For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

மறுபடியும் எண்ணுங்க - விஜய்காந்த் ஒய்ப் ஆவேசம்!

02:33 PM Jun 06, 2024 IST | admin
மறுபடியும் எண்ணுங்க   விஜய்காந்த் ஒய்ப் ஆவேசம்
Advertisement

“பலத்த நம்பிக்கையுடன் இருந்த விருதுநகரில் விஜயபிரபாகரன் தோற்க வில்லை. தோற்கடிக்கப்பட்டுள்ளார். வீழ்ச்சியடையவில்லை, வீழ்த்தப்பட்டிருக்கிறார். இதுதான் உண்மை.” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ் சாட்டியுள்ளார். மேலும், விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்த நிலையில் பிரேமலதாவின் பொய் குற்றச்சட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது விஜய பிரபாகரனும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் அங்குதான் இருந்தார்கள் என்றும் வாக்கு எண்ணிக்கை இரண்டு மணி நேரம் நிறுத்தப்பட்டது என்றால் அங்கேயே கேட்டிருக்க வேண்டியதுதானே? தோல்விக்கு பின் அங்கிருந்து அமைதியாக கிளம்பிச் சென்று விட்டு இப்போது புகார் கூறுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

Advertisement

ஒருவழியாக முடிந்த பார்லிமெண்ட் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க சார்பில் விஜய பிரபாகரன் போட்டியிட்டார். ஜுன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. விருதுநகரில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டார். இந்நிலையில், விஜய பிரபாகரன் மற்றும் மாணிக்கம் தாகூர் இடையே கடும் போட்டி இருந்தது. வாக்கு எண்ணிக்கையில் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தனர். கடும் இழுபறி இருந்தது. இறுதியில் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். விஜய பிரபாகரன்- 3,71,092 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.இந்நிலையில் இன்று (ஜுன் 6) சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் சந்தித்துப் பேசினார்.

Advertisement

அப்போது தன் மகன் தோல்வி குறித்து அவர் அளித்த பேட்டியில், “விருதுநகரில் விஜயபிரபாகரன் தோற்கவில்லை. தோற்கடிக்கப்பட்டுள்ளார். வீழ்ச்சியடையவில்லை, வீழ்த்தப்பட்டிருக்கிறார். இதுதான் உண்மை. கேப்டன் இல்லாத சோகம் இன்னும் எங்களை விட்டு நீங்கவில்லை. கேப்டன் நினைவில் இருந்து மீளவில்லை என்பதால் விஜயபிரபாகரன் தேர்தலில் நிற்கவில்லை என்று தான் முதலில் கூறினார். நிர்வாகிகளின் அன்புக்கட்டளையை ஏற்றே விருதுநகரில் போட்டியிட்டார். தேர்தலில் கடைசிவரை அவர் தனது முயற்சியை கைவிடவில்லை.

ஆனால் இந்த தேர்தலில் விஜய பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டுள்ளார் என்று ஏன் கூறுகிறேன் என்றால், சூழ்ச்சியால் அவர் வீழ்த்தப்பட்டுள்ளார். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு எண்ணும் மையத்தில் சொல்லப்பட்ட அறிவிப்புகளுக்கும், ஊடகங்களில் சொல்லப்பட்ட அறிவிப்புகளுக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருந்தது. வாக்கு எண்ணும் மையத்தில் பல முறைகேடுகள் நடந்ததாக அங்கிருக்கும் அதிகாரிகளே சொல்கிறார்கள்.

அங்கு கலெக்டர், மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இரண்டு மணிநேரம் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துகிறார். வாக்கு எண்ணிக்கை ஏன் நிறுத்தப்பட்டது?. “பல்வேறு தரப்பிலும் இருந்து எனக்கு நிர்பந்தங்கள் அதிகமாக இருக்கிறது. என்னால் சமாளிக்க முடியவில்லை. போனை சுவிட்ச் ஆப் செய்யப்போகிறேன்” என்று கலெக்டர் வெளியே வந்து கூறுகிறார். அப்படியானால், ஆட்சியரை செயல்படவிடாமல் தடுத்தது யார்?. தேர்தல் முடிவு அறிவிக்கும் முன்னதாகவே, முதல்வர் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றது என்கிறார். முதல்வர் அறிவிக்கும் முன்னர் நான்கு தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்துகொண்டு தான் இருந்தது. எதனை வைத்து முன்கூட்டியே வென்றுவிட்டோம் எனக் கூறினார் என்பதை முதல்வர் ஸ்டாலின் விளக்க வேண்டும்.ஏனென்றால், விருதுநகர் தொகுதியில் நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் தான் மாணிக்கம் தாக்கூர் அங்கு வெற்றிச் சான்றிதழை வாங்கினார். அப்படி இருக்கும்போது முதல்வர் ஸ்டாலின் முன்கூட்டியே வெற்றிபெற்றதாக அறிவித்தது எப்படி?. இத்தனைக்கும் கேடி ராஜேந்திர பாலாஜி தவறு நடப்பதாக அங்கேயே முறையிட்டார். தேமுதிக, அதிமுக நிர்வாகிகள் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என கோரினர். ஆனால், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மிரட்டும் தொனியில் போலீஸ் படையை இறக்கினர். இதனால் தான் விஜயபிரபாகாரன் தோல்வியில் சூழ்ச்சி செய்யப்பட்டுள்ளது. விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளோம்." என்று தெரிவித்துள்ளார்.

இதை அடுத்து விருதுநகர் தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் இதுகுறித்து , ''விஜயபிரபாகரன் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோது அங்குதான் இருந்தார். அப்படி இருக்கும் பொழுது இப்படி பேச்சுக்களை பேசி தேவையில்லாமல் ஒரு தவறான செய்தியை மக்களிடம் கொண்டு செல்ல நினைக்கும் பிரேமலதாவின் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. வாக்கு எண்ணிக்கையின் போது எல்லோரும் இருந்தார்கள். அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் மக்கள் அளித்த தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் மக்களை குழப்புவதும் பொய் பேசுவதும் பிரேமலதாவிற்கு கைவந்த கலை. விஜயகாந்தின் அரசியலையும் முடித்து வைத்தவர் இவர்தான். இப்படிப்பட்ட தவறான பொய்யை பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. என்னைப் பொறுத்த மட்டில் தேர்தல் அதிகாரிகள் மிகக் கடுமையாக உழைத்து நேர்மையான வாக்கு எண்ணிக்கையை நள்ளிரவு ஒரு மணிவரை நடத்தி முடித்தார்கள். அப்படிப்பட்டவர்களை சென்னையில் அமர்ந்து கொண்டு இப்படி பேசுவது கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணையம் இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை நிராகரிப்பார்கள்'' என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement