For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி திட்டத்தின்கீழ் சேர்க்கை - ஏப்.22- முதல் விண்ணப்ப பதிவு!

07:47 AM Apr 20, 2024 IST | admin
தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி திட்டத்தின்கீழ் சேர்க்கை   ஏப் 22  முதல் விண்ணப்ப பதிவு
Advertisement

மிழ்நாடு முழுவதும் 37 ஆயிரத்துக்கும் மேல் அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதேபோல 8,500-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இங்கு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத இடங்கள் பொருளாதாரத்தில் நலிவடைந்தோரின் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும். அதாவது இலவச கட்டாய கல்வி உரிமை (ஆர்டிஇ) சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் உள்ள 25 சதவீத இடங்களில், வறுமை நிலையில் உள்ள குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். அந்த வகையில், தமிழகம் முழுவதும் உள்ள 8,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 1.10 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது 1-ம் வகுப்பில் சேர்பவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணமின்றி இலவசமாக படிக்கலாம். தமிழகத்தில் 2013-ல் அமலான இந்த திட்டத்தின்கீழ் இதுவரை 4.60 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற்று படித்து வருகின்றனர். இவர்களுக்கான கல்விக் கட்டணமாக தமிழக அரசு சார்பில் தனியார் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் சராசரியாக ரூ.370 கோடி வழங்கப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், வரும் (2024-25) கல்வி ஆண்டில் இலவச சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு ஏப்ரல் 22 தொடங்கி மே 20-ம் தேதி வரை நடக்க உள்ளது.

Advertisement

இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்த தகவலிதோ:

ஆர்டிஇ திட்டத்தின்கீழ் சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐசிஎஸ்இ, சிபிஎஸ்இ பள்ளிகளிலும் இலவச மாணவர் சேர்க்கை பெறமுடியும்.

வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் ஆகியோர் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் ஆதரவற்றவர், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர், 3-ம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளி, துப்புரவு தொழிலாளர் ஆகியோரது குழந்தைகளின் விண்ணப்பங்கள் குலுக்கல் நடத்தாமல் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். அதேபோல, நலிந்த பிரிவினரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் rte.tnschools.gov.in எனும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒரு பெற்றோர் அதிகபட்சம் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். வருமானம், இருப்பிடம், சாதி சான்றிதழ்களை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளியில் நிர்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால், வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதற்கான அறிவிப்புகள் சம்பந்தப்பட்ட பள்ளிகள், மாவட்ட, வட்டார கல்வி அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இணையதளம் மூலமாகவும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், வட்டார அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

சட்டப்படி சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர் பள்ளி கல்வித்துறையின் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அந்தந்தப் பள்ளிகளில் விண்ணப்பங்கள் ஏதேனும் பெறப்பட்டால் பெற்றோருக்கு ஒப்புகைச் சீட்டைத் தவறாது வழங்க வேண்டும்.

விண்ணப்பங்களைப் பள்ளியிலேயே இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம்.

இதுதவிர, முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களிலும் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் தகவல்களுக்கு: https://tnschools.gov.in/rte/

Tags :
Advertisement