வீரமிக்க சிம்பொனி: லண்டனில் அரங்கேற்றி அசர வைத்தார் நம்ம இளையராஜா!
மேற்கத்திய இசையுலகில் பீத்தோவன் காலம் தொடங்கி இந்த சிம்பொனி இசை கொண்டாடப்பட்டு வரும் ஒரு வடிவம். புகழ்பெற்ற சிம்பொனிகளின் தாக்கத்தைத் திரையிசை, தனிப்பாடல் இசை இரண்டிலுமே காணமுடியும். ‘மடை திறந்து பாடும் நதியலை நான்…’ ‘ஓ பிரியா பிரியா..’ ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி..’ போன்ற பாடல்களில் இடம்பெற்றிருப்பவை சிம்பொனி இசைதான் என்று இளையராஜாவே ஒரு முறை கூறியுள்ளார்.கடந்த 2015 ஆம் ஆண்டு ‘சிம்பொனி நம்பர் ஒன்’ என்கிற பெயரில் இளையராஜா ஒரு ஆல்பத்தை வெளியிட்டார். இந்த ஆல்பம் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் பதியப்பட்டது. இப்போது, லண்டன் அப்பல்லோ அரங்கத்தில் பீத்தோவான், மொசார்ட் மாதிரி உலக மகா இசை மேதைகள் ஒரே நேரத்துல கிட்டத்தட்ட 120க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களின் கருவிகளையும் தன்னோட கை அசைவில் வாசிக்க வைத்து இருக்கிறார் இளையராஜா. ஆக தமிழகத்தைப் பொறுத்தவரை முதன்முதலில் சிம்பொனி இசைத்து அசத்தி இருக்கிறார் இசைஞானி இளையராஜா. இளையராஜாவின் சிம்பொனி சாதனைக்குப் பின்னே, பேசப்பட வேண்டிய வரலாறு உண்டு.
1993இல் இளையராஜா தனது முதல் சிம்பொனியை அமைக்கப்போகிறார் என்கிற செய்தி, இந்தியா முழுவதும் அனைத்து இதழ்களிலும் பரபரப்புச் செய்தியாக மாறியது. தமிழ்நாட்டின் அனைத்து ஊடகங்களும் அது குறித்து விரிவாக எழுதின. நாடாளுமன்றத்தில் இளையராஜாவின் சிம்பொனி குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்து, பாராட்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைகோ முன்வைத்தார்.
சென்னை மாநகர் முழுவதும் பல அமைப்புகள் சுவரொட்டிகளை ஒட்டித் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. திரைத் துறையினர் கொண்டாடி மகிழ்ந்தார்கள். ‘அடையாறு மாணவர் நகலகம்’ உரிமையாளர் அருணாசலம் பெரியார் திடலில் இசைஞானிக்குப் பாராட்டுக் கூட்டம் ஏற்பாடு செய்தார்.சாரட் வண்டியில் அமர வைக்கப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட இசைஞானி, பத்திரிகையாளர்களிடம் பேசியபோது ‘இந்தச் சாதனையைத் தமிழர்களோடு பகிர்ந்துகொள்ளாமல் வேறு யாரிடம் பகிர்ந்துகொள்வது’ என்று கூறியது அனைவரையும் கவர்ந்தது.
ஆனால், பதிவுசெய்யப்பட்ட இசைக் கோவை வெளியீடு கெடுவாய்ப்பாகத் தள்ளிப்போனது ஏன் என்கிற கேள்வி விவாதிக்கப்பட்டு, மெல்ல மெல்ல மங்கிப்போனது. அது குறித்துக் கேள்வி கேட்கப்படும்போது, விரைவில் வெளிவரும் என்கிற பதிலோடு கடந்துவிடுவார் இளையராஜா. பெரும் இடைவெளிக்குப் பிறகு இன்று உலக அரங்கில் நிரூபித்து விட்டார்
ஜஸ்ட் லைக்'இம்புட்டுதா சிம்பொனி...' என்று இந்த இசைக் கோர்வையை எளிதாகச் சொல்லிவிட்டு கடந்துவிட முடியாது. சிம்பொனி இசை லவ்வர்ஸூகளுக் கான பெரும் விருந்து. அதைக் கேட்டுத்தான் உணர முடியும். எழுபதிற்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களின் இசைக் கருவிகளில் ஆழ்ந்த அமைதியுடன் அடர்ந்திருக்கும் சப்தங்கள் ஒவ்வொன்றாக விடுதலைப் பெற்று, இசைக்கோர்வையில் இணையும். அடர்வான அந்த இசை மெல்ல மெல்லமாக காற்றில் கலந்து வியாபித்து நம்மை ஆட்கொண்டு தன்வசப்படுத்திவிடும்.ஒவ்வொரு இசையும் உயிரின் ஒவ்வொரு செல்லாகப் பயணித்து உணர்வின் நரம்புக்குள் அலைபாயும். அதற்குமேல் அதன் வசம் நம்மை ஒப்படைத்துவிட வேண்டியதுதான்.
இசையமைப்பாளரின் இசைக் குறிப்புக்கும், இசைக் கலைஞர்களை ஒருங்கிணைப்பவரின் கை அசைவிற்கும் கட்டுண்டு மெல்ல ஆரம்பித்து, வியாபித்து, ஓங்காரம் எடுத்து அடங்கும். நீண்ட நேரம், பல இசை அடுக்குகளுடன், எழுபதிற்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களால் இசைக்கப்படும், பல இசைக்கருவிகளின் பெரும் இசைக்கோர்வை. காற்று, தோல், நரம்பு வாத்தியங்களின் இசைத் தொகுப்பு என்றுகூட சொல்லலாம். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கருவிகளின் இசையை உள்வாங்கி, கட்டுக்கோப்புடன் பிரதிபலிக்கும் கச்சிதமான உயரம், அகலத்துடன் அமைக்கப்பட்ட அரங்கிலேயே சிம்பொனி அரங்கேற்றும், ஒலிப்பதிவு செய்யப்படும். அதன் அரங்கேற்றமே கேட்பது மட்டுமின்றி, கண்பதற்கே அலாதியான அனுபவம்தான்.
எளிமையாக சொல்ல வேண்டும் எனில்,சிம்பொனிஎன்பது மேற்கத்திய க்ளாசிக்கல் இசை மரபில், பல்வேறு இசைக் கருவிகள் ஒன்றாக இசைக்கப்படும் ஓர் ஒத்திசைத் தொகுப்பு எனலாம்.மத்தியக் காலத்தில் தோன்றிய சிம்பொனி எனும் செவ்வியல் மரபு இசைக் கோவையை இதுவரை 2,822 பேர் எழுதியிருக்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இந்தப் பட்டியலில் இந்தியாவில் இரண்டு பேரின் பெயர்கள் மட்டும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஒருவர் இளையராஜா (1993), மற்றொருவர் சிதார் மேதை ரவிசங்கர் (2010). இந்த இரண்டு பேரின் சிம்பொனிக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. இருவருமே இந்திய இசை மரபை அதில் கலந்து, தமது சிம்பொனிகளைப் படைத்திருந்தனர். அதாவது, தூய சிம்பொனி (pure symphony) இல்லை.
ஆசியாவைச் சேர்ந்தவர்கள் உருவாக்கிய சிம்பொனியில் அவர்களது நாட்டின் செவ்விசைத் தாக்கம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ரவிசங்கர் தமது சிம்பொனியில் சிதாரையும் தபேலாவையும் சேர்த்தார். தூய சிம்பொனியாகக் கருதப்படாததால் தமது முதல் சிம்பொனியை இளையராஜா வெளியிடவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இந்த விமர்சனம் வரக் கூடாது என்கிற கவனத்துடன் தனது ‘வேலியன்ட்’ (Valiant) சிம்பொனியைத் தூய சிம்பொனி என்று அழைக்கிறார் இளையராஜா. அந்த வகையில், தூய சிம்பொனியை அமைத்த முதல் இந்தியர் என்கிற வரலாற்றினை அவர் படைக்கிறார். இதை உரிய முறையில் கொண்டாட வேண்டியது அறிவும் அறமும் நிறைந்த சமூகத்தின் கடமை.மேதைகளை அவர்கள் வாழும் காலத்திலேயே கொண்டாடும் தகுதியை வளர்த்துக்கொள்ளாத சமூகமாக இருப்பதிலிருந்து விடுபடுவதற்கு இது ஒரு வாய்ப்பு. வீரம் மிக்கவர் என்ற பொருள் தரும் Valiant சிம்பொனியை வழங்கும் இளையராஜாவுக்கு என நகரை உருவாக்கி கெளரவப்படுத்தக் கூட தமிழக அரசு முன்னெடுப்பு செய்யலாம் .
நிலவளம் ரெங்கராஜன்