For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

அயோத்தியில் அதிகரிக்கும் பக்தர்களின் கூட்டத்தை நிர்வகிக்க திருப்பதி தேவஸ்தானத்திடம் ஆலோசனை!

04:47 PM Mar 06, 2024 IST | admin
அயோத்தியில் அதிகரிக்கும் பக்தர்களின் கூட்டத்தை நிர்வகிக்க திருப்பதி தேவஸ்தானத்திடம் ஆலோசனை
Advertisement

அயோத்தி ராம ஜென்ம பூமி கோயிலில் குழந்தை ராமரை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கடந்த இரண்டு மூன்று நாட்களாக பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. ராமர் கோயிலில் ஒரு மணி நேரம் தரிசனம் நிறுத்தப்படும் என அறிவித்த பிறகே கூட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும் அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகை புரிந்து வருகின்றனர்.இந்நிலையில் பக்தர்கள் கூட்டத்தை கையாளுவது குறித்து அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை , திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் ஆலோசனை கேட்டு வாங்கியுள்ளது.

Advertisement

வரலாற்று சிறப்புமிக்க அயோத்தி ராமர் கோயில் கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி திறக்கப்பட்டது. பிரதமர் மோடி ராமர் கோயிலில் பிரான பிரதிஷ்டை செய்து வைத்தார். 23 ஆம் தேதி முதல் பொது மக்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தி ராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.முதல் ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 70 லட்சம் பேர் குழந்தை ராமரை தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 25 கோடி ரூபாய் உண்டியல் வருமானம், 25 கிலோ தங்கம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் கோயிலுக்கு காணிக்கையாக கிடைத்துள்ளன. அயோத்தி ராமர் கோயிலுக்கு நாள்தோறும் வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

Advertisement

அயோத்தியில் குவிந்து வரும் பக்தர்களின் கூட்டத்தால் அறக்கட்டளை நிர்வாகம் திணறி வருகிறது. இதனிடையே அயோத்தி கோவில் நகரம் உலக யாத்திரை மையமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் வேகமாக மாறி வருவதால், மக்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என அயோத்தி கோவில் அறக்கட்டளைக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சரியான கூட்ட மேலாண்மை அமைப்பு நடைமுறையில் இல்லாவிட்டால், வரும் நாட்களில் இது மிகவும் கடினமாக இருக்கும் என்று உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் நாட்டில் நாள்தோறும் அதிக பக்தர்களை சந்திக்கும் கோவிலான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பதை விளக்குமாறு ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை கோரிக்கை விடுத்திருந்து. அவர்களின் அழைப்பின் பேரில் TTD யின் அதிகாரிகள் குழு கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி அயோத்திக்கு சென்றனர்.

திருமலையில் பக்தர்களின் வருகையை சீராக்க பார்கோடு போன்ற தொழில்நுட்பங்களை ஆரம்பத்தில் இருந்தே தேவஸ்தான நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும், கிட்டத்தட்ட 65,000 முதல் 70,000 பேர் திருமலைக்கு வருகை தருகின்றனர், வருடாந்திர பிரம்மோத்ஸவம் போன்ற சில நாட்களில் கூட்டம் சுமார் ஒரு லட்சத்தையும் தாண்டி வருகிறது. இருப்பினும் திருமலையில் பக்தர்கள் சிரமமின்றி பல மணி நேரம் ஆனாலும் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.திருமலை திருப்பதி தேவஸ்தான தூதுக்குழு அயோத்தி அறக்கட்டளை அதிகாரிகளுக்கு கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் வரிசை வரிகளை நிர்வகிப்பது குறித்து விளக்கம் அளித்துள்ளது. ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு திருப்திகரமான தரிசனம் வழங்க செய்ய வேண்டிய ஏற்பாடுகள் பக்தர்களுக்கு வழங்க வேண்டிய வசதிகள் குறித்தும் அந்தக் குழு அயோத்தி அறக்கட்டளைக்கு விரிவான அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீரத் க்ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஸ்ரா, TTDயின் பிரதிநிதிகள் அயோத்திக்கு வந்ததையும் அவர்கள் அறிக்கை அளித்ததையும் உறுப்படுத்தியுள்ளார். மேலும் ராம ஜென்மபூமியில் கூட்டத்தை நிர்வகிப்பதற்கான திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பொருத்தமான பரிந்துரைகளை நாங்கள் செயல்படுத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Tags :
Advertisement