For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கலைஞர் கருணாநிதியின் எழுத்தாக்கங்கள் நாட்டுடைமை - முதல்வர் அறிவிப்பு!

07:42 PM Aug 22, 2024 IST | admin
கலைஞர் கருணாநிதியின் எழுத்தாக்கங்கள் நாட்டுடைமை   முதல்வர் அறிவிப்பு
Advertisement

மிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 179 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூபாய் 14.42 கோடி நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் நூலுரிமைத் தொகை இல்லாமல் கருணாநிதியின் நூல்களை நாட்டுடைமை ஆக்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

Advertisement

தமிழுணர்வு கொண்ட 14 வயது சிறுவனாகத் தம் இலக்கிய வாழ்வைத் தொடங்கி, 15ஆம் வயதில் “மாணவ நேசன்” என்ற கையெழுத்து ஏடு தொடங்கி, 18ஆம் வயதில் பேரறிஞர் அண்ணா அவர்களின், “திராவிட நாடு” இதழில் இளமைப்பலி என்ற அவரது முதற்கட்டுரை வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. தமது 23-ஆம் வயதில் இராஜகுமாரி திரைப்படத்திற்கு முதன் முதலாக வசனம் எழுதினார். முதன் முதலில் “முரசொலி” என்னும் துண்டு இதழ் வெளியீட்டை 1942-ஆம் ஆண்டு வெளியிட்டு; பின்னர் 1946 முதல் 1948 வரை திங்களிதழாக மாற்றி; பின் மீண்டும் 1953-இல் சென்னையில் திங்களிதழாகத் தொடங்கி 1960-ஆம் ஆண்டில் அதனை முழுமையான நாளிதழாக மாற்றினார்.

Advertisement

அனார்கலி, உதய சூரியன், உன்னைத்தான் தம்பி, இளைஞன் குரல், ஒரே முத்தம், காகிதப்பூ, சாக்ரடிஸ், சாம்ராட் அசோகன், சிலப்பதிகாரம் – நாடகக் காப்பியம், சேரன் செங்குட்டுவன், திருவாளர் தேசியம் பிள்ளை, தூக்குமேடை, நச்சுக் கோப்பை, நான்மணிமாலை, நானே அறிவாளி, புனித இராஜ்ஜியம், மணிமகுடம், மகான் பெற்ற மகன் (அம்மையப்பன்), மந்திரிகுமாரி உட்பட்ட பல்வேறு நாடகங்களை எழுதியுள்ளார். வெள்ளிக்கிழமை, சுருளிமலை, வான்கோழி, புதையல், ஒரே ரத்தம், ஒரு மரம் பூத்தது, அரும்பு, பெரிய இடத்துப் பெண், சாரப்பள்ளம் சாமுண்டி, நடுத்தெரு நாராயணி ஆகிய புதினங்களையும்; ரோமாபுரிப் பாண்டியன், பொன்னர் – சங்கர் அண்ணன்மார் வரலாறு, பாயும் புலி பண்டாரக வன்னியன், தென்பாண்டிச் சிங்கம், தாய் – காவியம் ஆகிய வரலாற்றுப் புதினங்களையும்; சங்கிலிச் சாமியார், கிழவன் கனவு, பிள்ளையோ பிள்ளை, தப்பிவிட்டார்கள், தாய்மை, நாடும் நாடகமும், முடியாத தொடர்கதை, பதினாறு கதையினிலே, நளாயினி, பழக்கூடை, தேனலைகள், ஒருமரம் பூத்தது, மு.க.வின் சிறுகதைகள் உள்ளிட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

கவிதையல்ல, முத்தாரம் (சிறையில் எழுதிய கவி வசனங்கள் தொகுப்பு), அண்ணா கவியரங்கம், Pearls (Translation), கவியரங்கில் கலைஞர், கலைஞரின் கவிதைகள், வாழ்வெனும் பாதையில், கலைஞரின் திரை இசைப்பாடல்கள், கலைஞரின் கவிதை மழை, காலப் பேழையும் கவிதைச் சாவியும் உட்பட்ட கவிதைத் தொகுப்புகளும் அவரது கவித்திறமையை வெளிப்படுத்துவன. கலைஞரின் குறளோவியம் மிகவும் புகழ்பெற்ற நூல். தேனலைகள், சங்கத் தமிழ், திருக்குறள் கலைஞர் உரை, தொல்காப்பியப் பூங்கா ஆகிய உரை நூல்களையும் படைத்துள்ளார்.

உடன்பிறப்புகளுக்குக் கலைஞர் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு, 54 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. ‘நெஞ்சுக்கு நீதி’ என்னும் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல் 6 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. 1957 முதல் 2018-ஆம் ஆண்டுவரை கலைஞர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் 12 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ஐந்துமுறை முதலமைச்சராக இருந்த அவர், 75 திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை வசனங்களையும், 15 புதினங்களையும், 20 நாடகங்களையும், 15 சிறுகதைகளையும், 210 கவிதைகளையும் படைத்துள்ளார்கள். இவற்றைத் தவிர, தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்களையும் தீட்டியுள்ளார்.

இந்த விவரங்களெல்லாம் விவரிக்கப்பட்டுள்ள அரசுச் செய்திக்குறிப்பில், “முதலமைச்சராக தான் இருந்த காலத்தில் 108 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமை செய்து, அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகையாக 7 கோடியே 76 இலட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கி ஆணை பிறப்பித்தவர் கருணாநிதி.” என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கலைஞரின் அனைத்து நூல்களும் நாட்டுடைமையாக்கம் செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் செழுமையான நூல்களை ஊன்றிப் படிக்க அரியதொரு வாய்ப்பாக அமையும் என்று முதல்வர் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags :
Advertisement