For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

'முரட்டு முதலை வேட்டைக்காரன்’ ஸ்டீவ் இர்வின்!

05:56 AM Sep 04, 2024 IST | admin
 முரட்டு முதலை வேட்டைக்காரன்’ ஸ்டீவ் இர்வின்
Advertisement

ன் வாழ் நாள் முழுசும் பல்லி, உடும்பு, பாம்பு, முதலை போன்ற உயிரினங்களின் மேல் தீராக் காதல் கொண்டு, அவற்றின் காவலனாக விளங்கியவர் ஸ்டீவ் இர்வின். அவரை ` முரட்டு முதலை வேட்டைக்காரன்’ (The Crocodile Hunter) அப்படீன்னுத்தான் செல்லமாக அழைச்சாங்க.

Advertisement

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு அருகில் எஸ்ஸென்டென் (Essendon) என்ற இடத்தில் 1962-ம் ஆண்டு பிறந்தார். 1970-ல் அவர் குடும்பம், குயின்ஸ்லேண்டுக்கு அருகிலிருக்கும் பியர்வா (Beerwah) என்ற ஊருக்கு இடம்பெயர்ந்துச்சு. அங்கே `பியர்வா ரெப்டைல் அண்ட் ஃபானா பார்க்’ (Beerwah Reptile and Fauna Park) என்ற ஒரு உயிரியல் பூங்கா ஆரம்பிச்சு நடத்தினார்கள் ஸ்டீவின் அப்பாவும் அம்மாவும். அந்த உயிரியல் பூங்காவில் வாழ்ந்து , வளர்ந்ததாலோ என்னவோ, ஸ்டீவுக்கு பல்லி, முதலை, பாம்புகள் மேலெல்லாம் ரொம்ப லவ். அவற்றின் உணர்வுகளை எளிதில் புரிந்துகொள்ளும் விசித்திரமான அறிவு அவருக்கு இருந்தது. ஸ்டீவ், விஷமுள்ள பாம்பு ஒன்றை முதன்முதலாகப் பிடித்தபோது அவருக்கு ஆறு வயசுதான்.

Advertisement

பொதுவா பள்ளிக்குச் செல்லும் மாணவனுக்கு வேறு என்ன வேலை இருக்கப் போகிறது? வீட்டிலிருந்து கிளம்பினால் ஸ்கூல். ஆனால், ஸ்டீவ் பல நாள்கள் தாமதமாகப் பள்ளிக்குச் சென்று கொண்டு இருந்தார். விஷயம் அவரின் அம்மா காதுக்குப் போனது. அன்றைக்கு அம்மா விசாரித்தபோது, ஸ்டீவ் சொன்னார்… “நடு ரோடும்மா. ஓணான் ஒண்ணு ரோட்டுல கால்ல அடிபட்டுக் கிடந்துச்சு. அதை அப்படியே விட்டுட்டுப் போக முடியுமா? அதான்… அதை எடுத்துட்டுப் போயி, பத்திரமா நிறைய மரங்கள் இருக்குற இடத்துல விட்டுட்டு வந்தேன்…’’

இதே ஸ்டீவுக்கு ஒன்பது வயசான போது அப்பாவோடு அவர் பார்த்த வேலை என்ன தெரியுமா? ஆற்றில் படகுகள் மீது மோதி தள்ளி, தொந்தரவு தரும் முதலைகளைப் பிடிக்கும் வேலை. வளர வளர முதலை போன்ற உயிரினங்களின் மீதான காதல் அவருக்கு அதிகமானது. முதலைகளை மீட்டுப் பராமரிக்கும் அமைப்பில் தன்னார்வலரானார். அடர்ந்த காடுகளுக்குள் சென்று மாதக் கணக்கில் பழியாகக் கிடந்தார். மற்றவர்களின் கைக்குச் சிக்கும் நிலையில் இருந்த பல முதலைகளை மீட்டார். அவற்றில் வழிதவறி வந்த பல முதலைகளை அவற்றின் இருப்பிடத்தில் பத்திரமாகச் சேர்த்தார்; சிலவற்றை தன்னுடைய குடும்பம் நடத்தும் உயிரியல் பூங்காவுக்கு எடுத்துப் போய் காப்பாற்றினார். அப்படி அவர் மீட்ட முதலைகளின் எண்ணிக்கை 100-க்கும் மேலிருக்கும்.

இர்வினின் ஒய்ஃப் டெர்ரியும் சுற்றுச்சூழல் ஆர்வலர்தான். கடந்த 1991ம் ஆண்டு, அமெரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற டெர்ரி, இர்வினின் வனவிலங்குகள் சரணாலயம் பற்றி கேள்விப் பட்டிருந்தார். இர்வினை கண்டதும் டெர்ரிக்கு காதல் பற்றிக் கொண்டது. ‘இர்வினை பார்த்ததுமே எனக்கு டார்ஜான்தான் நினைவுக்கு வந்தார்’ என டெர்ரி கூறுவார். காதல் மலர்ந்த நான்கே மாசங்களில் மேரேஜில் முடிந்ஞ்சுது. ஹனிமூனுக்கு போன இடத்தில் கூட இந்த தம்பதி முதலைகளைத் தேடினாங்க. காதல் வாழ்க்கைக்கு அடையாளமாக இரு குழந்தைகள். மூத்தவள் பிந்தி. 1998 ம் ஆண்டு பிறந்தாள். இப்போது 18 வயதான பிந்தியும் தந்தையைப் போலவே முதலை சாகசக்காரி . கடந்த 2003 ம் ஆண்டு இளையவன் பாப் ராபர்ட் பிறந்தான்.

இர்வினின் சாகச நிகழ்ச்சிகளை பார்ப்பவர்களுக்கு, ‘இப்படியெல்லாம் ஒரு மனிதன் விலங்குகளுடன் பயமற்று உலவ முடியுமா’ என்ற கேள்வி நிச்சயம் எழும் . 1990ம் ஆண்டு முதல் டிஸ்கவரி உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான இர்வினின் டாக்குமெண்டரிகள் பார்ப்போரை பதைக்க வைத்து விட்டது. அனகோண்டா, மலைப்பாம்பு எல்லாம் குழந்தை போலத்தான் இர்வினின் கையில் இருக்கும்.

கடந்த 1996ம் ஆண்டு, இர்வினின் ‘தி குரோக்கடைல் ஹன்டர்’ நிகழ்ச்சி முதன் முறையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை பார்த்து ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கோடிக்கணக்கான ரசிகர்கள் இர்வினுக்கு உருவானார்கள். சுமார் 50 கோடி மக்களை ‘குரோக்கடைல் ஹன்டர் ‘ நிகழ்ச்சி சென்று சேர்ந்தது. இதுக்கிடையிலே ராபர்ட் ஒரு மாத குழந்தையாக இருந்த போது, அவனை கையில் வைத்துக் கொண்டு, மற்றொரு கையால் முர்ரே என்ற 6 அடி நீள முதலைக்கு ஸ்டீவ் இர்வின் உணவு வழங்கிய நிகழ்ச்சி, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட, மக்கள் பதைப் பதைத்துப் போனார்கள். இர்வினுக்கு கண்டனங்கள் குவிந்தன. இர்வின் மன்னிப்பு கேட்ட பின்னரே பிரச்னையின் தீவிரம் அடங்கியது. இப்போது,ராபர்ட்டும் தந்தை போலவே முதலை வீரானாகி விட்டான். ரத்தத்தில் ஊறிய விஷயம் அல்லவா… மாற்றி விட முடியுமா?

வாழ்நாள் முழுவதும் சுற்றுச் சூழலுக்காகவும் அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களைக் காப்பாற்றவும் இர்வின் உழைத்தார். ‘நான் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே இறந்து விட வேண்டும்.. ‘என ஒரு ஆசிரியர் நினைப்பார். ‘நடித்துக் கொண்டிருக்கும் போதே எனது உயிர் போய் விட வேண்டும் ‘ என ஒரு நடிகர் சொல்வார். ஆனால், தான் நேசித்த துறையில் விரும்பிய பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே மரணித்து விட்டார் ஸ்டீவ்.கடந்த 2006 ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி, ஆஸ்திரேலிய கடற்பகுதியில் ‘ஆபத்தான கடல் விலங்கினங்கள்’ பற்றிய ஒரு விளக்கப் படம் எடுக்கும்பொழுது, கொட்டும் திருக்கைமீன் (stingray) வால் இதயத்தில் நேரடியாக குத்தியதால் மரணத்தை தழுவினார்.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement