For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இசைத்தமிழ் சித்த மருத்துவர் ஆபிரகாம் பண்டிதர்!

06:12 AM Aug 31, 2024 IST | admin
இசைத்தமிழ் சித்த மருத்துவர் ஆபிரகாம் பண்டிதர்
Advertisement

மிழ் கற்பிக்கும் ஆசிரியர், வானியல் ஆய்வாளர், சோதிடர், மிகச்சிறந்த சித்த மருத்துவர், மருந்து உற்பத்தி நிபுணர், புத்தகப் பதிப்பாளர், அச்சக உரிமையாளர், புகைப்படக் கலைஞர், சிறந்த பாடலாசிரியர், பன்மொழிப் புலவர், இசைக்கருவி வடிவமைப்பாளர், விருது பெறும் அளவிற்கான வேளாண்மை விஞ்ஞானி என்ற பல்துறைகளிலும் புதிய கண்டுபிடிப்புகளுடன் தனக்கேயான ஆழமான முத்திரைகளைப் பதித்திருந்தவர் ஆபிரகாம் பண்டிதர்.

Advertisement

1859-ம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டம் சாம்பவர்வடகரை என்ற சிற்றூரில் பிறந்த ஆபிரகாம் பண்டிதர், பங்களாச் சுரண்டையில் ஆரம்பக் கல்வி பயின்றார். பின்னர் ஆசிரியர் பயிற்சி முடித்து, தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ்நாட்டின் பாரம்பர்ய மருத்துவங்களில் ஒன்றான மூலிகை மருத்துவத்தில் பயிற்சி பெற்று, சிறந்த மருத்துவராக திகழ்ந்தார். 1879-ல் மூலிகை மலையான சுருளிமலைக்குச் சென்று, கருணானந்த முனிவர் என்பவரிடம் மூலிகைகளின் மருத்துவத் தன்மைகளைக் கற்றறிந்தார். சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கும் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ‘பண்டுவர்’ என்னும் பெயரே இவரின் இயற்பெயரான ஆபிரகாமுடன் இணைந்து பின்னாளில் ஆபிரகாம் பண்டிதர் ஆனது.திருமணத்துக்குப் பிறகு 1886-ல் தஞ்சாவூரில் குடியேறினார். பண்டிதரும் அவரது துணைவியார் ஞானவடிவு இருவரும் தஞ்சையில் உள்ள லேடி நேப்பியர் பெண்கள் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்கள். சில ஆண்டுகளில், ஆசிரியர் பணியை விடுத்து, தனக்குத் தெரிந்த மற்ற பணிகளை ஒவ்வொன்றாகச் செய்துபார்க்கத் தொடங்கிவிட்டார் பண்டிதர். முதலில் சித்த வைத்தியப் பணிகளில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக்கொண்டார். தான் தயாரித்த சித்த மருந்துகளைத் தஞ்சையிலிருந்து வெளிநாடுகளுக்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றுமதி செய்யும் அளவுக்கு அந்தத் தொழிலில் வளர்ந்திருந்தார்.

Advertisement

அடுத்து, தஞ்சை நகரின் மேற்குப் பகுதியில், தற்போது உள்ள மருத்துவக் கல்லூரிச் சாலையில் செம்பாறைகள் உள்ள 100 ஏக்கர் நிலத்தில் தோட்டம் அமைத்து, அதில் நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய பாசன வசதி ஏற்பாடு செய்து, அதன் மூலம் பெரும் விளைச்சலை ஏற்படுத்தியுள்ளார். பல்வேறு புதிய பயிர் ரகங்களைப் பரிசோதனைகள் மூலம் கண்டுபிடித்து பிரிட்டிஷ் அரசு வழங்கிய விவசாயத்துக்கான விருதுகளையும் தொடர்ச்சியாகச் சில ஆண்டுகள் பெற்றுவந்துள்ளார். இன்றளவு தஞ்சை மக்கள் மத்தியில் அது பண்டிதர் தோட்டம் என நினைவுகூரப்படுகிறது. மூலிகைகளைப் பயன்படுத்தி ‘கருணானந்தர் சஞ்சீவி மருந்துகள்’ என்ற பெயரில் பல்வேறு சித்த மருந்துகளைத் தயாரித்தார். முன்னரே சொன்னது போல் இவர் தயாரித்த கோரசனை மாத்திரை, இந்தியாவில் மட்டுமல்லாமல், இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரிட்டிஷ் அரசு இவரது சேவையைப் பாராட்டி ‘ராவ் பகதூர்’ பட்டம் வழங்கியது. தமிழ் மருத்துவத்தில் மட்டுமல்ல, தமிழிசையிலும் ஆபிரகாம் பண்டிதர் சிறந்து விளங்கினார். நாகஸ்வரம், ஆர்மோனியம், வீணை, பிடில் ஆகிய வாத்தியங்களை இசைப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். ‘பரதரின் நாட்டிய சாஸ்திரம்’, ‘சாரங்க தேவரின் சங்கீத ரத்னாகரம்’ உள்ளிட்ட பிற மொழி இசை நூல்களையும் சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள், கல்லாடம், தண்டியலங்காரம் முதலிய பண்டைத்தமிழ் நூல்களையும் பழந்தமிழ் இசை நூல்களையும் ஆழ்ந்து கற்றார்.

அதே போல் தனக்குத் தெரிந்த அச்சுத் தொழில் அறிவைக் கொண்டு தஞ்சையில் முதல் மின்இயந்திர அச்சுக்கூடத்தை (லாலி பிரஸ்) உருவாக்கியுள்ளார். அந்த அச்சுக்கூடத்தில்தான் சரியாக 101 ஆண்டுகளுக்கு முன்பாக 1917-ல் ‘கருணாமிருதசாகரம் முதல் புத்தகம்’ நூல் முழுவதுமாக அச்சிடப்பட்டது. 1892-ல் முதன்முதலாக சிலப்பதிகாரம் உ.வே.சா.வின் முன் முயற்சியால் அச்சு இயந்திரத்தில் பதிப்பித்து வெளியிடப்பட்டது. அதன் பிறகே சிலப்பதிகாரம் நூலை முழுவதும் படிக்கும் வாய்ப்பு பரவலானது. தமிழறிஞர்களால் சிலம்பின் இலக்கியச் சிறப்பை அறிந்துகொள்ள முடிந்தது.

முன்னரே சொன்னது போல் ஆபிரகாம் பண்டிதருக்கோ தமிழும் தெரியும், இசையும் தெரியும். கூடவே, சோதிடக் கணக்கு முறையும் தெரியும். ஆகவே, அதில் உள்ள தமிழ்ச் செய்யுளோடு, அதிலிருந்த இசைக் கூறுகளையும் கண்டுணர முடிந்தது. ஆய்ச்சியர் குரவையில் ஏழு பெண்கள் ஆடிப் பாடும் காட்சி ஒன்று உண்டு. ஆபிரகாம் பண்டிதர் தனக்கிருந்த சோதிட அறிவைக்கொண்டு, ஏழு பெண்களை இசையின் ஏழு ஸ்வரங்களாகவும், அந்தப் பெண்கள் ஆயப்பாலையில் ஆடும் வடிவத்தை 12 ராசி வட்டமாகவும், அவ்வட்டத்தை 12 ஸ்வரஸ்தானங்களோடு இணைத்தும் சிலப்பதிகார இசை சூத்திரங்களின் முடிச்சுகளை ஒவ்வொன்றாக எளிதில் அவிழ்த்து தமிழுலகுக்குக் காட்டினார். அதுவரை 22 சுருதிகள்தான் தென்னிந்திய இசையில் இருந்தது என்கிற கூற்றை மறுத்து, 12 ஸ்வரஸ்தானங்கள் 24 சுருதிகளாகவே வர முடியும் என்றும் 48, 96 என்று நுண்சுருதிகளாகவும் வளரும் ஆற்றல் கொண்டது இசைத் தமிழ் என்றும் நிறுவினார்.

இவ்வளவு சிக்கல் மிகுந்த விளக்கத்தைப் புரிந்துகொள்ள அது புத்தகமாக வர வேண்டும். பண்டிதருக்கு இருந்த அச்சுத்தொழில் அறிவாலே அது சாத்தியமானது. இவ்வளவையும் செய்யப் பணம் வேண்டுமே. அதற்காக, தனது மருத்துவத் தொழிலிலிருந்து ஈட்டிய மொத்த வருமானத்தையும் இசை ஆய்வுக்காகச் செலவுசெய்தார். தனக்குத் தெரிந்த பல்துறை அறிவையும் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தியே, அறுபட்டுக் கிடந்த இசைத் தமிழின் தொடரைப் பண்டிதரால் மீண்டும் மீட்டுருவாக்கம் செய்ய முடிந்தது. அவற்றைக் கருணாமிருதசாகரம் என்னும் பெருநூலாகவும் தமிழ் உலகுக்குத் தர முடிந்தது.

மேலும் பழந்தமிழ் இசை வடிவமே இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் இசைக்கப்படுகிறது என்பதை நிரூபிப்பதற்காக, முதன்முதலாக அகில இந்திய இசை மாநாட்டை தஞ்சாவூரில் நடத்தினார். 1912-ம் ஆண்டு ‘சங்கீத வித்யா மகாஜன சங்கத்தை’ நிறுவினார். சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசை குறித்த செய்திகள் இன்றைய கர்னாடக இசையில் மூல இலக்கணங்களாக இருப்பதைப் பண்டிதர் சுட்டிக் காட்டினார். இதன்மூலம் தமிழிசையே இன்று தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் பல வடிவங்களில் வழங்கி வரும் இசை என்று நிரூபித்தார். ஐரோப்பிய இசைமேதை பேராசிரியர் தஞ்சை ஏ.ஜி.பிச்சைமுத்துவிடம் மேற்கத்திய இசை பயின்றார்.

தனது பல்லாண்டு கால தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை ‘கருணாமிர்த சாகரத் திரட்டு’ என்ற இசை நூலாகத் தொகுத்து, 1917-ல் வெளியிட்டார். தமிழிசை வரலாறு, தமிழ் மருத்துவம், இசையாளர்கள் குறித்த ஒரு கலைக்களஞ்சியமாக இது போற்றப்படுகிறது. சுமார் 1,400 பக்கங்கள் கொண்ட இந்நூல் இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கான மூலநூலாக அமைந்துள்ளது. இசை, மருத்துவம், இலக்கியம் தவிர, புதுப்புது வகைப் பயிர்களை வேளாண்மை செய்வதிலும், காற்றாலைகளை நிறுவி நீர்ப்பாசனம் செய்வதிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டார். 1911-ல் மின்சாரத்தில் இயங்கும் அச்சுக்கூடம் ஒன்றை நிறுவினார். தமிழிசைக் கலைஞர், படைப்பாளி, சித்த மருத்துவர் எனப் பல துறைகளிலும் சகலகலா வல்லவராக திகழ்ந்த ஆபிரகாம் பண்டிதர் 1919-ம் ஆண்டு இதே ஆகஸ்ட் 31இல் தமது 60-வது வயதில் மறைந்தார்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement