்சங்கர்கள் உருவாகுவார்கள்.
ஒரு தமிழன் இந்தியாவை சர்வதேச அரங்கில் மிகச்சிறப்பாக வழிநடத்துகிறான் என்பதற்காகவும் நாம் நிச்சையமாக ஜெய்சங்கரை பார்த்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
°
“Just because I don’t agree with you does not make me sitting on fence. It means I’m sitting on my grounds “
- S. Jaishankar -

மரு. தெய்வசிகாமணி

Tags :
Advertisement